Sunday, March 24, 2013

'பயாலஜி' படுத்தும்பாடு_1


 உண்மையில் 'மகள் புராணம்' என்றே தலைப்பு இருந்திருக்க வேண்டும்.சரி தலைப்பையாவது விட்டு வைக்கலாமே என்ற நல்ல எண்ணத்தில் மாற்றிக்கொண்டேன்.தலைப்பும் நல்லாத்தானே இருக்கு எதுகை,மோனையுடன்!

 ஒரு புகைப்படம் மட்டும் பயன்படுத்திக்கொள்ளலாம் என ஒருவரிடமிருந்து அனுமதி கிடைத்ததால் அந்தசாக்கில் இந்தப் படத்தை நுழைத்துவிட்டேன். தலைப்புக்கும், படத்திற்கும் சம்மந்தம் இருக்குமா!இந்தப் பதிவில் இல்லையென்றாலும் அடுத்த பதிவுடன் கண்டிப்பாக ஒத்துப்போகும் என்றே நினைக்கிறேன்.

இந்தப் பதிவில் உள்ளவை சிலரது வீடுகளில் நடந்து முடிந்திருக்கும்.சிலரது வீடுகளில் அரங்கேறிக்கொண்டிருக்கும்,மீதமுள்ளவர்கள் நாளை எதிர்கொள்ளலாம்.ஒரு அம்மாவாக நான் ரசித்ததை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவே இந்தப் பதிவு.

நம்ம ஊர் மாதிரி இல்லாமல்,இங்குள்ள பள்ளிகளில் அறிவியல்,வரலாறு பாடங்கள் எல்லா வகுப்புகளிலும் இல்லாமல் ஒரு வருடம் இருக்கும், அடுத்த வருடம் இல்லாமல் போகும்,பிறகு மீண்டும் அடுத்த வருடம் வரும்.

ஆனால் வகுப்பில் அதைப்பற்றி படித்துக்கொண்டும்,களப்பயணம் / Field trip மேற்கொண்டும்,project செய்துகொண்டும்தான் இருப்பார்கள். இடைநிலைப் பள்ளி முடியும்வரை இப்படித்தான்.

அப்படி ஒரு வருட‌ம் மகளுக்கு அறிவியலில் 'உயிரியல்' பாடம் மட்டும் வந்தது.அதில்  'Cell / செல்'லைப்பற்றி படித்தனர்.

என்னிடம் ஒரு பழக்கம்,அதாவது வீட்டுக்காரரும்,மகளும் வீட்டிற்கு வருவதற்குள் மிக்ஸி,கிரைண்டர் வேலைகளை முடித்துவிடுவேன். எக்காரணம் கொண்டும் அவற்றை ஓடவிட்டு அவர்களுக்குத் தொந்தரவு கொடுக்க‌ மாட்டேன்.

அன்றும் அப்படித்தான்,இட்லி மாவு அரைத்து,வழிக்கவும் மகளிடமிருந்து 'அம்மா,ஸ்கூல் முடிஞ்சிருச்சு வந்துகொண்டிருக்கிறேன்"என ஃபோன் வரவும் சரியாக இருந்தது.

 எப்போதும்போல் கதவைத் திறக்காமல் தாழ்ப்பாளை மட்டும் திறந்து விட்டுவிட்டு இட்லி மாவில் உப்பு போட்டு கரைத்துக்கொண்டிருந்தேன். எங்கம்மா சொல்லுவாங்க 'அரைப்பது ஒரு பங்குன்னா கரைத்து வைப்பதில்தான் பக்குவம் இருக்குன்னு'.அதனால் கரையோகரைன்னு கரைச்சுட்டிருந்தேன்.

கதவைத் திறந்து உள்ளே வந்தவள் நான் மாவில் கையை விட்டுக்கொன்டிருப்பதைப் பார்த்ததும் ஷாக்காகிவிட்டாள்.

'Ammaaa,don't do that,don't do that' என்று சொல்லிக்கொண்டே  ஓடிவந்தவள் 'ஏம்மா மாவுல கை விட்டுட்ருக்க' என்றாள்.

நான் 'மாவு கரைச்சிட்டிருக்கேன்,இப்படி செய்தால்தான் இட்லி நன்றாக வரும்' என்றேன்.

'இவ்வளவு நாளும் இப்படியா செய்யற' என்றாள்.

'ஆமாம்,ஏன் என்ன ஆச்சு' என்றேன்.

'நீ மாவு அரைப்பது தெரியும்,ஆனால் கையால் கரைச்சு வைக்கிறது தெரியாது' என்றாள்.

ஒருவேளை அந்த நாளில் நான் என் அம்மாவிடம் கெஞ்சிய‌துபோல் 'நான் கரைச்சு வக்கட்டுமா' என்பாலோ என நினைத்து 'தெரிஞ்சா என்ன பண்ணியிருப்ப' என்றேன்.

'உடம்புல இருக்கற இறந்த செல்களையே நாம குளிக்கும்போது தேய்த்து எடுத்திடறோம்,நீ இப்படி கையை விட்டு செஞ்சினா,எல்லா இறந்த செல்களும் மாவில்தானே போய் சேரும்.இனிமே மாவு கரைக்கும்போது  க்ளௌஸ் பொட்டுக்கோம்மா,ப்ளீஈஈஸ்ஸ்' என்றாள்.

அந்த வாரம் சனிக்கிழமை கடைக்குப் போகும்போது அதிசயமாக அவளும் உடன் வந்தாள். கடைக்குப் போனதும் நேராக சமையல் பாத்திரங்கள் இருக்குமிடத்திற்கு சென்று நீளமான இரண்டு மரக்கரண்டிகளை எடுத்து என்னிடம் கொடுத்தாள்.

'நான் ஏற்கனவே இவற்றை செட்டுசெட்டாக வாங்கி வைத்திருக்கிறேன், அதுவே போதும்' என்றேன்.

'அம்மா மாவு கரைக்க க்ளௌஸ் வாங்கிக்கொடுத்தா அதுல இருக்கற கெமிக்கலைவிட கையாள கரைக்கிறது பரவாயில்லன்னு சொல்லுவ, அதனாலதான் இது' என்றாள்.

நானும் அந்தக் கரண்டிகளை வாங்கி வைத்துக்கொண்ட‌துடன் சரி.

முன்பெல்லாம் "அம்மா,மாவு கரைக்க அந்தக் கரண்டிகளைத்தானே பயன்படுத்தற?" என அடிக்கடி கேட்டு உறுதி செய்துகொள்வாள்.

எத்தனை நாளைக்குத்தான் ஏமாற்றுவது.ஒருநாள் உண்மையைப் போட்டு உடைத்துவிட்டேன்."நான் இப்படி கையாள கரைச்சு வக்கிறதாலதான் இட்லி & தோசை சூப்பரா இருக்கு"என்று.

இப்போதெல்லாம் ஒன்றும் சொல்வதில்லை,புரிந்திருக்கும் என்றே நினைக்கிறேன்.

ஒரு சமயம் 'அம்மா எனக்கு பச்சை ஓட்ஸை மாவாக்கிக் கொடும்மா 'என்றாள்.

'ஏன்?' என்றதற்கு விஷயத்தைச் சொன்னாள்.

நானும் வறுத்துப் பொடித்தது ஒரு பாட்டில்,பச்சையாகப் பொடித்தது ஒரு பாட்டில் என கொட்டி வைப்பேன்.வறுத்துப் பொடித்ததை சமைத்து முடிக்குமுன் பச்சையாகப் பொடித்தது தீர்ந்துபோயிருக்கும்.

இறந்த செல்களை எடுக்கிறேன் பேர்வழின்னு முகம்,கைகால்களில் பூசிக் கொள்வதால்தான்.ஏதேதோ கெமிக்கலை எல்லாம் போடாமல் ஓட்ஸோடு முடிந்ததே என சந்தோஷப்பட்டுக்கொள்வேன்.

இவர்கள் ஏட்டில் படித்ததோடு நிறுத்திக்கொள்ளாமல் செயல்படுத்துவதைப் பார்க்கும்போது சந்தோஷமே. ______ __ ______'மகள் புராணம்' தொடரும்.

9 comments:

  1. :) :) GOOD JOB! :) :)

    This is how you get chances to write! Enjoyed the post...waiting for the next post! :D

    ReplyDelete
    Replies
    1. உற்சாகத்தைத் தூண்டும் பின்னூட்டத்திற்கு நன்றி மகி.சீக்கிரமே சொந்தக் (போரடிக்கிற‌) கதையை விட்டு வெளியே வர முயற்சிக்கிறேன்.

      Delete
  2. கைமணம் அவர்களுக்கு தெரியாதோ...?

    ReplyDelete
    Replies
    1. தெரியும்,இருந்தாலும் சாப்பிடும் பொருளுக்குள் கைவிடுவதை அவங்களால நம்ப முடியல. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றிங்க.

      Delete
  3. மிகவும் அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.
    நம் குசந்தைகள் செய்யும் சிலவிஷயங்கள் இப்படித்தான்.
    உங்கள் மகளின் புராணத்தை படிக்க காத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நமக்குப் பழகிப்போன ஒன்றை அவர்கள் வித்தியாசமாகப் பார்க்கிறார்கள். புராணத்தை சீக்கிரமே போட்டுவிடுகிறேன்.வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றிங்க.

      Delete
  4. இதைப் படித்தவுடன் எனக்கு இன்னொரு விஷயம் நினைவுக்கு வந்தது. கதாசிரியர் உஷா சுப்ரமணியம் தெரிந்திக்கும் என்று நினைக்கிறேன். ஒருமுறை அமெரிக்காவில் அவரை அவரது இல்லத்தில் ஓர் அமெரிக்கர் பார்க்க வந்தாராம். அவர் வந்த சமயம் இவர் பாதி சாப்பிட்டுக் கொண்டிருந்தாராம். தற்செயலாக இவர் கையால் சாப்பிடுவதைப் பார்த்து அமெரிக்கர் ரொம்பவும் ஆச்சரியப்பட்டு கேட்டதற்கு உஷா சொன்ன பதில்: We want to feel the food while eating'

    கைமணம் என்று திண்டுக்கல் அண்ணாச்சி சொன்னது ரொம்ப சரி.

    என் பேரன் நான் குழாயிலிருந்து நேரடியாக நீரை சமையலுக்கு பயன்படுத்துவதைப் பார்த்துவிட்டு நீ ஏன் dirty water - இல் சமையல் செய்கிறாய் என்று கேட்டான்! அவர்கள் வீட்டில் R.O. வசதி செய்துகொண்டிருக்கிறார்கள்.

    போகப்போக புரிந்து கொள்வார்கள்!

    ReplyDelete
    Replies
    1. கைமணம் புரியுது,அது உள்ளங்கையைத் தாண்டிப் போகும்போதுதான் யோசிக்க வைத்திருக்கிறது.

      "நீ ஏன் dirty water - இல் சமையல் செய்கிறாய்"____நல்லா மாட்டினீங்களா!ஹா ஹா.

      உஷாசுப்ரமணியம்_நீங்க சொல்லியபிறகுதான் அவர் நினைவே வருகிறது. முன்பு அவருடைய எழுத்துக்களை நிறைய படித்திருக்கிறேன்.

      Delete
  5. hahaha nice....i really enjoyed reading this biology paduthum padu..ella veetlayum nadanthurukum nu nenaikuren...amma kai vittu kalakurathe aruvarupa irukum...konja naal kalichu therium amma voda micham than nama endru..then ipo kuda yarachum thumunu evolo bacterias vanthu nama mela patrukumo nu :D

    ReplyDelete