ராஜ கோபுரம்
கோயிலுக்குள் காமிரா அனுமதி இல்லை என்பதால் வீட்டிலேயே வைத்துவிட்டு சென்றுவிட்டேன். எவ்வளவு முயன்றும் அலைபேசியில் முழுதாக எடுக்க முடியவில்லை.
ராஜ கோபுரம் _ பக்கவாட்டிலிருந்து
இனி கோயிலின் உள்ளே செல்வோமே. நேரமின்மையால், அவசரத்தில் எடுத்ததால் படங்கள் வரிசையின்றி இருக்கும்.
இங்கே நின்று மலையைப் பார்த்து ஒரு பெரிய கும்பிடு
கம்பீரமான மலை
கோயிலின் உள்ளே போகும்போதே பார்த்தோம், யானை வெளிநாட்டவர் உட்பட எல்லோருக்கும் ஆசீர்வாதம் கொடுப்பதை. நடையை சாத்திவிடும் நேரம் என்பதல் படமெடுக்க நேரமில்லை. அப்பனை தரிசித்துவிட்டு வெளியே வந்தபோது ஓய்வெடுக்க(!) அழைத்து சென்றதை மட்டுமே என்னால் படமாக்க முடிந்தது. இவ்வளவு பெரிய யானையைக் கட்டிவைத்து , பணியவைத்து, ...... !
கம்பிவேலி போடப்பட்டுள்ள தீர்த்தக் குளம்
1989 ல் இருந்து திருவண்ணாமலைக்குப் போவதும், தீபத்தின்போது மலையை சுற்றுவதும் என 2000 வரை சென்றுவந்தேன். 99 தீபத்தின்போது அண்ணாமலையாரிடம், "அடுத்த வருட தீபத்திற்கெல்லாம் நான் அமெரிக்காவில் இருக்க வேண்டும்" என்ற கட்டளையுடன்தான் மலையைச் சுற்றினேன்.
அதன் காரணம் முதல் நாள்தான் வீட்டுக்காரர் அமெரிக்கா புறப்பட்டார். ஏர்போர்ட்டிலிருந்து நேராக சகோதரி வீட்டிற்கு திருவண்ணாமலைதான் போனோம். சோகத்தில் இருந்த நான் ப்ரீஃப்கேஸை ஆட்டோவிலேயே விட்டுவிட்டு இறங்கிவிட்டேன்.
"இப்போ என்ன செய்வது?" என சொல்லிக்கொண்டிருக்கும்போதே ஆட்டோக்காரர் திரும்பிவந்து கொடுத்துவிட்டு போனார். மறக்க முடியாத நபர்.
அடுத்த வருட(2000) தீபத்தின்போது ? ..... மீண்டும் அங்கேயேதான் மலையைச் சுற்றி வந்தேன். கொஞ்சமல்ல, இந்தமுறை நிறைய 'கர்ர்ர்ர்ர்'ருடன்.
அதன் பிறகு இங்கே வந்தாச்சு. அதிலிருந்து ஊருக்குப் போனால் 'பௌர்ணமிக்காவது மலையைச் சுற்ற வேண்டும்' என நினைப்பதோடு சரி. மாட வீதியை மட்டும் வலம் வந்து வீட்டுக்கு வந்துவிடுவேன்.
இந்த வருடம் அதுவுமில்லை . அடித்துப் பிடித்து கோயிலுக்கு ஓடினேன். மதியம் 11:50 க்குத்தான் போகும் வாய்ப்பு. நடையை சாத்திவிடக்கூடும் என்பதால் நேராக மூலஸ்தானம், அம்மன் சந்நிதி. உடனே வீட்டுக்குக் கிளம்ப வேண்டும் என்பதால் என்னால் பொறுமையாகக்கூட படங்கள் எடுக்க முடியவில்லை. கோயில் தரிசனம் கிடைத்த சந்தோஷத்தில் வீடு வந்து சேர்ந்தேன்.
முன்பு ஒருமுறை வீட்டுக் குட்டீஸ்களுடன் மலையில் 2 கிமீ தூரம்வரை ஏறி அங்கிருந்த ஒரு குளத்தைப் பார்த்துவிட்டு திரும்பிவிட்டோம்.
மலையைச் சுற்றும்போது அடிஅண்ணாமலையார் கோயிலுக்கும் சென்று வருவோம். வழி நெடுகிலும் உள்ள அஷ்ட லிங்கங்களையும் தரிசிப்போம்.
அவ்வாறு வரும்போது ஒரு இடத்தில் குறுகலான சிறு வழியில் நுழைந்து (விருப்பமுள்ளவர்கள் மட்டும்) வர வேண்டும். அப்போது நம்முடைய கவனம் முழுவதும் எப்படியாவது வெளியில் வந்துவிட வேண்டும் என்பதாகத்தான் இருக்கும். அதனால் பக்கவாட்டில், சுவரில் உள்ள சிவனின் தரிசனத்தைப் பெற மறந்துவிடுவோம்.
கடைசியாக உள்ள ஈசான லிங்கம் வரும்போது எல்லோருமே சோர்ந்து விடுவோம். அதுதான் நமது ஆயுளின் கடைசிக் காலமாம். அப்படி சொல்வதாலோ என்னவோ எனக்கு அதன்பிறகு நடக்கவே சிரமமாக இருக்கும். எங்கும் மயானமாக இருக்கும்.
அடிக்கடி கோயிலின் உள்ளே ஒரு இடம் விடாமல் சுற்றியிருக்கிறேன். தரிசனம் முடித்து அங்கேயே நீண்ட நேரம் உட்கார்ந்திருப்போம்.
விசேஷ தினங்களில் திருக்கோயிலூரிலிருந்து திருவண்ணாமலைக்கு மாலை நேரத்தில் பேருந்தில் வர வேண்டும். அப்போதுதான் மின்விளக்குகளின் அலங்கரிப்பால் கோயில் கோபுரங்கள் ஜொலிப்பதைப் பார்க்கலாம். ஏறக்குறைய இரண்டு வருடங்கள் அவ்வாறு வந்திருக்கிறேன்.
வாய்ப்பு கிடைத்தால் ஒருமுறையேனும் திருவண்ணாமலைக்குச் சென்று அண்ணாமலையாரை தரிசித்து வருவோமே !
மலரும் நினைவால் பதிவு நீண்டுவிட்டது. அனைவருக்கும் இனிய கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்கள் !
சொல்ல மறந்திட்டேனே, கோயிலில் 'பாதாள லிங்கம்' உள்ளது. சில படிக்கட்டுகள் இறங்கி கீழே செல்ல வேண்டும். உடன் யாராவது வந்தால் தைரியமாகப் போவேன்.