வசந்த காலமாதலால் உழவர் சந்தையில் ஏகத்துக்கும் செடிகள் விற்பனைக்கு வருகின்றன. நான் பூண்டு எடுக்கும் கடையில் பெயர் தெரியாத செடிகள் எல்லாம் நிறைய வைத்திருந்தனர்.
அவற்றுள் இந்த குட்டி ரோஜா செடி என்னை மிகவும் கவர்ந்தது. வேறு நிறங்களிலும் இருந்தன. எனக்கென்னமோ அந்த நாளில் என் தோழிகள் தலையில் வைத்துக் கொண்டு வரும் பன்னீர் ரோஜா நினைவுக்கு வரவும் வாங்கிவிட்டேன்.
ஒரு பூத்த பூ, நான்கு மொட்டுக்கள் & மூன்றுநான்கு கண்ணுக்குத் தெரியாத சிறு மொட்டுக்களுடனும் வந்தது.
நாமே விதை போட்டு, தண்ணீர் தெளித்துவிட்டு, அது முளைத்து வரும் அழகோ அல்லது பதியம் போட்டுவைத்த குச்சிகள் காய்ந்து சிலபல நாட்களுக்குப் பிறகு முதல் துளிர் வரும்போது இருக்கும் மகிழ்ச்சியோ, உழைப்போ இதில் இல்லை. ஹும், இருந்தாலும் பரவாயில்லை .
முதலில் வழக்கம்போல் அரிசி, பருப்பு & உளுந்து கழுவிய தண்ணீரைத் தெளித்துவிட்டதால் செடி மட்டுமல்லாமல் பூவுமே அழுக்கான நிலையில் இருந்ததைப் பார்த்ததும் ஒரு முடிவெடுத்து அந்தத் தண்ணீரையே வேர் பகுதியில் விட்ட பிறகு என்ன ஒரு அழகான நிறத்தில் பூத்திருக்கிறது பாருங்கோ !!
முதலில் சாதாரணமான ரோஸ் நிறத்தில் பூத்த பூக்கள், தன்னை எந்நேரமும் ரசிக்க இந்த வீட்டில் ஒரு ஆள் இருப்பதைத் தெரிந்துகொண்டு மீதமிருந்த மொட்டுக்கள் அநியாயத்திற்கு அழகான நிறத்தில் பூத்தன.
ஒருவேளை டீ தூள் செய்த மாயமோ என்னவோ ! பள்ளியில் படித்தபோது தோழிகள் சொன்ன டிப்ஸ்தான் இது.
மொட்டு ஒரு அழகு என்றால் ...... பூத்த பூவும் ஒரு அழகுதான் !
படாத பாடுபடும் வரிசையில் அடுத்து இணைந்திருப்பது ஜாதிமல்லி ! நன்றாகப் பூக்க ஆரம்பித்த பிறகு அவரும் இங்கே உலா வருவார்.