Friday, February 21, 2014

பிறந்த மண்ணின் பாசம் !!

 
படம் உதவி_கூகுள்

ஒவ்வொரு கல்வியாண்டின் இறுதியிலும் 'ஊருக்கு போவதா வேண்டாமா' என்ற கேள்வி வந்துவந்து போகும். 'போவதில்லை' என்றே முடிவெடுத்திருந்தாலும் ஒரு நப்பாசையில் அந்தக் கேள்வி மட்டும் தொக்கி நிற்கும்.

வழக்கம்போல இந்த வருடமும், ஆனால் கொஞ்சம் முன்னதாகவே அந்தக் கேள்வி வந்துவிட்டது.

"அம்மா,  இந்த வருஷம் நாம ஊருக்குப் போறோமா?" என்று எப்போதும்போல் மகள்தான் ஆரம்பித்து வைத்தாள்.

"தெரியலையே" என்றேன்.

"அப்படி ஊருக்குப் போறதுன்னா சிங்கப்பூர் டூ சென்னைக்கு நாம ஏற்கனவே போனோமே ஒரு ஃப்ளைட், அதுல போற மாதிரி டிக்கெட் புக் பண்ணுங்க‌" என்றாள் சிரித்துக்கொண்டே !

அந்த பயணத்தை நினைவுபடுத்தியதும் எனக்கும்கூட‌ சிரிப்புதான்.   ஏன்?  ஏன்?  ஏன்?

நாங்கள்(நான் & மகள்)  இந்தியாவுக்கு போகும்போது எப்போதும் சிங்கப்பூர் வழியாகத்தான் போவோம். அப்படி போகும்போது சிங்கப்பூரில் எட்டு மணி நேரம் வெயிட் பண்றமாதிரி வரும். ரொம்பவே கடுப்பா இருக்கும்.

அதனால் இறங்கியதும் calling card வாங்கி சுந்த‌ருக்கும், ஊருக்கும் ஃபோன் செய்து சிங்கப்பூர் வந்துவிட்டதை தெரிவிப்பது, குளிப்பது, அங்குள்ள காவேரி ரெஸ்டாரண்டில் தோசை சாப்பிடுவது, அங்கேயே 'பிடிக்காது' எனத் தெரிந்தும் ஒரு ஆர்வத்தில் 'டீ'யை வாங்கி ஒரு வாய் குடித்துப் பார்த்துவிட்டு கொட்டிவிடுவது, ஒரு பத்துபதினைந்து டைகர்பாம் வாங்குவது, இங்கு அவளுடன் படிக்கும் பிள்ளைகளுக்கு குட்டிகுட்டியா க்யூட்டா டாய்ஸ் வாங்கி தனியாக பேக் பண்ணி வைத்துக்கொள்வது, மீண்டும் டயர்டாகி பர்கர் & ஃப்ரென்ச் ஃப்ரைஸ் வாங்கி சாப்பிடுவது, எதையுமே வாங்காமல் பல கடைகளுக்கும் விஜயம் செய்வது, மீண்டும் ஒருமுறை எல்லோருக்கும் ஃபோன் செய்வது என இதையெல்லாம் எவ்வளவுதான்     ஸ்  லோ  மோ  ஷ  னி  ல் செய்தாலும் இரண்டுமூன்று மணி நேரங்கள் மீதமிருக்கும். என்ன செய்வது எனத் தெரியாமல் முழிப்போம்.

கடைசியில் ஒரு வழியாக விமானத்தில் ஏறுவதுதான் தெரியும், அதன்பிறகு இறங்கும்வரை என்ன நடக்குதுன்னே தெரியாது. அசதியில் நான் தூங்கிவிடுவேன். ஏதோ சலசலப்பு இருப்பது கனவுல வர்ற‌ மாதிரி தெரியும்.

ஆனல் அதிசயமாக‌ சென்ற முறை(2011) ஊருக்கு போனபோது சிங்கப்பூரில் இறங்கிய ஒரு மணி நேரத்திலேயே எங்களுக்கு ஃப்ளைட். அதுவும் நண்பக‌லில். காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.  அதனால் மேற்சொன்ன வேலைகளில் 'ஃபோன் பேசியது, டைகர்பாம் வாங்கியது' இதை மட்டும் முடித்துக்கொண்டு ஓடிப்போய் ஏறியாச்சு.

ஃப்ளைட்ல இருக்கோமா அல்லது எங்க‌ ஊரு டவுன்பஸ்ல இருக்கோமா என்றே தெரியவில்லை. ஒரே பேச்சு சத்தம். பயணிகள் பையை வைப்பதும் திரும்ப எடுப்பதுமாக நெரிசல்வேறு. கூச்சலும் இரைச்சலுமாக .......... இதுவரை விமானத்தில் பார்த்திராத காட்சிகளாக இருந்தன.

விமானத்தை எடுக்கப்போவதாக அறிவிப்பு வந்தும்கூட‌ யாரும் உட்காருகிற மாதிரி தெரியவில்லை. மின்னணு கருவிகளை அணைக்கச்சொல்லியும், seat belt போடச் சொல்லியும் யாரும் காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை.

இப்போது நடக்க ஆரம்பித்தவர்கள்தான் விமானப் பணிப்பெண்கள், விமானம் சென்னையில் இறங்கும்வரை அவர்களை உண்டுஇல்லை என்று சுறுசுறுப்பாகவே வைத்திருந்தனர் நம் மக்கள்.

ட்ரே முழுவதும் பிஸ்கட்டுகளை அடுக்கிஅடுக்கி எடுத்து வந்து கொடுத்துக் கொண்டே இருந்தனர். அதுபோலவே ட்ரிங்ஸும். 'இது வேண்டும் அது வேண்டும்'  என அவர்களை சுழலவிட்டனர்.

'மாப்ள, மச்சான்' என உறவுசொல்லி அழைப்பதும், கூட்டமாக‌ நின்று கத்தி பேசுவதும், சிரிப்பதுமாக ஒரு வழி பண்ணிவிட்டனர்.

சாப்பாடு வந்ததும் சாப்பிட்டுவிட்டு மீண்டும் முன்புபோலவே அப்பெண்களை வேலை வாங்கினர். ஒரு கட்டத்தில் பிஸ்கட்டுகள் காலியாகிவிட்டதாக அவர்கள் கூறிவிட்டனர். ஒருவேளை அப்படிச் சொல்லி தப்பித்திருக்கலாமோ !

எனக்கு இக்காட்சிகளைப் பார்த்தபோது  'அவ்வளவு பசியுடனா வந்திருப்பார்கள்? ' எனத் தோன்றியது. இவ்வளவு ட்ரிங்க்ஸ் சாப்பிட்டுவிட்டு ரிஸீவ் பண்ண வருகிறவர்களை எப்படி சந்திப்பது என சங்கடமாக‌ இருந்தது.

ஃப்ளைட் லேண்ட் ஆகும்போதும்கூட அப்படியே எழுந்து நடப்பதும், மேலே வைத்த பையை எடுப்பதும், ஃபோன் செய்ய முற்படுவதுமாக இருந்தனர். அந்த நேரத்தில்கூட விமானப் பணிப்பெண்களை உட்கார விடவில்லை.

ஒருவேளை நிர்வாகம் அப்பணிப்பெண்களுக்கு தண்டனை கொடுத்து தன் கோபத்தை தீர்த்துக்கொண்டிருக்குமோ என்றுகூடத் தோன்றியது.

ஓட்டப் பந்தயமும், உயரத்திலிருந்து கீழே குதிக்கும் பந்தயமும் வைக்காததுதான் குறை. இவற்றையெல்லாம் குட்டிப்பிள்ளைகள் செய்தால் ரசிக்கலாம், அதையே பெரியவர்கள் செய்யும்போது ......... ?

என் மகளோ விழுந்துவிழுந்து சிரித்தாள். எனக்கும் சிரிப்புதான்.

இந்த பயணத்தை நாங்க ரெண்டுபேரும் அடிக்கடி நினைவுபடுத்தி சிரித்து மகிழ்வோம். "அடுத்த தடவ போறதுன்னா அதுலதான் போகணும்ம்மா" என்பாள்.

மேலே சொன்ன இந்த விமானத்தில் போகவேண்டும் என மகள் ஆசைப்பட்டதின் காரணம்,  "உண்மையான முகத்துடனும், வெகுளித்தனமான மனதுடனும் உள்ள நம் மக்களுடன் பயணம் செய்வதே பிடிக்கிறதாம்".

இதுதான் பிறந்த மண்ணின் பாசமோ !!

12 comments:

  1. சிரிப்பான பயணம் ரசிக்க வைத்தது... பிறந்த மண்ணின் பாசத்தை மறக்க முடியுமா...?

    ReplyDelete
    Replies
    1. பிறந்த மண்ணின் மீதான பாசம் பிள்ளைகளுக்கும் இருக்கும்போது பெற்றோருக்கு அளவிட முடியாத மகிழ்ச்சிதான். பதிவை ரசித்துப் படித்து பின்னூட்டமளித்ததற்கு நன்றிங்க தனபாலன்.

      Delete
  2. நீங்கள் சொல்வது உண்மை தான் சித்ரா. ஒவ்வொரு முறையும் அமேரிக்கா வரும் போது, மகள் குடும்பத்தை பார்க்கப் போகிறோம், பேரன், பேத்திகளுடன் விளையாடப் போகிறோம் என்கிற ஆவல் மிகுதியாக இருக்கும். போய் ஒரே வாரம் தான் . மனம் எப்பொழுதடா இந்தியா திரும்புவோம் என்று ஏங்க ஆரம்பிக்கும். நாங்களும் இரண்டு விமானத்தில் தான் வந்தாக வேண்டும். இரண்டாவது விமானத்தில் ஏரிய உடனே எல்லோரும் முன்னாள் இருக்கும் டிவியில் சினிமா பார்த்தால் நான் மட்டும் விமானம் பறக்கும் மேப்பைப் பார்ஹ்த்துக் கொண்டே வருவேன். இந்தியா மேலே பறக்கும் போது மனம் துள்ள ஆரம்பிக்கும். பிறந்த நாடு பாசம் தான் .
    உங்கள் பிறந்த நாட்டுப் பாசம் படித்தேன். மகிழ்ச்சியாக இருந்தது. சுவாரஸ்யம் குறையாமல் பயனித்திருக்கிரீர்கள். பதிவில்.

    ReplyDelete
    Replies
    1. ஊருக்கு போகவேண்டும், பார்க்க வேண்டும் என ஆசைதான். ஆனால் சேர்ந்தாற்போல் அங்கும் இருக்க முடியாது. பயணத்தில் இருந்தால் மட்டுமே அமைதியாக‌ இருப்பாள் மகள், உடனே 'அம்மா போரடிக்குது' என்பாள். போய்ட்டு மீண்டும் சான் ஃப்ரான்சிஸ்கோ வரும்போதுதான் எனக்கு நிம்மதியாகும்.

      இரண்டு மாதங்களுக்குப் பிறகு வீட்டுக்கு வந்து என் கையால் டீ போட்டு குடிச்சுட்டு ....... ஆஹானு இருக்கும் !

      Delete
  3. மகிழ்ச்சி நிரம்பியதாய் இருக்கும் பயணங்களே வாழ்நாளெல்லாம் நினைவில் நிற்கின்றன. அந்த வகையில் உங்கள் சிங்கப்பூர் வழிப்பயணம் அமைந்திருந்தது மகிழ்ச்சி. உங்கள் மகள் எதிர்பார்த்தபடியே இம்முறையும் பயணம் அமைய வாழ்த்துக்கள் மேடம்

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க, மறக்க முடியாத பயணங்களில் இதுதான் முதலாவதாக உள்ளது. உங்கள் வாழ்த்துக்களுக்கும் நன்றிங்க.

      Delete
  4. இந்த வருடம் பிறந்த ஊர் பயணம் உண்டா? இந்தியா வருவதாக இருந்தால் சொல்லுங்கள், சந்திக்கலாம்.
    நான் இதுவரை இந்தியாவை விட்டு எங்கேயும் போனதில்லை. அதனாலோ என்னவோ 'சொர்க்கமே என்றாலும்' என்ற பாட்டு என் பேவரிட்!

    ReplyDelete
    Replies
    1. இன்னும் முடிவெடுக்கவில்லை, வருவதாக இருந்தல் சொல்கிறேனே, சந்திக்கலாம். சந்திப்பதில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சிங்க.

      அம்மா வீடு, புகுந்தவீடு கதைதான் எங்களுடையதெல்லாம்.

      Delete
  5. பிறந்த மண்ணின் பாசம்..... நல்ல விஷயம்.

    சுவையான அனுபவங்கள் பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துப் பகிர்விற்கும் நன்றிங்க வெங்கட்.

      Delete
  6. ஹஹா :D அருமையாக எழுதி உள்ளீர்கள். நமது ஆட்கள் எங்கேயும் எப்பொழுதும் அப்படி தானோ? என் நண்பர்களில் சிலர் இலவசம் என்பதால் ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு, வைக்கபடும் இனிப்பு சீரகத்தை "இதுக்கும் சேர்த்து தான காசு கொடுத்தோம்னு" சொல்லி கை தொடசிக்க வச்ச பேப்பர்லயே எல்லாத்தயும் கொட்டி மடிச்சு ரூம்க்கு கொண்டு வருவாங்க. செம காமெடி யா இருக்கும். நான் செய்ய மாட்டேனாலும் ரசிப்பேன் இதை போல் காமெடி பண்னினாள். :D

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா இதுவும் நல்ல நகைச்சுவைதான்.

      நம்பிட்டேன்.

      Delete