Thursday, February 5, 2015

கன்றுக்குட்டி !!

                    
                                                              கொள்ளை அழகுடன் !

                                                    என்னைப் பார்க்கவில்லையாம் !

                                                             அவிழ்த்து விடேன்  !!

கோடையில் ஊருக்குப் போயிருந்த சமயம் ஒரு உறவு வீட்டிற்கு முதல்முறை போன‌போது அம்மாவின் வயிற்றில் இருந்தவர், மூன்று வாரங்களுக்குப் பிறகு மீண்டும் அவ்வீட்டிற்கு சென்ற‌போது இப்படி ஜம்மென்று கொள்ளை அழகுடன் இருந்தார்.

பார்த்ததும், 'அட, நம்ம பிரேம்குமார் மாதிரியே இருக்கே' என்று க்ளிக்'கிக்கொண்டு வந்தேன்.

டிசம்பர் மாதம், விடுமுறையில் வீட்டிற்கு வந்த மகளுடன் ஊரில் எடுத்த புகைப் படங்களைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, "அம்ம்ம்மா, கேமராவுல இது எப்படி வந்துச்சு?" என்ற மகளின் ஆச்சரியக் கேள்வியால், 'வீட்டுக்குள் இருந்த மகளைத் தோட்டத்திற்கு அழைத்துபோய் காட்டாமல் விட்டுவிட்டேனே' என்று என்னையே நான் நொந்துகொண்டேன்.

" ..... அவங்க வீட்டிற்கு போயிருந்தபோது, எங்க பிரேம்குமார் மாதிரியே இருக்கவும் 'க்ளிக்'கினேன்", என்றேன்.

உங்களை மாதிரியேதான் மகளும், "யாரும்மா உங்க பிரேம்குமார் ?" என்று கேட்டாள்.

ஆமாம், யார் அந்த 'பிரேம்குமார்' ?

நான் ஒன்பதாம் வகுப்பு படித்தபோது எங்கள் வீட்டிற்கு மாடு ஒன்றின் திடீர் வருகை. வந்த‌ சில நாட்களிலேயே அது கன்று ஒன்றை ஈன்றது. அச்சு அசலில் படத்தில் இருக்கும் இந்த கன்று போலவேதான் இருந்தது அது.

அதுக்கு நான் வைத்த பெயர்தான் பிரேம்குமார். அப்போது நான் படித்துக்கொண்டிருந்த‌ துப்பறியும் கதையின் நாயகனின் பெயர்தான் அது.

எங்கிருந்து கூப்பிட்டாலும் முழு பெயெரோ அல்லது பிரேம் என்றாலோ அக்கன்று 'டக்'கென திரும்பிப் பார்க்கும். வளர்ந்த பிறகும் அப்படியேதான்.

இப்போதும் நாங்கள் சகோதரசகோதரிகள் ஒன்றாகக் கூடினால் எங்க 'பிரேம்' பற்றி பேசாமல் இருக்கமாட்டோம்.

பெயர் வைப்பதை இத்துடன் நிறுத்தமாட்டேன். பிடித்தவர்களின் வீட்டில் குழந்தை பிறந்தாலும் அவர்களின் குழந்தைக்கு ஒரு பெயரை வைத்துவிடுவேன். யார்யாரெல்லாம் வளர்ந்த பிறகு என்னைத் திட்டினாங்களோ !

ஆண் குழந்தை என்றால் பெரும்பாலும் கதையின் நாயகனாகவே இருப்பார்கள். பெண் குழந்தையாக இருந்தால் உடன் படித்த & பிடித்த‌ தோழிகளின் பெயராக இருக்கும்.

இப்படித்தான் அண்ணனின் மூன்று குழந்தைகளுக்கும் பெயர் வைத்தேன். நல்லவேளை, எங்க‌ அப்பா எல்லா பெயர்களையும் மாற்றி வைத்துவிட்டார். ஆனாலும் பெண்ணுக்கு மட்டும் நான் வைத்த பெயரே இன்றளவும் கூப்பிடும் பெயராக உள்ளது.

மாடு என்றாலே பெரும்பாலும் 'லஷ்மி'னுதான் பேர் வைப்பாங்க. ஆனால் நான் கொஞ்சம் வித்தியாசமாக இல்லையில்லை அதிவித்தியாசமாக, ஆமாங்க 'லஷ்மி' என பெண்ணின் பெயரை வைக்காமல் 'பிரேம்குமார்' என ஆணின் பெயரை வைத்திருக்கிறேன் என்பது சமீபத்தில்தான் தெரிந்தது.

நான் பயம் இல்லாமல் பழகிய‌து கன்றுக்குட்டி, ஆட்டுக்குட்டி, கோழிக்குஞ்சு இவைகள் மட்டுமே. இவர்களின் கொள்ளை அழகில் மயங்கிவிடுவேன்.

கன்றுக்குட்டியும், ஆட்டுக்குட்டியும் திடீர்திடீர் என எழுந்து குதிக்க ஆரம்பித்து விடுவார்கள். கொஞ்சம் ஏமாந்தாலும் நம் கால் விரல்களைப் பதம் பார்த்துவிடுவர். கோழிக் குஞ்சுகளின் கண்களுக்கு மை தீட்டிய மாதிரியே இருக்குமே, அது மனதைக் கொள்ளைகொள்ளும்.

ஆனாலும் இவர்களின் அம்மாக்கள் இவர்களை நாம் தொடுவதைப் பார்த்துவிட்டால் தீர்ந்தோம்.

மாடு கயிறை அறுத்துக்கொண்டு முட்ட வந்துவிடும். ஆடு அந்தளவிற்கு இல்லையென்றாலும் அதுவும் கோபப்படும். கோழி சொல்லவேத் தேவையில்லை, பறந்துபறந்து அடிக்கும்.

ஆனால் இவற்றை வளர்ப்பவருடன் நாம் ஒட்டிக்கொண்டு சென்றால் ஓரளவுக்குப் பிரச்சினை இருக்காது. இதுமாதிரி நிறைய வீடுகளுக்கு படையெடுத்திருக்கிறேன்.

இப்போது இவர்கள் எல்லோரும் எங்கேயோ போய்விட்டார்கள், பார்க்கவே முடியவில்லை !

26 comments:

  1. ரசித்து வாசித்தேன் .நாளை விரிவா பின்னூட்டமிடுகிறேன்

    ReplyDelete
    Replies
    1. ஏஞ்சலின்,

      ஹி ஹி நான்தான் லேட் போல !

      Delete
  2. வணக்கம்

    கன்றுக்குட்டி மிக அழகாக உள்ளது..
    உண்மைதான் இனத்தோடு இனம் சேரும் போதுதான் மகிழ்ச்சி பிறக்கும்... அருமையாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி ரூபன்.

      Delete
  3. பிரேம்குமார் நல்லாயிருக்கு...

    ReplyDelete
  4. ஆ..ஆவ் கொள்ளை அழகு பிரேம்குமார். அட பெயரும் நல்லாயிருக்கே!!.
    சித்ரா! நான் உங்க கட்சிதான். எங்க வீட்டில் நாய்,பூனை,ஆடு,மாடு,சேவல்,வாத்து இவங்க எல்லாருமே இருந்தாங்க. எல்லாருக்கும் பெயர் வைப்பது நான்தான். எங்க வீட்டு பசுவுக்கும் லஷ்மிதான் பெயர். நானும்,அக்காவும் இவங்களைப்பற்றி பேசாத நாட்கள் இல்லை எனலாம். அவங்களைப்பற்றி நினைத்தாலே கவலைதான். ஆனாலும் மிக சந்தோஷமான நாட்கள்,காலங்கள். அவைகளுடன் பொழுதுபோவதே தெரியாது சித்ரா. நினைவுகள் மட்டுமே இப்போ!. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ப்ரியசகி,

      எல்லாரும் ஒன்னுபோலதான் இருந்திருக்கோம் :) கடைக்குட்டிகளுக்கு வீட்டில் கொஞ்சம் வேலை கம்மின்னு நினைக்கிறேன், அதனாலதான் இந்த வேலையெல்லாம் செஞ்சிருக்கோம்.

      ஆமாம் ப்ரிய‌சகி, இவற்றுடன் இருந்தால் நேரம் போவதே தெரியாது. அக்காவுடனான உங்கள் நினைவுகளும் இனிமை.

      Delete
  5. ஆஹா...ரசனை ரசனை தான். வித்தியாசமாக பெயர் வைத்து ஜாலியாக விளையாடி மகிழ்ந்து இருக்கிறீர்கள். கைவசம்...பெயர்கள்...நிறைய வைத்து இருப்பீர்கள் போல...? ம்....

    ReplyDelete
    Replies
    1. உமையாள்,

      ஆஹா, உங்க பின்னூட்டமும் ஜாலியாவே இருக்கு !

      Delete
  6. மலரும் நினைவுகளைப் போலவே, கன்றுக்குட்டியும் கொள்ளை அழகு!

    ReplyDelete
    Replies
    1. இயற்கை அழகு இல்லையா, அதான்! வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி ஆறுமுகம்.

      Delete
  7. அருமையான நினைவுகள் இல்லையா?!! நாங்களும் விலங்குகள் பிரியர். கைவிலங்கு அல்ல ஹஹ்ஹ். நாலு கால்களை விரும்புபவர்கள்.....பிரேம்குமார் கொள்ளை அழகு! என்ன ஒரு இன்னொசென்ஸ் கண்களில்

    ReplyDelete
    Replies
    1. கீதா,

      உங்கள் பின்னூட்டமே ரசிக்கும்படி, நகைச்சுவையாய் இருக்கு. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி கீதா.

      Delete
  8. துள்ளி விளையாடும் கன்றுக்குட்டி போலவே அழகான பதிவு.

    கன்னுக்குட்டி, ஆட்டிக்குட்டி, கோழிக்குஞ்சு ஆகிய எல்லாமே தாங்கள் சொல்வதுபோல சாப்ட்டான நம் மனதைக் கவரும் பிராணிகள் தான்.

    நாம் கொஞ்சுவதை அவற்றின் தாய் பார்த்துவிட்டால் எப்படி நடந்துகொள்ளும் என்பதை விவரித்துள்ளது அழகு.

    பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், விரிவான பாராட்டுகளுக்கும் நன்றி ஐயா.

      Delete
  9. பிரேம்குமார் ரொம்ப அழகு ..விழி நனைய வாசித்தேன் ..எங்க வீட்டிலும் ஊரில் நிறைய இருந்தன நானும் நிறைய பெயர்கள் ரவடி கோழிக்கு ,ஆடுக்கு ,எல்லாம் வைச்சிருக்கேன் :)

    ReplyDelete
    Replies
    1. ஏஞ்சலின்,

      அப்போ, நாம எல்லோருமே ஒரே கட்சிதான் ! யார் காதிலாவது விழுந்திடப் போகுது, ஆதரவு கேட்டுடுவாங்க. மீள்வருகைக்கு நன்றி ஏஞ்சலின்.

      Delete
  10. கன்றுக்குட்டிக்கு பிரேம்குமார் என்று பெயரா? கேட்கவே நல்லாருக்கே.
    நான் கூட எங்கள் வீட்டில் குழந்தை பிறந்தால் பெயர் வைப்பேன். அப்புறம் அவங்க மாத்திடுவாங்க...சின்ன வயதில் எல்லோரும் செய்யும் வேலை போலிருக்கு இது. ஏற்கனவே பெயர் இருப்பவங்களுக்கும் புது புது பெயர் வைப்போமே! அவங்களுக்குத் தெரியாமே!

    ReplyDelete
    Replies
    1. ஆஹா, நீங்களும் பெயர் வைப்பவரா !

      "ஏற்கனவே பெயர் இருப்பவங்களுக்கும் புது புது பெயர் வைப்போமே! அவங்களுக்குத் தெரியாமே!" ___ நான் வெளிய சொல்லல‌, நீங்க சொல்லீட்டிங்க. பாடத்தில்(பயாலஜி) வரும் வாயில் நுழையாத பெயர்களை தோழிகளுக்குள் மாற்றி மாற்றி வைத்து நினைவில் வைத்துக்கொள்வோம்.

      Delete
  11. ப்ரேம்குமார் அழகா இருக்கு... அழகான போஸில் கன்றுக்குட்டி...

    உங்கள் நினைவுகள் அதை விட ஜோராய்..

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஆதி, கொள்ளை அழகுதான். முதலில் கொஞ்சம் வெட்கப்பட்டு முறைத்துக்கொண்டு நின்றார். பிறகு பழகிவிட்டார்.

      Delete
  12. அழகான கன்றுக்குட்டி. உங்கள் இனிமையான நினைவுகளையும் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், ரசித்துப் பின்னூட்டமிட்டதற்கும் நன்றி வெங்கட்.

      Delete
  13. ப்ரேம்குமாரின் 3 வது படத்த நாங்க சுட்டுட்டோம்! ;) அழகான கண்ணு..அழகு கண்ணுக்குட்டி!

    உங்க பேர் வைக்கிற கதை ஜூப்பர்ர்ர்ர்...நாங்க முதல் முதல்ல ஒரு ஆட்டுக்குட்டி வாங்கினோம், அதுக்கு எங்கக்கா "ரத்னா"- ந்னு தோழி பேரை வச்சாங்க..அதுக்கப்புறம் ஜிண்டு, அஞ்சலி, மதி, சீனு, மிக்கி, மோக்லி வரை நான் வளர்த்த செல்லங்கள்..கல்யாணத்துக்குப் பிறகு அம்மா வீட்டில டிங்க்கு, தேனு-ந்னு ரெண்டு பேர் இருக்காங்க. இங்க ஜீனோ இருக்கார்! :))

    ReplyDelete
    Replies
    1. சுட்டதை 'லயா'வுக்காகப் பொறுத்துகிட்டேனாக்கும் :)

      கட்சியில எண்ணிக்கை கூடிட்டே போகுதே. உங்க வீட்டு பேர்களும் நல்லாருக்கே. 'ரத்னா'னு ஒரு ஃப்ரெண்ட் 7ல எங்கூட படிச்சிருக்காங்க.

      எங்க வீட்ல ஆடு இருந்ததில்லை. ஆனா ஒரு காலத்துல கோழி இருந்துச்சு. நாய் & பூனைக் குட்டிகளைத் தூக்கியதே இல்லை மஹி. பதிவுல இதையும் ஒரு வரி எழுதி, பிறகு உங்களுக்கெல்லாம் பயந்து தூக்கிட்டேன். ஹா ஹா !

      Delete