Tuesday, March 17, 2015

என்ன அப்பா இவர் ?

பள்ளி முடிந்த பிறகு தினமும் நான் பள்ளிக்கு வர வேண்டும், தான் விளையாடுவதை அம்மா பார்க்க வேண்டும் அல்லது பயிற்சியில் ஈடுபட்டிருக்கும்போது இடையிடையே என்னைப் பார்த்து புன்னகைக்க வேண்டும் என்பது மகளின் விருப்பம், என் விருப்பமும்கூட.

இப்படித்தான் மற்ற அம்மாக்களின் வருகையும் இருந்திருக்குமோ !

தினமும் ஆஜராவதால் பெரும்பாலும் எல்லா பெற்றோரையும் ஒருவருக்கொருவர் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கும்.

இதெல்லாம் உயர்நிலைப் பள்ளிவரைதான். அதன்பிறகு என்றாவது ஒருநாள் போவதோடு சரி. இதில் என் பெண்ணிற்கு மிகுந்த வருத்தம் உண்டு.

வழக்கம்போல அன்றும் மாலை நான்கு மணியளவில் மகள் படிக்கும் பள்ளியின் விளையாட்டு மைதானத்தை நோக்கி நடையைக் கட்டினேன்.

விளையாட்டு முடியும் தருவாயில் அங்கு புதிதாக ஒரு அம்மா வருகை த‌ந்தார். இன்றுதான் அவரைப் பார்க்கிறேன்.

பார்த்த மாத்திரத்திலேயே அவ‌ங்க 'தமிழ்' என நானும், நான் 'தமிழ்' என அவங்களும் தெரிந்துகொண்டோம்.

புன்னகைக்கிடையில் "நீங்க இலங்கைத் தமிழரா? என்றார்.

எனக்குள் கொஞ்சம் சிரிப்பு, ""ஹைய்யோ, எப்படீங்க கண்டு பிடிச்சீங்க ? " என்றேன்.

"இ ..ல்....ல, பார்த் .... தாலே  தெரியு ... மில்ல, அ ... தா .... ன்" என்று இழுத்தார்.

பிறகு " அங்கு நீங்க எந்த ஊர் ?" என்றார்.

அவர் சொன்ன இலங்கையை சுத்தமாக மறந்துவிட்டு, "பண்ருட்டிக்குப் பக்கத்துல ஒரு சின்ன்ன்ன கிராமம்" என்றேன்.

"ஓ, அங்குகூட ஒரு பண்ருட்டி இருக்கா என்ன‌?" என்றார் ஆச்சரியமாக.

"நீங்கவேற, நம்ம ஊரைத்தான் சொல்றேன்" என்றேன் நான். முதல் சந்திப்பிலேயே ரொம்பவே நெருங்கிவிட்டோம்.

"அப்புறம் ஏங்க நீங்க எங்கிட்ட பொய் சொன்னீங்க ? " என்றார்.

நீங்களே சொல்லுங்க, மேலே நான் ஏதாவது பொய் சொன்னேனான்னு !!

'நான் நல்ல பிள்ளையாக்கும், பொய்யெல்லாம் சொல்லமாட்டேன்' என்பது பாவம் அவருக்கு எப்படித் தெரியும் ?

"நாங்க இந்தியாவுல‌ருந்து சமீபமாத்தான் இங்கு வந்தோம். ஒரு வாரமாத்தான் என் பையன் பள்ளிக்கு வந்துட்டிருக்கான், இருங்க அவனைக் காட்டுறேன் " என்று கூட்டத்தில் த‌ன் பையனைத் தேடினார்.

"அப்படின்னா நீங்க 'சாய்'யோட அம்மாவா?", என்றேன். அவருக்கு வேலை வைக்க வேண்டாமே என்ற நல்ல எண்ணத்தில் !

"ஆ .... மா ..... ம், சாய் எம் பையன்தான். அவ‌ன உங்களுக்கெப்படித் தெரியும் ?" என்றார் சிறிது சந்தேகத்துடன்.

'மறுபடியும் இவள் நம்மைக் குழப்புகிறாளோ' என்றுகூட அவர் குழம்பியிருக்கலாம்.

விளையாட்டின் இடையில் சிறிது ஓய்வாக இருக்கும் பிள்ளைகள்,  அமைதியாக,  வட்டமாக‌ உட்கார்ந்து நகைச்சுவைத் துணுக்குகளோ அல்லது அவரவ‌ருக்கு விருப்பமான பாடலையோ பாடி நேரத்தை இனிமையாக்க முயல்வர். சில பிள்ளைகள் வீட்டுப்பாடம் எழுதிக்கொண்டிருப்பர்.

அப்படித்தான் சென்ற வாரத்தில் ஒருநாள் அவர்களின் மத்தியில் இருந்து 'தீ தீ தீ ஜக ஜோதி ஜோதி ஜோதி' என்ற பாடல் பறந்து வந்தது.

"ஹ்ம் !! யாரது ? " என திரும்பிப் பார்த்தால் நல்ல நிறத்தில், சிரித்த முகத்துடன், அழகான குண்டு பையன் ஒருவன்தான் இந்தப் பாடலைப் பாடி, ஆடிக்கொண்டிருந்தான்.

'பெற்றோரிடமிருந்தும் ஆசிரியரிடமிருந்தும் கொஞ்சமே கொஞ்சம் சிறப்பு கவனம் தேவைப்படும் குட்டிப்பையன் அவன்' என்பதை பார்த்த மாத்திரத்திலேயே புரிந்துகொண்டேன். அவனது கள்ளங்கபடமற்ற, குழந்தைத்தனமான சிரிப்பு அதை சொல்லியது.

பிறகு பையனை விசாரித்து பெயர் தெரிந்துகொண்ட கதையைக்கூறி, "இப்படித்தான் எனக்கு அவனைத் தெரியும். அவனும் புதுசு, நீங்களும் இப்போதான் வந்திருக்கீங்கன்னு வேற‌  சொல்றீங்க, அதனாலதான் கேட்டேன்  " என்றேன் நான் ................ (தொடரும் ).
                                             ~ ~ ~ ~ ~  இடைவேளை  ~ ~ ~ ~ ~

////////////'ஹ் ஹும் ? .... பதிவுக்கும், பதிவின் தலைப்புக்கும் சம்மந்தமே இல்லையே, பதிவில் அப்பா கேரக்டரையே காணோமே' //////// _____ இது நீங்க‌.

///////////  "ஒருசில‌ படங்களில் ஓரிரு நிமிடங்களே வந்தாலும் சிலர் அந்த கேரக்டராகவே மாறி மனதில் பதிந்துவிடுவார்களே, அப்படித்தான் இந்த அப்பாவும், பதிவின் தொடர்ச்சியின் கடைசியில் அவரை அழைத்து வருகிறேனே ! " /////////  _______  இது நான் .
  ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

16 comments:

  1. சீக்கிரம் அழைத்து வாங்க ..ஆ ...மா .... ம்ம்ம் சாய் அம்மா எதுக்கு இ .....ழுத்த்த்து பேசறாங்க

    '//மறுபடியும் இவள் நம்மைக் குழப்புகிறாளோ' என்றுகூட அவர் குழம்பியிருக்கலாம்//.
    ஆனாலும் சித்ரா ரொம்ப குறும்பு :)

    ReplyDelete
    Replies
    1. அஞ்சு,

      இப்பவே சொல்லிடறேன், அழைத்து வந்த பிறகு என்னை 'முறைக்கக் கூடாது' ஆமாம் !

      ஒருவேளை 'கேட்கலாமா அல்லது வேண்டாமா' என்ற தயக்கத்தினால் இழுத்த்த்திருப்பாரோ ! உங்க கடைசி வரியை சொன்னால் யாருமே நம்பமாட்டாங்க :)

      Delete
  2. வணக்கம்

    நன்றாக உள்ளது ஆரம்பம்... தொடருங்கள் காத்திருக்கேன் அடுத்த பகுதிக்கு
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், காத்திருப்புக்கும் நன்றி ரூபன்.

      Delete
  3. சுவாரஸ்யமான நேரத்தில்... தொடரும்...

    தொடர்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. சுவாரஸ்யமாக நினைத்து வாசித்ததற்கும், தொடர்வதற்கும் நன்றி தனபாலன்.

      Delete
  4. ம் ..கொஞ்சம் சிக்கரமா சொல்லுங்க ....

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா , சொன்ன பிற‌கு என்ன சொல்லப் போறீங்கன்னு பார்க்கிறேன் :)

      Delete
  5. ஆஹா... தொடரும்.. எனக்கு சந்தேகம் ஒன்று இருக்கு சித்ரா.பிரபல பத்திரிகையில் "சித்ரா" என்ற ஒரு எழுத்தாளர் எழுதுகிறார்,ஒருவேளை நீங்கதான் அவரோஓ.....
    கதை intersting ஆக போகுது. கெதியில் பார்ட் 2 போடுங்கோ....
    ஆனா சில இடங்கள் உங்க ஊர் பெயரில் எங்க இடத்தில் இருக்கு சித்ரா.

    ReplyDelete
    Replies
    1. ப்ரியசகி,

      ஓ அப்படியா, தெரியலையே, முன்புபோல் இப்போது எந்தப் பத்திரிகையும் விரும்பிப் படிப்பதில்லை, அதனால் தெரியாமல் போய்விட்டதோ ! கெதியாக நாளை முடியுமுன் வந்துவிடுகிறேன்.

      "சில இடங்கள் உங்க ஊர் பெயரில் எங்க இடத்தில் இருக்கு" ___ இதைப் படித்ததும் சென்ற பதிவின் நம்முடைய பின்னூட்டங்கள்தான் நினைவுக்கு வந்தன :) நன்றி ப்ரியசகி.

      Delete
  6. அப்பா வரும் வரை தொடர்கிறேன்....:)

    ReplyDelete
    Replies
    1. ஆர்வமுடன் தொடர்வதற்கு நன்றி ஆதி.

      Delete
  7. நம்மைச் சுற்றி எங்கேனும் தமிழ் கேட்டாலே, உள்ளத்தில் நிச்சயம் நம்மையறியாமலேயே குதூகலம் தொற்றிக் கொள்ளும்.

    அனுபவங்களை தொடருங்கள். வாசிக்க காத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், அப்போது ஒரு சந்தோஷம் வரத்தான் செய்கிறது.

      வருகைக்கும், வாசிக்கக் காத்திருப்பதற்கும் நன்றி தமிழ்முகில்.

      Delete
  8. சிவாரச்யமாய் படித்துக் கொண்டே வருகையில் தொடரும் போட்டு விட்டீர்களே. அடுத்தப் பதிவில் அப்பா வந்து விடுவார் இல்லையா?

    ReplyDelete
    Replies
    1. அப்பா வந்துட்டாருங்கோ, ஆனால் 'வராமலேயே இருந்திருக்கலாமோ'ன்னு நினைக்கப் போறீங்க.

      Delete