Tuesday, December 24, 2013

பொங்கல் ஸ்பெஷல் _____ போகிப் பண்டிகை

சென்ற பதிவில் முக்கியமான ஒன்றை சொல்லாமல் விட்டுவிட்டேன். அது மார்கழி முதல் தேதியிலேயே ஊரில் உள்ள எல்லாக் கோயில்களிலும் ஒலிபெருக்கி வசதி செய்யப்பட்டு, அது மூலைக்குமூலை அலறிக் கொண்டிருக்கும். அதிகாலை நான்கு மணிக்கு பக்திப் பாடல்களுடன் ஆரம்பித்து, அது அப்படியே சினிமா பாடல்களில் போய் முடியும்.

அதேபோல் மாலை நான்கு மணிக்கு மீண்டும் பாடல்கள் ஒலிபரப்பப்படும். அரையாண்டுக்கு படிப்பதா ? அல்லது பாடல்களைக் கேட்பதா? இந்தப் பாடல்களால் எவ்வளவுதான் தொந்திரவு என்றாலும் அதைக் கேட்பதிலும் ஒரு சுகம் இருந்தது என்பதுதான் உண்மை.

ஆற்றுத் திருவிழா முடியும்வரை ஒலிபெருக்கியும் இருக்கும். சில சமயங்களில் பணம் கொடுக்க தாமதமானால் மேலும் ஒன்றிரண்டு நாட்கள் பாடல்களைக் கேட்டு மகிழலாம்.

மார்கழி மாதத்தின் கடைசி இரண்டு நாட்களில் மக்கள் கொஞ்சம் அதிகமான சுறுசுறுப்பாக இருப்பார்கள். பொங்கலுக்குத் தேவையான புது மண்பானைகள் வாங்குவது, பொங்கலுக்கான சாமான்களை பக்கத்திலுள்ள கொஞ்சம் பெரிய ஊருக்குப்போய் வாங்கி வருவது, இதுவரை வீட்டை சுத்தம் செய்ய ஆரம்பிக்காதவர்கள் அல்லது முடிக்காதவர்கள் எல்லோரும் கபகபவென வேலையை முடிப்பது என வேலைகள் ஜோராக நடக்கும்..

எங்கள் வீட்டில் மார்கழியின் கடைசி இரண்டு நாட்களில் யாராவது ஓரிருவர் ஒட்டடை அடித்து விடுவார்கள். நாங்களும் கூட இருந்து உதவிகள் செய்வோம்.

போகிக்கு முதல்நாள் எங்கள் அப்பா பொங்கலுக்குத் தேவையான எல்லா சாமான்களையும் வாங்கிக்கொண்டு வந்துவிடுவார். அதில் முக்கியமானவை கிழங்குகளுடன் கூடிய மஞ்சள் செடிகள், பூசணிக்கீற்று, நிறைய பூக்கள், முக்கியமாக மஞ்சள் சாமந்திப் பூக்கள், தெரிந்த கடைகளிலிருந்து நிறைய சில்லறைகள் போன்றவை

கொல்லியில் இருந்து தேங்காய்கள் பறித்துவந்து மூட்டைகளில் இருக்கும். அப்போது யாரும் காசு கொடுத்து தேங்காயை வாங்கிச் சென்றதாக நினைவில்லை. "அக்கா ஒரு தேங்கா குடுக்கா, மாமா ஒரு தேங்கா குடு மாமா" இப்படித்தான் கேட்டு எடுத்துச் செல்வார்கள்.

போகியன்று காலையிலேயே கதவுகள், சன்னல்கள், தரை எல்லாம் கழுவிவிட்டு காயவிடுவோம். அப்பா வஞ்சனையில்லாமல் ஏகப்பட்ட கதவுகள், சன்னல்கள் எல்லாம் வைத்து நம்மை வேலை வாங்குகிறார் என பேசிக்கொள்வோம். அன்று தெருவாசல், படிக்கட்டுகளில் மட்டும் மாக்கோலம் போடுவோம்.

எங்கள் ஊரில் உள்ள கோவில் பூசாரிகள் வீட்டுக்கு வந்து புது பச்சரிசி, தேங்காய், வாழைப்பழம், மாலை, பூ , பூஜை செய்ய பணம் எல்லாம் வாங்கிக்கொண்டு செல்வார்கள். அன்று மாலையே பூஜையை முடித்துவிட்டு ப்ரசாதம், விபூதி, குங்குமம், பூ, பழம் எல்லாம் எடுத்துவந்து கொடுத்துவிட்டு போவார்கள். அவற்றை எங்கம்மா வீட்டிலுள்ள எல்லோருக்கும் கொஞ்சம் கொஞ்சமாக கொடுப்பார்கள்.

வீடு முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு, கழுவிவிடப் பட்டிருப்பதால் அன்றிரவு தூங்க இதமாக இருக்கும்.

அன்றிரவு தூங்கப் போகுமுன் வெள்ளமணக் கட்டியில் கொஞ்சம் தண்ணீர் விட்டு, ஊற வைத்துவிட்டு தூங்கச் செல்லுவோம்.

என்னைக் கோலம் போட அழைத்துசெல்வாறே ஒரு அக்கா, அவர் வீட்டில் நிறைய பூசணிக் கொடிகள் இருக்கும். எங்கள் பங்கிற்கு நானும் என் தம்பியும் அவரிடம் கேட்டு நிறைய பூசணி மொட்டுகளைப் பறித்துவந்து குடத்திலுள்ள தண்ணீரில் போட்டு வைத்து விடுவோம்.

அதேபோல் அடுத்த நாள் அதிகாலையில் பொங்கல் பானை, கரும்பு இவை எல்லாம் வருகிற மாதிரியான கோலம் ஒன்றை தயார் செய்துகொண்டுதான் படுப்போம்.

பழைய பொருள்களை எல்லாம் கொளுத்தி புகைய விடுவதெல்லாம் கிடையாது.

போகியன்று எல்லா வேலைகளும் முடிந்து, எல்லோரது வீடுகளும், ஏதாவதொரு வகையில், பார்க்க,  மிகமிக‌ அழகாக இருக்கும்..........(தொடரும்)

6 comments:

  1. உங்கள ஊர் பொங்கல் களைக் கட்ட ஆரம்பித்து விட்டதே! போகியே இவ்வவளவு தடபுடலா? சென்னையில் இப்பொழுது எல்லாம் அந்த ஒலிப் பெருக்கி சத்தத்தை நிறைய கேட்க முடிவதில்லை. அழகாக சொல்கிறீர்கள். வாழ்த்துக்கள்.....தொடருங்கள்........

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க, பொங்கல் பற்றிய நினைவுகள் மனதளவில் களைகட்ட ஆரம்பித்துவிட்டது. எங்க ஊரிலும் இப்போ ஒலிபெருக்கி பிரச்சினை இருக்கான்னு தெரியல்ல.

      பாராட்டுகளுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றிங்க.

      Delete
  2. சிறப்பாக சொல்லியுள்ளீர்கள்... இதை படித்ததிலிருந்து எங்க ஊர் நினைவுகளை எழுதும் ஆவல் வந்துவிட்டது....:))

    ReplyDelete
    Replies
    1. எழுதுங்க எழுதுங்க, உங்க ஊர் பொங்கல் எப்படி இருக்குன்னு நாங்களும் சுவைக்க வேண்டாமா !! பாராட்டுக்கு நன்றிங்க.

      Delete
  3. போகி - நினைவுகள் சுகம்......

    நெய்வேலியில் போகி இத்தனை சிறப்பாக கொண்டாடிய நினைவில்லை!

    ReplyDelete
    Replies
    1. நீங்க டவுன்ஷிப்ல இருந்திருப்பீங்க. அங்கு ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு மாநிலத்தவரா இருந்திருப்பாங்க. எங்கள் ஊர் கிராமம் என்பதால் பொங்கல்தான் சிறப்பாக இருக்கும். ஆனாலும் இப்போது மாறிப்போச்சுன்னு நினைக்கிறேன்.

      Delete