Sunday, May 31, 2015

ரோஜாத் தோட்டத்தில் _ Double-delight roses


ரோஜாக்களை ரசிக்க பொறுமை இல்லாத குட்டிப் பையன்கள் என்னமாய் ஓடிப் பிடித்து விளையாடுகிறார்கள் ! ஒளிஞ்சு ஒளிஞ்சு விளையாட சூப்பர் இடம்.

Friday, May 29, 2015

ரோஜாத் தோட்டத்தில் _ வரி ரோஜா !

இந்த ரோஜாவில் வரிகள் காணப்படுவதால் 'வரிரோஜா'வாகிவிட்டது. ஹா ஹா ஹா !

Tuesday, May 26, 2015

மல்லாட்டைக்குப் போவ‌ணும் !

முன்குறிப்பு :-

முன்பெல்லாம் எங்கள் ஊரில் மல்லாட்டை பிடுங்குகிறார்கள் என்றாலே திருவிழா போல் இருக்கும். கொல்லி எங்கும் மக்கள் நடமாட்டமும் கூடவே அவர்களின் பேச்சு சத்தமும் அதிகமாக இருக்கும். சூரியன் மறைந்தும் சில மணி நேரங்கள்வரை இது நீடிக்கும்.

இதெல்லாம் ஒரு இருபது இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால். இப்போது எல்லாமும் போய் கொய்யா தோப்பும், சவுக்கு மரங்களும்தான் எங்கும் காட்சியளிக்கின்றன. காரணம் ஆட்களின் பற்றாக்குறையும், விவசாயத்தில் ஏற்படும் நஷ்டமும்தான்.

இக்கதையில் வரும் நாயகியின் பெயர் இராணி. பெயரிலாவது வசதியுடன் உலவ விடுவோமே ! நாயகனாக இருந்திருந்தால் ? ......... இராஜா என்றே சூட்டியிருப்பேன்.
                                                                                                                     படம் உதவி:கூகுள்

இராணிக்கு பக்கத்து ஊரில் நெருங்கிய உறவிலேயே, அவளுக்கு விருப்பம் இல்லாமலேயேத் திருமணம் முடிக்கப்பட்டது. அதைக் காரணம் சொல்லியே ஆரம்ப வருடங்களில் வாழாமல் அம்மா வீட்டிலேயே இருந்தாள்.

அப்பாவின் திடீர் மறைவுக்குப் பின்னால் தனக்குப் பின்னாலுள்ள மூன்று தம்பிகளை வைத்துக்கொண்டு அம்மா படும் கஷ்டத்தைப் பார்த்துவிட்டு, 'அம்மாவுக்குத் தன்னைப்பற்றிய வேதனையையாவது கொஞ்சம் குறைப்போமே' என்ற எண்ணத்தில், வேறு வழியில்லாமல் வாழ வந்தாள். இதோ மூன்று பிள்ளைகளுக்குத் தாயாகியும்விட்டாள்.

கணவன், மனைவி இருவருமே கூலிவேலை செய்து பிழைப்பவர்கள்தான். காலை, மாலை என விடாமல் ஓடிக்கொண்டே இருப்பவர்கள்தான். ஆனாலும் ராணியின் வேகமும், உற்சாகமும் அவளது கணவனுக்கு சுட்டுப் போட்டாலும் வராது.

சுத்தம்னா சுத்தம் அப்படியொரு சுத்தம். டைல்ஸ், மார்பிள்ஸ் வைத்து கட்டப்பட்ட இன்றைய நவீன‌ தரையே பார்த்து வெட்கப்படும் அளவில் அவள் வீட்டின் மண் தரை இருக்கும்.

எல்லோருக்கும் வருடத்தில் ஒருமுறைதான் பொங்கல் வரும். பொங்கலின் போதுதான் வீட்டை சுத்தம் செய்வார்கள். ஆனால் இவளோ வருடம் முழுவதும் வீட்டின் பொக்கைபோரை எல்லாம் மண் கொண்டு அடைத்து பூசி, சாணம் போட்டு மெழுகி தரையைக் கண்ணாடிபோல் பளபளப்பாக‌  வைத்திருப்பாள்.

மாலை ஆறு மணிக்கு அடுப்பை பற்ற வைத்து உலையில் அரிசியைப் போட்டுவிட்டு வீட்டின் எதிரில் இருக்கும் முருங்கை மரத்தின் துளிர் இலைகளைப் பறித்து கீரையை ஆயவும், சோறு வெந்து வரவும் சரியாக இருக்கும்.

பருப்பு வாங்க முடியாமலோ அல்லது சிக்கனம் கருதியோ கஞ்சி வடித்த தண்ணீரையே மீண்டும் அடுப்பில் ஏற்றி கீரையைப் போட்டு கடைந்து வைத்துவிடுவாள்.

மறுநாள் அந்த மரத்திலுள்ள முருங்கைக் காய்களே புளிக்குழம்பு அல்லது காரக்குழ்பு என்ற பெயரில் குழம்பில் மிதந்துகொண்டிருக்கும்.

ஆயிரக்கணக்கில் செலவு செய்து வெளியே தள்ளிக்கொண்டிருக்கும் வயிறை 'துளியளவு உள்ளே தள்ள முடியாதா !' என்ற ஏக்கத்தில் இருப்பவர்களுக்கு மத்தியில் இவர்களுக்கு 'வயிறு என்ற ஒன்று இருக்கிறதா ?' என்பதே தெரியாமல் வறுமையில் உள்பக்கமாக இழுத்து கட்டப்பட்டதுபோல் இருக்கும். உடலில் எலும்பைத் தவிர கிள்ளியெடுக்க துளி சதை இருக்காது.

ஊரில் மாசி மாதம் பிற‌ந்ததுமே இங்கொன்றும் அங்கொன்றுமாக மல்லாட்டை பிடுங்க ஆரம்பித்துவிடுவார்கள். இது பங்குனி, சித்திரையில் சூடு பிடித்துவிடும்.

இதோ ராணியும் மல்லாட்டைக்குத் தயாராகிவிட்டாள். முறம், கூடை எல்லாம் எரவானத்திலிருந்து(பரண்) தூசி தட்டி எடுக்கப்பட்டுவிட்டது. சாக்குகள் தயாராயின.

பொங்கலுக்கு வாங்கிய பானைகளைத் துடைத்துக் காய வைத்து மல்லாட்டை கொட்டி வைக்கத் தயார் செய்துவிட்டாள்.

மல்லாட்டை பிடுங்கும்போது ஒரு நாள் தவறாமல் வேலைக்குப் போய் சேர்த்து வைப்பாள். அதிகாலையே எழுந்து வீட்டு வேலைகளை முடித்துவிட்டு முதல் நாள் பொறுக்கிய மல்லாட்டையை வாசலில் கொட்டிவிட்டு கூடையுடன் கிளம்பிவிடுவாள்.

போகும் வழியில் எந்தக் கொல்லியில் உள்ள செடிகளில் நிறைய மல்லாட்டை இருக்கிறது என பேசிக்கொள்கிறார்களோ அந்த கொல்லிக்கு நடையைக் கட்டுவாள்.

மல்லாட்டைக்குப் போகும்போது அவளுக்கு காலை, நண்பகல் இரண்டு வேளை சாப்பாடு மிச்சம். என்னதான் கொல்லிக்காரர்கள் 'மல்லாட்டையத் திண்ணாதீங்க‌, ஆஞ்சி(ஆய்ந்து) கூடையில போடுங்க‌' என சுற்றிசுற்றி வந்தாலும் பிடுங்குபவர்கள் தின்ற மீதிதான் கூடையில் விழும்.

மாலையில் பிடுங்கிய மல்லாட்டைக்கு கூலி வாங்கிக்கொண்டு வீடு திரும்புவாள்.

மல்லாட்டைக்குப் போகும் நாட்களிலெல்லாம் இரவு ஏழு மணிக்குமேல்தான் வீட்டுக்கு வந்து அடுப்பே பற்ற வைப்பாள். சோறு வேகும்வரை பிள்ளைகள் இவள் கூலியாக வாங்கி வந்த மல்லாட்டையைக் கொறித்துக்கொண்டு இருக்க வேண்டியதுதான்.

அடுத்த நாள் காலையில் வீட்டு வாசலில் கொட்டப்பட்ட மல்லாட்டையை அவளது கணவன் அவற்றை ஒன்றின்மேல் ஒன்று இல்லாமல் விரவிவிட்டு காய வைப்பான். காய்ந்ததும் மாலையில் பள்ளி விட்டு வரும் அவளது பிள்ளைகள் சாக்கில் அள்ளி வைத்துவிடுவார்கள்.

இவையெல்லாம் வருடந்தோறும் நடக்கும் நிகழ்ச்சிகள்தான்.

வழக்கம்போல் இந்த வருடமும் மல்லாட்டைக்குப் போனாள். முதல்நாள் கூலியை வாங்கிக் கொண்டுவந்து படுத்தவள்தான், அடுத்த நாள் கண் விழித்தது பக்கத்து ஊரிலுள்ள அரசு பொது மருத்துவமனையில்.

உடலில் தெம்பு இல்லாததாலோ அல்லது பசியினால் நாள் முழுவதும் அளவுக்கு அதிகமாக பச்சை மல்லாட்டையைத் தின்றுத்தின்று தண்ணீரைக் குடித்துக்கொண்டே இருந்ததாலோ என்னவோ,  இரவு முழுவதும் வயிற்றுப்போக்கு, வாந்தி என உடல்நிலை கெட்டு, எழுந்து உட்காரக்கூட முடியாத நிலையில் மாட்டுவண்டி கட்டி அழைத்து வந்திருந்தனர்.

உடல்தான் மருத்துவமனையில், உள்ளம் முழுவதும் மல்லாட்டைக் கொல்லிகளில் !

மல்லாட்டைக்குப் போய் நிறைய கூலி வாங்கிவந்து காய வைத்து, எடுத்து வைத்துக்கொண்டால் 'தின்றத்துக்கு இன்னா இருக்கு' என்று பிடுங்கி எடுக்கும் பிள்ளைகளுக்கு வருடத்திற்கும் அள்ளி அள்ளிக் கொடுக்கலாம்.

உரித்த பயறை செக்கில் கொடுத்து எண்ணெய் ஆட்டி வைத்துக்கொண்டால் வருடத்திற்கு குழம்பு தாளிக்கலாம், தீபாவளிக்கு அதிரசம், முறுக்கு, வடை என எல்லாமும் சுட்டு பிள்ளைகளுக்குக் கொடுக்கலாம்.

எண்ணெய் ஆட்டும்போது கிடைக்கும் புண்ணாக்கை விற்று காசாக்கி செலவுக்கு வைத்துக்கொள்ளலாம் ....... இவ்வாறெல்லாம் மனது நினைத்துத் துடித்தது.

"சீக்கிரமே உடல்நிலை தேறி மல்லாட்டைக்குப் போவ‌ணும்" என்று ராணியின் உள்ளம் கிடந்து அடித்துக்கொண்டதே தவிர, உடல் அசையக்கூட மறுத்தது.

*******************************************************************************

இந்த நிலை ராணிக்கு மட்டுமல்ல, ஆணோ, பெண்ணோ பெரும்பாலானோரின் அன்றைய நிலையும் இதுதான்.

*******************************************************************************

Monday, May 18, 2015

அணில் # 2

                                          வீட்டின் முன்னால் உள்ள புல் தரையில் !

                சும்மா இருக்கும் அணிலை வம்புக்கிழுத்தால் இப்படித்தான் ஆகும் !!

மேலேயுள்ள படங்கள் எல்லாம் ஜனவரியில் குளிர் காய்ந்தபோது எடுத்தவை ...

Tuesday, May 12, 2015

ரோஜா தோட்டத்தில் _ மஞ்சள் ரோஜா !


ரோஜாத் தோட்டத்தில் பூத்த பல வண்ண நிறங்களில் முதலில் மங்களகரமாக மஞ்சள் ரோஜா.  பார்த்ததும் 'பளிச்' என எங்களை ஈர்த்ததும் இந்த மஞ்சள் ரோஜாதான்.

தோட்டமாக இருப்பவை வீட்டுக்காரர் எடுத்தது. மற்றபடி சதுரம், செவ்வகமெல்லாம் படத்தை ட்ரிம் பண்ணும்போது காணாமலே போய்விட்டது.

                              மஞ்சளும் சிவப்பும் கலந்த ஏதோ ஒரு அழகு ரோஜ!

Wednesday, May 6, 2015

சுற்றுலா லிஸ்ட் !



எனக்கு விஷயம் தெரிந்து, "ஓ. இப்படியெல்லாம்கூட இடங்கள் இருக்கிறதா ? கண்டிப்பாக இங்கே சென்று எப்படி இருக்குன்னு பார்த்து வர வேண்டும் !" என்ற ஆவல் ஏற்பட்டது முதன்முதலில் முகலாயர்களின் வரலாறு அறிமுகம் ஆன‌போதுதான்.

ஆம், நான் முதன்முதலில் சென்று பார்க்க வேண்டும் என நினைத்தது பாபர் மசூதியைத்தான். முதல் ஆசையே இப்படி முடிஞ்சு போச்சே !

பாபரைப் பற்றி படித்தபோது மகனுக்காகத் தன் உயிரையே கொடுக்கத் துணிந்த அந்த‌ செண்டிமென்டான விஷயத்தால்கூட ஒருவேளை ஈர்த்திருக்கலாம்.

அடுத்து ஜும்மா மசூதி, தாஜ்மஹால், செங்கோட்டை, இரும்புத் தூண் என எல்லாமும் வரிசைகட்டி வந்தன.

பாடப் புத்தகத்தில் உள்ள இந்திய வரைபடத்தைப் பார்த்து சென்னைக்கும் கன்னியாகுமரிக்குமான தொலைவு, அடுத்து சென்னையிலிருந்து நேரே டில்லிக்கு உள்ள தொலைவை ஸ்கேல் உதவியுடன் அளந்து பார்த்து, ஒப்பிட்டு எல்லாமும் பக்கத்தில் இருப்பதாக நினைத்துக்கொண்டது என எல்லாமும் வேடிக்கைதான்.

நாளடைவில் தாஜ்மஹால் ஒரு உலக அதிசயம் என்பதைக் கேள்விப்பட்டு, இப்போது உலக அதிசயங்கள் என்னென்ன என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆவலில் இரண்டு வகுப்புகள் முன்னால் போய்க்கொண்டிருக்கும் சகோதரியைக் கேட்டுக் குறித்துக்கொண்டேன்.

விருப்பத்தில் முதலாவதாக இடம் பிடித்தது 'தாஜ்மஹால்'தான்.  அடுத்து இடம் பிடித்தது சீனப் பெருஞ்சுவர். பீஸா நகரத்து சாய்ந்த கோபுரம் அடுத்தது என பட்டியல் நீண்டுகொண்டே போனது.

அதன் பிறகான சுற்றுலா எண்ணம் உள்ளூரை விட்டுவிட்டு, உலகளவில் பரந்து விரிந்தது என்பதுதான் உண்மை. எப்படியாவது உலக அதிசயங்களைப் பார்த்துவிட வேண்டுமென ஆசை.

உலக அதிசயங்களின் வரிசை அடிக்கடி மாறும் என்பதுகூட‌ அப்போது எனக்குத் தெரியாது. இந்த உலக அதிசயங்கள் ஏழா அல்லது ஒன்பதா என்பதில் இன்னமும் குழப்பம்தான்.

அப்பாவை அழைத்துப் போக சொல்ல முடியுமா ?  சொன்னாலும் நடக்கிற காரியமா ?

எனவே வேலைக்குப் போனதும், பணத்தை சேமித்துக்கொண்டு, முதல் வேலையாக‌ ............. !  ஹா ஹா ஹா !!

வந்தது வாய்க்கும், கைக்குமே பத்தவில்லை. வாழ்க்கை என்பது என்னவென்று புரிய ஆரம்பித்ததும் சுற்றுலா எண்ணத்தைத் தூக்கிக் குப்பையில் போட்டாச்சு.

இப்படியாக நான் பாட்டுக்கும் என் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென‌ Jurassic Park படம் வந்தது. படம் பார்த்தபோது Dinosaur ஐ விட அதில் வரும் நீர்வீழ்ச்சியைப் பார்த்துத்தான் நான் வியந்தேன்.

பிறகு அது நயாகரா என்று கேள்விப்பட்டு, அதை நானும் நம்பி, அக்காட்சி 'எப்படி எடுக்கப்பட்டது' என்ற சூட்சுமம் தெரியாமல், எப்போதாவது ஒரு சான்ஸ் கிடைத்தால் நயாகராவைப் பார்த்துவிட வேண்டும் என முதல்முறையாக உலக அதிசயங்களில் இருந்து வெளியில் வந்தேன்.

லிஸ்டில் இருந்த ஒன்றையாவது பார்த்தேனா என்றால் ? :)))))  அதுதான் இல்லை.

சில வருடங்களுக்கு முன்புகூட 'மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு ஓட்டுப் போட்டு ஜெயிக்க வைத்தால், உலக அதிசயத்தில் இடம்பெறச் செய்யலாம்' என ஓட்டு போடச் சொன்னார்கள். 

கண்டிப்பாக ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் , "அட, நானும் ஒரு உலக அதிசயத்தைப் பார்த்துவிட்டேனே" என பெருமையாக சொல்லிக்கொள்ளலாம் என ஆசையாக இருந்தேன் !

ஒருசமயம் இதுவரை இரண்டு நாடுகளாகப் பிரித்துக்கொண்டிருந்த‌ ஒரு சுவரை உடைத்துக்கொண்டு மக்கள் வெள்ளம் கரைபுரண்டோடியதைப் பார்த்து எனது லிஸ்டில் அந்த இடத்தையும் சேர்த்துக்கொண்டேன்.

இப்போது புது உறவு ஒன்று அங்கே பூத்திருப்பதால் என்றைக்காவது அதுவும்கூட‌ நிறைவேறலாம்.

சமீபத்தில்கூட‌, தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்த மிக‌ நெருங்கிய உறவு ஒன்று திடீரென தொடர்பு எல்லைக்குள் வந்து, வேலை விஷயமாக தான் வட இந்தியா வந்திருப்பதாகவும், பிடித்தால் அங்கேயே தங்கிவிட முடிவு செய்திருப்பதாகவும் சொல்லிவிட்டு, அடுத்த முறை இந்தியா வரும்போது நேரே, அங்கேயே வந்துவிடும்படி எனக்கு அழைப்பும் விடுக்கப்பட்டது.

ஆஹா, இன்னார் மூலம் நம் வட இந்திய‌ கனவு நிறைவேறப் போகிறது என நினைத்த சில வாரங்களிலேயே, " சாப்பாடு பிடிக்கல, ஹிந்தி தெரியாம காலத்த ஓட்ட முடியாதுபோல, ஊருக்குக் கிளம்பிடலாம்னு நினைக்கிறேன்" என சொல்ல‌வும், அடித்துப் பிடித்து "அப்படியெல்லாம் கிடையாது, கொஞ்ச நாட்களானால் எல்லாம் சரியாகும்" என சொல்லி, என் கனவை நிறைவேற்றிக் கொள்ள, இஷ்ட தெய்வங்களை எல்லாம் துணைக்கு அழைத்திருக்கிறேன், அழைத்தவரின் மனதை மாற்ற !!

படிக்கும் காலங்களில் மட்டுமல்ல, வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் இடையிடையே பல ஊர்கள் அந்த சுற்றுலா லிஸ்டில் வந்து சேரும். போகிறேனோ, இல்லையோ லிஸ்ட் மட்டும் நீஈஈண்டுகொண்டே இருக்கிறது :)