Friday, June 14, 2013

சார் / மேடம்... தந்தி !!


 
 படம் உதவி__கூகுள்

கடந்த நான்கைந்து நாட்களாக செய்தித் தாள்களில் அடிபடும் ஒரு செய்தி பாலாவுக்கு மலரும் நினைவுகளைக் கொண்டு வந்ததென்னவோ உண்மைதான். இதில் ஆச்சரியப்பட ஒன்றுமே இல்லை.

ஆமாம், ஒரு நாளா,இரண்டு நாளா? சுமார் ஒன்றரை வருடங்கள் அவளுடன் பின்னிப் பிணைந்த ஒரு விஷயமாயிற்றே! அவ்வளவு எளிதில் அதை மறக்க முடியுமா?

பாலா திருமண விடுப்பு முடிந்து வேலைக்கு வந்த முதல்நாளே உடன் வேலை செய்யும் தோழிகள் சூழ்ந்துகொண்டு அவளை நலம் விசாரித்தனர்.

விசாரிக்காமல் என்ன செய்வார்கள்? இவளுக்கு சொந்த ஊரில் என்றால் அவருக்கு பக்கத்து மாநிலத்தில் வேலை.

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே அந்த ஊர் தபால்காரர் / போஸ்ட் மேன் அவர்களைக் கடந்து அலுவலக அறையை நோக்கி நடந்தார். போன வேகத்திலேயே இவர்களை நோக்கி வேகமாக‌ வந்தார், அலுவலக ஊழியர்கள் நான்கைந்து பேர் புடைசூழ.

உடன் வந்தவர்களின் முகத்தில் ஒருவித‌ பதட்டம் இருப்பதை உணர முடிந்தது.

'பாலா யாருங்க? என்றார் போஸ்ட்மேன்.

'ஏன்? நான் தான்தாங்க‌, என்ன விஷயம் '  என்றாள் பாலா.

"உங்களுக்கொரு தந்தி வந்திருக்கு, இதுல கொஞ்சம் கையெழுத்து போடுங்க", என்றார்.

கையெழுத்தைப் போட்டுவிட்டு காகிதத்தை வாங்கியவளிடம் "சீக்கிரம், பிரித்துப் படி" என அனைவரும் ஒரே குரலில் பதட்டமாக சொல்லவும், இப்போது இவர்கள் பதறிய பதறலில் பாலாவுக்கும் லேஸாக உதறல் எடுத்தது.

இதுவரை நமக்கு தந்தி என்பதே வந்ததில்லை.இதென்ன புதுசா இருக்கு. யாருக்காவது சீரியஸ் என்றால்தானே தந்தி வரும் என்பார்கள். அப்படின்னா, நேற்றிரவு ஊருக்குப் போன வீட்டுக்காரருக்கு ஏதும் பிரச்சினையா?, குழம்பினாள்.

பிறகு ஒருவாறாக சமாளித்துக்கொண்டு படித்துவிட்டு,நிம்மதிப் பெருமூச்சு விட்டுவிட்டு, சுற்றி இருந்தவர்களைப் பார்த்து புன்னகைத்தாள்.

வீட்டுக்காரர் நலமுடன் ஊர் போய் சேர்ந்ததைத்தான் தந்தியில் எழுதியிருப்பதாகக் கூறவும், அனைவருக்கும் ஒருபக்கம் சந்தோஷம் என்றாலும் கொஞ்சம் வருத்தமும் இருக்கத்தான் செய்தது.

'உன் வீட்டுக்காரர் என்ன இப்படியா செய்வார்? கொஞ்ச நேரத்தில் நாங்களெல்லாம் ஆடிப் போயிட்டோமே' என தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

தோழிகளுள் ஒருத்தி "உன் வீட்டுக்காரரிடம் நிறைய பணம் இருக்குன்னு நினைக்கிறேன். இல்லையென்றால் இப்படியெல்லாம் செலவு செய்வாரா?" என்றாள்.

அன்று வேலைக்கு வராதவர்கள்கூட‌ அடுத்த நாள் வந்ததும் விஷயத்தைக் கேள்விப்பட்டு இவளை விசாரித்து, புன்னகைத்தது இன்றும் நினைவில் உள்ளது.

தந்தி வந்த இரண்டொரு நாளில் வீட்டுக்காரரிடம் இருந்து ஒரு கடிதமும் வந்தது. கடிதம் எழுதி, அனுப்பி ... எப்பொழுது போய் சேருவது? கடிதம் வந்துசேர குறைந்தது இரண்டுமூன்று நாட்களாவது ஆகும் என்பதால் விஷயத்தை உடனே தெரியப்படுத்த தந்தியைப் பயன்படுத்தியதாகவும் எழுதியிருந்தார்.
 
இது ஒரு நாளுடன் முடியவில்லை. பாலாவின் கணவர் அந்த மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு வேலை மாறுதல் வாங்கிக்கொண்டு வரும்வரை  ஒவ்வொரு பதினைந்து நாள் அல்லது மாதமொரு முறை இது அரங்கேறியது.

அதன்பிறகு போஸ்ட்மேன் தந்தி வந்திருக்கிறது என்று வந்தாலே யாரும் பதட்டமடையாமல், புன்னகைத்தவாறே, பாலாவை நோக்கி கையைக் காட்டுவது வடிக்கையாகிவிட்டது.

'அதானே, சீரியஸானதற்கு மட்டும்தான் தந்தியைப் பயன்படுத்த வேண்டுமா என்ன? முக்கியமான,சந்தோஷமான செய்திக்கும் இதைப் பயன்படுத்தினால் என்ன தப்பு", என இவளும் நினைத்தாள்.

பாலாவுக்கு மலரும் நினைவுகளைக் கொண்டு வந்த அந்த‌ செய்தி இதுதாங்க:

"160 ஆண்டு பழமை வாய்ந்த தந்தி சேவைக்கு ஜூலை 15ல் மூடுவிழா"

அப்படிப்பட்ட தந்தித் துறைக்கு போதுமான வருமானமின்றி மூடுவிழா என்றால் அவளுக்குக் கொஞ்சம் வலிக்கத்தானே செய்யும்!!

6 comments:

  1. எனக்கும் மன வருத்தம் உண்டு...

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா, உங்களுக்குமா! பகிர்வுக்கு நன்றிங்க.

      Delete
  2. தந்தி சேவை நிறுத்தப்படுவது பற்றிய அறிவிப்பை நானும் பார்த்தேன். ஆனால் உங்க அளவுக்கு எனக்கு மனவருத்தம் என சொல்ல முடியவில்லை..ஏனென்றால், இதுவரை எங்க வீட்டிலோ சொந்தபந்தத்திலோ யாருக்கும் தந்தி வந்தே இல்லை! [எல்லாரும் ஒரு 50கி.மீ. சுற்றளவிலேயே வாழ்ந்தால் தந்தியாவது இன்னொண்ணாவது!! ஹிஹிஹி...] சினிமாக்களில் பார்த்திருக்கிறேன் நீங்க எழுதியிருக்கும் அனுபவங்களை எல்லாம்!

    என்னதான் இருந்தாலும் இதுமாதிரி நிறுத்தங்கள் வரும்போது பெருமூச்சு வருவதைத் தடுக்க முடியாதுதான்!

    ReplyDelete
  3. நமக்கு பயன்படாமல் போனாலும் அதை நிறுத்தும்போது உச் கொட்டதான் வைக்கிறது. தொலைபேசி,அலைபேசி,ஈமெயில் எல்லாம் புழக்கத்தில் இருந்தும் தேவையின்மையால் அவற்றைப் பயன்படுத்தாதபோது இந்த தந்திதான் கைகொடுத்தது.

    எனக்குத் தெரிந்து எங்க வீட்டிற்கும் தந்தி வந்து நான் பார்த்ததில்லை.இன்னும் சொல்லப் போனால் முக்கிய உறவுகள் எல்லாம் உங்கள் சுற்று வட்டத்தைவிட குறைந்த அளவிலேதான்.

    "சினிமாக்களில் பார்த்திருக்கிறேன் நீங்க எழுதியிருக்கும் அனுபவங்களை எல்லாம்!"_____ இதைப் படித்த பிறகுதான் ஞாபகமே வருகிறது.தந்தி இல்லாமல் ஒரு பழைய படத்தையும் பார்க்க முடியாது இல்ல!

    ReplyDelete
  4. வருத்தமான விஷயம் தான்! படங்களில் மட்டுமே தந்தி வந்து, எல்லோரும் பதறுவதைப் பார்த்திருக்கிறேன். சிகப்புக் கலரில் செய்தி மட்டும் வெள்ளை தாளில் எழுதி ஒட்டப்பட்டிருக்கும். இந்தத் தந்தியில்.ஒரு விரல் அகலமே இருக்கும் இந்த வெள்ளைத் தாள். தந்தி அதுவும் சிகப்புக் கலரில் வந்தால் அது நல்ல செய்தியாகவே இருந்தாலும் கூட - உங்கள் நாயகி பாலாவுக்கு வந்த மாதிரி - எல்லோரும் பதட்டமடைவதால், நல்ல செய்தியாக இருந்தால் வேறு கலர் தாளில் அனுப்பலாம் என்று கூட நடுவில் வேறு கலர் தாளில் நல்ல செய்திகள் தந்திகளாக அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தன. கலர் நினைவில் இல்லை.

    ReplyDelete
  5. 'சிகப்புக் கலரில் செய்தி மட்டும் வெள்ளை தாளில்' ____இது கொஞ்சம் பயமா இருக்கே.நீங்கள் சொல்லும் தந்தியைப் பற்றிய விஷயங்கள் சுவாரசியமாக உள்ளன.பாலாவுக்கு வந்த தந்திகூட‌ வெள்ளை நிற தாள் என்றுதான் நினைக்கிறேன்.பகிர்வுக்கு நன்றிங்க.

    ReplyDelete