Monday, December 8, 2014

ஒருவேளை தேடியிருப்பாங்களோ !!

சுஜா த‌ன் மனதிற்குள், 'அம்மாவுடன் போக‌லாமா ? அல்லது வேண்டாமா ?'  என்ற கேள்வியுடனேயேக் கிளம்பினாள். அம்மாவுடன் கிளம்பிப் போனால் புதிதாக முளைத்திருக்கும் உறவுகளைப் பார்க்கலாம், அவ்வளவே. பெரிய‌ பரிச்சயமெல்லாம் இல்லை.

ஆனால் வீட்டிலேயே இருந்தால் தெருவை ஒரு சுற்று சுற்றி வந்துவிடலாம். தோழிகளுடன் ஓடிப்பிடித்து விளையாடி, எல்லோரது வீட்டிற்குள்ளும் புகுந்து, ஒளிந்து விளையாடலாம். மகிழ்ச்சிக்கு அளவேயிருக்காது. விடுமுறையாச்சே !

அப்பா சொல்லிவிட்டார், "அம்மாவுடன் போய்ட்டு வாம்மா" என்று.

'போகப் பிடிக்கவில்லை' என்று சொல்லலாம்தான். சொன்னாலும் அப்பா ஒன்றும் சொல்லப் போவதில்லை. ஆனாலும் அப்பாவின் வார்த்தைக்கு மரியாதை வேண்டுமே.

அதனால்,  "இன்று மாலையே திரும்பிவிட வேண்டும்" என்ற வேண்டுகோளுடன்தான், அரை மனதுடனேயே அம்மாவுடன் கிளம்பிப் போனாள்.

உறவு வீட்டில் தன்னுடன் விளையாட‌ தன் வயதொத்த பிள்ளைகள் யாரையும் காணோம். சுஜாவின் அக அழகு முகத்தில் தெரிந்ததால், அவ்வீட்டிலிருந்த ஒரு பெண் சுஜாவிடம் வந்து, "போரடிக்குதா?" என்றார்.

"ஆமாங்க, ஆமாம்" என்பதுபோல் சுஜா பலமாகத் தன் தலையை ஆட்டினாள்.

"உனக்கு புத்தகங்கள் பிடிக்குமா?", என்றார் அப்பெண்.

'நல்லவேளை, தப்பித்தோம்' என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு, "ம், பிடிக்கும்" என்றாள் சுஜா.

அப்பெண் அவளிடம் வார, மாத இதழ்களையும், தினசரிகளையும் எடுத்துவந்து கொடுத்தார்.

அவ்வளவையும் பார்த்த சுஜாவிற்கு 'இன்று மாலைவரை பொழுதுபோவது தெரியப் போவதில்லை' என்ற சந்தோஷத்துடன் கார்ட்டூன், நகைச்சுவை, துணுக்குகள் என ஒன்று விடாமல் புரட்டிக்கொண்டிருந்தாள்.

அன்றுமாலை அங்கிருந்து கிளம்பும்போது வீட்டிலிருந்த‌ எல்லோரும் கேட்டுக் கொண்டதால் அம்மாவால் தட்டமுடியவில்லை.

"இன்றிரவு மட்டும் தங்கி, நாளைக் காலையில் போய்விடலாம்" என்று அம்மா சொன்னதும் வந்த இடத்தில் அடம்பிடிக்க முடியாமல் அமைதிகாத்தாள் சுஜா.

'நேரத்தை ஓட்ட வேண்டுமே' என்று மீண்டும் அடுக்கி  வைக்கப்பட்டிருந்த புத்தகங்களை இழுத்துப்போட்டு அதிலுள்ள நகைச்சுவைத் துணுக்குகளுக்கான படங்களை வரைந்து பொழுதைக் கழிக்கப் பார்த்தாள்.

ம்ஹூம்,  அப்படியும், நேரம் போவதாக இல்லை. அம்மாவை நச்சரிக்க ஆரம்பித்தாள்.

சுஜாவின் நிலையை உணர்ந்த அப்பெண்  உள்ளே போய் ஒரு சிறிய, அழகான‌ இளஞ்சிவப்பு நிற, வட்டவடிவ, ப்ளாஸ்டிக்கால் ஆன விளையாட்டுப் பொருளை எடுத்து வந்து கொடுத்து,  "இதிலுள்ள ஐந்து குண்டுகளையும் நடுவிலுள்ள இந்த சிறு வட்டத்துக்குள் தள்ளு பார்க்கலாம்" என்றார்.

இப்போது சுஜா பிரச்சினைகளை மறந்து ஆர்வமுடன் குண்டுகளை சிறு வட்டத்துக்குள் தள்ளுவதிலேயே குறியாய் இருந்தாள். முதல் முயற்சி தோல்வியில் முடிந்தது. இரண்டாவதும் தோல்வி.

எடுத்துக்கொண்டு அப்பெண்ணிடமே ஓடினாள், ஏதாவது தந்திரம் இருக்குமோ என்றெண்ணி.

 "இதை எப்படி போடுவது?" என்று கேட்டாள் சுஜா. குண்டுகளை எப்படி சாமர்த்தியமாக நகர்த்த வேண்டும் என்றும் அப்பெண் காட்டினார்.

இப்போது சுஜா முதன்முறையாக‌ எல்லா குண்டுகளையும் வட்டத்துக்குள் தள்ளி விட்டுவிட்டாள். சந்தோஷம் தாங்க முடியவில்லை.

மீண்டும் அப்பெண்ணிடம் ஓடினாள். "இங்க பாருங்க, எல்லா குண்டுகளையும் நான் போட்    டுட்    டேனே !" என்றாள் சந்தோஷமாக.

"என் தம்பிதான் வாங்கிவந்தான். அவனைத் தவிர‌ எங்க வீட்டில் யாருமே போட்டதில்லை. இப்போது நீ " என்று சொன்னார் அப்பெண்.

அப்படியே அதை ஆடாமல், அசையாமல் அங்கிருந்த‌ மாடத்தில் கொண்டுபோய் வைத்தாள். அதைத் தொடுவதற்குக்கூட பயம். குண்டுகள் வெளியில் வந்தபிறகு மீண்டும் போட முடியாவிட்டால் என்ன செய்வது ?

தைரியத்தை வரவழைத்துக்கொண்டு குண்டுகளை வெளியேற்றி மீண்டும் முயற்சித்ததில் அடுத்த‌ வெற்றி. இப்போது திரும்பத் திரும்ப அதையே செய்து கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை.

அதிகாலையே அம்மா ஊருக்குக் கிளம்பிவிட்டார்கள். சுஜா சந்தோஷமாகக் கிளம்பினலும் அந்த குண்டுகளைத் தள்ளும் விளையாட்டுப் பொருள் மட்டும் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தியது.

வாயிற்படியில் நின்றுகொண்டு , "அம்மா அம்மா, இன்னும் ஒரே ஒரு தடவ" என்று மீண்டும் மீண்டும் விளையாடினாள்.

அப்பெண் புன்னகைத்தவாறே, "உனக்கு வேணும்னா எடுத்துக்கோ. அவனை வேறு வாங்கிக்கச் சொல்லலாம்" என்றார்.

வீட்டிற்கு வந்தாள் சுஜா . சகோதர, சகோதரிகளின் முயற்சியில் தோல்வி என்றதும் சுஜாவிற்கு தலைகால் புரியவில்லை..

அந்த விளையாட்டுப் பொருளை யாரிடம் காட்டினாலும் மீண்டும் வாங்கி பத்திரமாக வைத்துக்கொண்டாள்.

நாட்கள் வருடங்களானதில் அந்த வட்டத்தட்டின் மேல் பகுதியில் லேசான கீறல் விழுந்துவிட்டது. இப்போது அதை இன்னும் பத்திரமாக வைக்க வேண்டியதாயிற்று.

இப்போது வெளியூரில் தங்கும் நிலை. பெட்டியில் பத்திரமாக வைத்து விட்டுத்தான் போனாள். சில நாட்கள் கழித்துவந்து பார்த்தபோது அந்த  பொருளைக் காணவில்லை.

அம்மாவிடம் கேட்டாலோ, "பசங்க யாராவது எடுத்து விளையாடியிருப்பாங்க, அப்படியே எங்காவது வச்சியிருப்பாங்க, நல்லா தேடிப்பாரு" என்ற பதில்தான் வந்தது.

எல்லோரிடமும் கேட்டுப் பார்த்தாச்சு. யாரிடமும் உரிய பதில் இல்லை.

இப்போது அவள் மனம் வலித்தது, " அன்றைக்கு அவங்களும் இப்படித்தானே தேடியிருப்பாங்க ! ".

16 comments:

  1. குழந்தை மனசு...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் எழில், சரியாத்தான் சொல்லியிருக்கீங்க‌.

      Delete
  2. தலை கால் புரிந்தால் சரி...

    ReplyDelete
  3. நல்ல கதை. எழுதிய விதம் அருமை சித்ரா.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி ப்ரியசகி.

      Delete
  4. நல்ல சென்டிமெண்ட் கதை, தொடர வாழ்த்துக்கள்.
    உங்கள் license பக்கத்தை படித்தேன் அருமையான பதிவு, எனக்கு நான் ஓமனில் license எடுத்த பழைய நினைவு வருகிறது. இங்கு மூன்று நிலை (Drum , slope , Road test ), இங்கு license எடுப்பது பெரிய சாதனை.

    நம்மூரில் ஓட்டுவதுதான் கடினம் ( நோ ரூல்ஸ் ).

    ReplyDelete
    Replies
    1. ஓ, பழைய பதிவைப் படிச்சீங்களா ! உங்க ஊர் அனுபவங்களையும் எழுதுங்க.

      நம்மூர்ல யாரு, எப்போ, குறுக்கே வருவாங்கன்னே தெரியாதே. சாலையைப் பயன்படுத்த நல்ல சாமர்த்தியம் வேண்டும். வருகைக்கு நன்றி ராஜேஷ்.

      Delete
  5. சின்னக் குழந்தைகள்தானே..எல்லாம் சீக்கிரம் மறந்துருவாங்க! :)

    ReplyDelete
    Replies
    1. மஹி,

      மறக்க முடியாததால்தான் பதிவாவே ஆச்சு, ஹா ஹா !

      Delete
  6. சித்ரா !சூப்பர் .குழந்தை மனசை கண்ணாடியா காட்டுது உங்க எழுத்து

    ReplyDelete
    Replies

    1. ஓ, அப்படியா ! வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி ஏஞ்சலின்.

      Delete
  7. சூப்பர் கதை! சகோதரி! ஒரு குழந்தையின் மனசைச் சொல்லும் கதை! அருமை!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி கீதா.

      Delete
  8. Replies

    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி வெங்கட்.

      Delete