Thursday, June 11, 2015

சுழலும் உலக உருண்டை !



சமீபத்தில் ஒரு நாள் சான்ஃப்ரான்சிஸ்கோ 'கோல்டன் கேட் பார்க்'கில் உள்ள கலிஃபோர்னியா அகாடமி ஆஃப் சயின்ஸஸ் _ ல் பலவற்றை ஆவலுடன் பார்த்துக்கொண்டே வந்தபோது, விடாமல் சுழன்றுகொண்டிருந்த இந்த பிரம்மாண்டமான உலக உருண்டை என்னை ஈர்த்தது.

அருகில் சென்று பார்த்தபோது ....... ஆமாம் ......... இப்போது உங்களுக்கு வருகிறதே அதே போலத்தான், எனக்கும் பழைய நினைவுகள் வந்துபோயின.


எங்கள் ஊரில் வறுமையோ வசதியோ எப்படி இருந்தாலும் எல்லோருக்குமே சொந்தமாக ஒரு வீடு இருக்கும், அவ்வீட்டுக்குப் பின்னால் நீளமாக ஒரு தோட்டம் இருக்கும்.

நீளமானத் தோட்டத்தின் முன் பகுதி மட்டுமே பயன்பாட்டில் இருக்கும். பின்னால் உள்ள பகுதியில் மரம், செடி, கொடிகள், புதர், பூண்டுகள் என மண்டிக் கிடக்கும்.

இந்த இரண்டு பகுதிகளுக்கும் இடையில் ஒரு பெரிய பள்ளம் இருக்கும். அவர்கள் பாஷையில் சொல்வதானால் அது 'கிணறு'. மேலே உட்கார்ந்தால் போதும், நாம் தானாகவே சர்ர்ர்ரென்று கீழே போய்விடுவோம். ஆனால் மீண்டும் மேலே ஏறி வருவதென்பது பெரிய சவால்தான்.

மண் புழுதிதான். 'போகக் கூடாது' என திட்டு விழும். எங்களுக்கும் தெரியும்தான், இருந்தாலும் விடமாட்டோம். அப்போதைக்கு எங்களுக்கெல்லாம் அதுதான் குட்டி ரோலர் கோஸ்டர்.

அதில்தான் தண்ணீர் எடுத்துக் குடித்ததாக எங்கள் ஆயா சொன்னால் எங்களுக்கு அது காமெடியா தெரியும்.

நாளடைவில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து போனதால் கிணற்றில் நீர் ஊறவில்லை என பேசிக்கொள்வார்கள். சாதாரண தலைவலி, ஜுரம் என்றால்கூட தெரு பைப் தண்ணி குடிச்சுதான் உடல்நிலை கெட்டுப் போனதாகவும் சொல்லுவார்கள்.

இந்த நிலத்தடி நீர் பிரச்சினை வீட்டிற்கு மட்டுமல்ல நிலத்திற்கும் உண்டு. வருடந்தோறும் கழனி & கொல்லியில் உள்ள கிணற்றின் ஆழம் அதிகமாகிக்கொண்டே போகும்.

கோடையில் எல்லோரது நிலத்துக் கிணற்றிலும் பள்ளம் வெட்டும் பணி நடக்கும். நீர் மோட்டார் வந்த பிறகு பள்ளம் வெட்டுவது நின்றுபோனது.

அப்படி பள்ளம் வெட்டும்போது பொதுவாக எல்லோரும் சொல்லுவது, ' நெய்வேலியில நிலக்கரி சுரங்கம் வெட்றதாலதான் சுத்து வட்டாரத்துல இருக்கற தண்ணி எல்லாம் வத்திப்போச்சு", என்பார்கள்

ஒருமுறை அப்படி பள்ளம் வெட்ட வந்தவர்களீடம் எங்க அப்பா, " இப்படியே வர்ற வருமானத்தை எல்லாம் கிணத்துல பள்ளம் வெட்டவே செலவு பண்ணினா என்னத்த பயிர் வச்சு என்னத்த பண்றது" என சலித்துக்கொண்டார்.

அதற்கு அவர்களில் ஒருவர், " இப்படி தோண்டிகினே போனா ஒரு நாளைக்கு அமெரிக்காவே வந்துடும் " என்றார். அதைக் கேட்டதும் அங்கிருந்த எல்லோரும் சிரித்தனர்.

ஆனால் ஆரம்பப் பள்ளியின் இடைக்காலத்தில் இருந்த எனக்கோ, 'ஏன் இவங்க இப்படியே வெட்டிட்டு போய் அமெரிக்காவுல மேல ஏறி வரக்கூடாது?' என்றே தோன்றியது.

அப்போதைக்கு உள்ளே எங்க வீட்டுக்குழம்பு, உங்க வீட்டுக்குழம்பு, பக்கத்து வீட்டு எதிர் வீட்டுக் குழம்பெல்லாம் சேர்ந்து கொதிச்சிட்டிருக்கிறது தெரியாதே.

கூடவே இன்னொன்றும் தோன்றியது, அதாவது 'இந்தியாவுக்குப் பின்னால் அந்தப் பக்கம் அமெரிக்கா இருக்குமோ ! ' எனவும் சந்தேகம் வந்தது.

ஒருவேளை அந்த ஆள் சொன்னது சரிதானோ !!
இது புத்தகத்தில் தெரிய வாய்ப்பில்லை. தலைமை ஆசிரியர் அறையில் ஒரு மூலையில் தூங்கிக்கொண்டிருக்கும் உலக உருண்டையில் பார்க்கலாம். ஆனால் அங்கு சென்று, அனுமதி வாங்கி, ஆராய்ச்சி செய்யும் தைரியம் எல்லாம் அப்போதைக்குக் கிடையாது.

ஏதாவது ஒரு வேலையாக அந்த அறைக்குப் போக நேர்ந்தால் அதை ஒரு பார்வை பார்க்காமல் வரமாட்டேன். கண்கள் தானாக அங்கேதான் போகும்.

ஒருவேளை நான் தலைமையாசிரியரிடம் போய் கேட்டு, அவரும் என்னைப் பாராட்டி, புவியியல் ஆசிரியரை வரவழைத்து, என்னுடைய சந்தேகத்தை நிவர்த்தி செய்து, பின்னாளில் அப்பாடத்தில் சிறந்து விளங்க உதவி இருக்கலாம்.

அல்  ல  து ........ அந்த நாளில் நம் ஊர் வழக்கப்படி "எவ்ளோ தைரியம் இருந்தா, இருந் தாஆஆஆ எங்கிட்டயே வந்து உலக உருண்டைய பாக்கணும்னு கேட்டிருப்ப ? " என முதுகில் நாலு சாத்து சாத்தி நாள் முழுவதும் அந்த அறையின் முன்னால் முட்டி போட வைத்து, பள்ளியை விட்டே ஓட வைத்திருக்கலாம் !!

இப்போதும் இந்த நினைவுகள் அடிக்கடி வந்து நிழலாடும். ஏனோ அந்தப் பள்ளி மட்டுமல்ல, நான் படித்த வேறு எந்தப் பள்ளியிலுமே அதை நகர்த்தி வைத்து நான் பார்த்ததில்லை.

13 comments:

  1. "உலக உருண்டை" என்று தலைப்பு (டைட்டில்) வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். :)

    ReplyDelete
  2. ஓஹ்...எடிட்டிங் நடந்துகொண்டிருக்கிறது போலே...ஹிஹி...சாரி! ;)

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா பதிவு போட்டு ரொம்ப நாள் ஆச்சா, அதான் ஒரே குழப்பம் !

      பார்த்தால் தலைப்பையும் காணோம், ஒரு வழியா சரி செய்தாச்சுன்னு நினைக்கிறேன்.

      Delete
  3. வணக்கம்
    பார்க்க வேண்டும் என்னவென்று ஆராய வேண்டும் என்ற எண்ண உணர்வுக்கு வழி தேடிய தங்களுக்கு எனது பாராட்டுக்கள்... அதை பதிவாக வெளியிட்டமைக்கு நன்றி.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி ரூபன்.

      Delete
  4. தோண்டி தேடுதல்... ஹா... ஹா...

    ReplyDelete
  5. அப்பப்பா... உலகத்தையே வலம் வந்திட்டீங்க சித்ரா. உலகஉருண்டை பற்றியோ,மியூசியம் பற்றியோ சொல்லவர்றீங்க என்று பார்த்தால், கிணறு வெட்ட (பூதம்) அமெரிக்கா வந்த கதை சுவாரஸ்யமா இருந்திச்சு..
    எங்க ஊர்ல தண்ணீர் பிரச்சனை அவ்வளவாக இல்லை. நீங்க சொன்ன அந்த பள்ளம் எங்க அம்மம்மா வீட்டு பக்கம் இருந்தது. போனால் ஆசைதீர விளையாடுவது. இப்பவும் இருக்கு.
    உலக உருண்டை எங்க ஸ்கூலிலும் இருந்தது சித்ரா.
    //எந்தப் பள்ளியிலுமே அதை நகர்த்தி வைத்து நான் பார்த்ததில்லை.// ஹா...ஹா....நீங்க சொன்னது மிகச்சரி.

    ReplyDelete
    Replies
    1. ப்ரியா,

      எனக்கு மியூஸியம் கொஞ்சம் போர்தான் ....... இதில் உங்களுக்கும் சொல்லி நீங்களும் பொறுமை இழக்க எனக்கு விருப்பமில்லை ஹா ஹா :)))) இல்லையில்லை இங்கு நன்றாகவே இருந்தது. நேரமிருக்கும்போது படங்களைப் போட்டு விடுகிறேன்.

      உங்க ஸ்கூல் உலக உருண்டையும் அப்படித்தானா !

      தலைப்புக்குத்தான் நேரம் செலவானது, பேசாமல் 'கிண்று வெட்ட ....... வந்தது அமெரிக்கா'னு போட்டிருக்கலாம். உங்க நினைவுகளையும் இங்கே பகிர்ந்துகொண்டதில் மகிழ்ச்சி ப்ரியா.

      Delete
  6. ஹஹஹஹாஹ் ஆமா பூமியைச் சுற்றினா நாமும் சுழலத்தானே செய்கிறோம்....அப்படியே உலகம் முழுக்கச் சுற்றிடலாமோ....கிணறு அமெரிக்கா வரை ஒரு சுரங்கப்பாதை அமைக்கச் சொல்லுங்கப்பா...ஆனால் ஓண்ணு இடைல இந்த விசா அது இதுனு எதுவும் இருக்கப்டாது.....நினைச்சா அங்க இல்லைனா இங்க அப்படினு மாறி மாறி வந்துட்டுப் போலாம்ல....

    தங்கள் அனுபவ விவரணம் அருமை......ஆம் இந்தப் பூமி உருண்டையைச் சுற்றி பல நாடுகளை மனதின் கனவினில் கண்டதுண்டு...

    உலகமே உருண்டை சின்னதுதான் பாருங்க நீங்க அங்கருந்து பதிவு எழுத நாங்க உருண்டையின் இந்தப்பக்கமிருந்து கருத்திட...நீங்க பார்க்க நாங்க பார்க்க.....

    ReplyDelete
    Replies
    1. கீதா,

      'விசா அது இது எது'னு எதுவும் இல்லாமல் இருந்தால் நன்றாகத்தான் இருக்கும். சொன்னால் யார் கேட்கிறார்கள் !

      உங்கள் கனவு விரைந்து நிறைவேற வாழ்த்துக்கள் !

      "நீங்க அங்கருந்து பதிவு எழுத நாங்க உருண்டையின் இந்தப்பக்கமிருந்து கருத்திட...நீங்க பார்க்க நாங்க பார்க்க....." .................பின்னூட்டத்திற்கான பதில் மட்டும் வந்து சேர இவ்வளவு நாட்களானதன் காரணம் நான்தான். வருகைக்கு நன்றி கீதா.

      Delete
    2. அட என்ன சகோதரி துளசி, கீதா இருவரும்தான் கலந்து இந்த பதில் ஹஹஹஹ்ஹ் சும்மா உங்கள கலாய்த்தல் அவ்வளவே....என்னன்னா கருத்து இருவரும் என்றாலும் பதிவேற்றம் எல்லாமே கீதாவின் இருப்பிடம் சென்னையிலிருந்துதான்.....தலைஅமையகம்....எனவே கீதா கருத்துடன் கொஞ்சம் கீதாவின் நடையும் சேர்ந்துவிடும்....சகோதரி பரவாயில்லை அடுத்தாப்ல பூக்கள் ஃபோட்டோ போட்டு எங்களுக்கு ஒரு பொக்கே அனுப்பிடுங்க....கூல்!

      Delete
    3. சகோ துளசி & கீதா,

      இனி இப்படியே எழுதறேன் ஹா ஹா ! அடுத்த பதிவில் கொஞ்சம் வித்தியாசமான பூங்கொத்து இருக்கு, அதை எடுத்துக்கோங்க ! கண்டிப்பா ஆனந்தக் கண்ணீர் வந்துடும்.

      வருகைக்கு நன்றி T & G.

      Delete