Wednesday, July 1, 2015

எதிர்பாராத உபசரிப்பு ! _____ நிறைவுப் பகுதி

கதவைத் திறந்துகொண்டு பாட்டி ஒருவர் வெளியே வந்து, "யாரூ ?" என்றார்.

தாங்கள் யாரென்றும், ஐயாவைப் பார்க்க வந்ததாகவும் சொன்னாள் காயு. திண்ணையைக் காட்டி உட்காருமாறு சொல்லிவிட்டு பாட்டி உள்ளே சென்றார்.

தன் மகன் இன்னும் வீட்டுக்கு வரவில்லை என்று சொல்லிக்கொண்டே வெளியில் வந்த பாட்டியுடன், கூடவே ஒரு சொம்பில் தண்ணீரும் இரண்டு டம்ளர்களுமாக அழகான அவரது பேத்தியும் வந்தார்.

பாட்டி ஒரு டம்ளரில் தண்ணீரை ஊற்றி காயுவிடம் கொடுத்தார். இன்னொரு டம்ளர் அலமுவிடம் நீட்டப்பட்டது.

"வேண்டாம் இப்போதுதான் குடித்தேன்" என அலமு மறுத்துவிட்டாள்.

"சார் வந்தா நாங்க வந்ததா சொல்லுங்க, கிளம்புகிறோம்", என கிளம்பினர்.

இப்போது பாட்டி உள்ளே பார்த்து ஒரு குரல் கொடுத்தார். பேத்தி வட்டா செட்டுகளில் நுரை ததும்பும் காபியை ஒரு தட்டில் வைத்து எடுத்து வந்தார்.

அலமு காயுவிடம் 'நோஓஓ' என கண்ணாலேயேக் காட்டினாள். ஆனால் காயுவோ பாட்டி வட்டா செட்டைத் தன்னிடம் கொடுக்கும்போது வயிறும் , மனமும் சேர்ந்து மறுக்க நினைத்தும் முடியவில்லை, தன் இயலாமையால் வாங்கிக்கொண்டாள்.

வெயிலைக் காரணம் காட்டி அலமு இப்போதும் "வேண்டாம்" என்று சொல்லிவிட்டாள்

தண்ணீர் & காபி குடித்த டம்ளர்களை எடுக்க வந்த பேத்தி அவற்றின்மீது தண்ணீர் தெளித்துவிட்டு எடுத்துச் சென்றார்.

காயு அதிர்ச்சியுடன் அலமுவைப் பார்த்தாள். அலமுவோ உம்மென்று முகத்தை வைத்துக்கொண்டு தலையை ஆட்டிக்கொண்டிருந்தாள.

"ஐயா வந்தால் நாங்கள் வந்ததாகச் சொல்லுங்கள்" என்று மட்டும் சொல்லிவிட்டு படிகளில் இறங்கினர்.

இப்போது பாட்டி, "ம் ம் சொல்கிறேன்" என்று சொல்லிக்கொண்டே அந்த இடத்தை தண்ணீர் விட்டுத் துடைத்தார்.

"ஹலோஓஓ, பாட்டி & பேத்தி, எங்க அப்பா எவ்ளோ பெரிய புது வீடு கட்டி வச்சிருக்கார் தெரியுமா ! இங்க நான் உட்கார்ந்திருந்தேன்னு தெரிஞ்சா எங்க பாட்டி என் தோல உரிச்சு எடுத்துருவாங்க, அதுவும் தெரியுமா? ", என ஏறிப்போய் அவர்களிடம் குட்டிப் பசங்க கணக்காய் கத்திவிட்டு வரணும்போல் இருந்தது காயுவிற்கு.

பாட்டி பரவாயில்லை ........ வயதானவர், அந்த நாள் பழக்கம், ஆனால் பேத்தி ..... ? இவர்களைவிட நான்கைந்து வயதுதான் இளையவராக இருப்பார். அவராவது கொஞ்சம் யோசிச்சிருக்கலாம்.

உட்காரத் திண்ணையைக் காட்டியபோதே அலமு விழித்துக்கொண்டாள். ஆனால் இவையெல்லாம் புரிய காயுவிற்கு நேரமெடுத்தது.

நடந்த விஷயத்தை சோஷியல் ஐயாவிடம் சொல்ல வேண்டாம் எனவும், அவராகக் கேட்டால் பார்த்துக்கொள்ளலாம் எனவும் முடிவெடுத்தனர்.

பிறகு நிச்சயதார்த்த வீட்டில் தலைமை ஐயா, அவரது மனைவி, திருமணப் பெண் இவர்களுடன் பேசிக் கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை.  பிறகு அவர்களிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினார்கள்.

வெள்ளியுடன் அரசுத்தேர்வு முடிந்து சனிக்கிழமை கடைசி வேலை நாள், அரை நாள் மட்டுமே பள்ளி. அடுத்த நாளிலிருந்து கோடை விடுமுறை. எனவே வெளியே சென்றிருந்த எல்லோரும் அன்று பணிக்குத் திரும்பினர்.

அன்று எல்லோரிடமும் சகஜமாக இருந்த சோஷியல் ஐயா இவர்களைக் கண்டும் காணாததுபோல் இருந்தார்.

தாங்கள் அவர் வீட்டிற்கு போன விஷயம் தெரியாது என்றால் அவர் சாதாரணமாகப் பேசியிருக்க வேண்டும். அல்லது தெரிந்து மனதில் சஞ்சலம் இருந்திருந்தால் ஒரு 'ஸாரி' சொல்லியிருக்க வேண்டும்.

இது எதுவுமே இல்லாமல் அவர் நடந்துகொண்டதைப் பார்த்தபோது தோழிகளுக்கு அதிர்ச்சியாய் இருந்தது. உண்மை என்ன என்பதை இரு தரப்புமே தெரிந்துகொள்ள விரும்பவில்லை.

கோடை விடுமுறை முடிந்து, மீண்டும் பள்ளி திறந்து, மதிய உணவு இடைவேளையும் வந்தது.

" எங்கே ஐயாவைக் காணோம்?"  என்றார் ஒருவர்.

"அவர் இன்னைக்கு வந்திருக்காரா? வரலைன்னு நினைக்கிறேன். காலையிலிருந்தே ஆளைப் பார்க்கவில்லை" என்றார் மற்றொருவர்.

"யாராவது முதல்நாளே வராம இருப்பாங்களா ? வந்திருக்கார்" என்றார் இன்னொருவர்.

அப்போது காயுவும் அலமுவும் ஒருவரையொருவர் பார்த்துப் புன்னகைத்தது, "நாங்க இருக்கும்போது அவர் எப்படி இங்கு வருவார் ? " என கேட்பது போல் இருந்தது .......(முற்றும்)

12 comments:

  1. 2வது பார்ட்டில சூப்பர் சஸ்பென்ஸை வைச்சு சரக்குன்னு எதிர்பாராத திசையில ஒரு திருப்புத் திருப்பிக் கதைய முடிச்சுட்டீங்க போங்க! :) வெரி நைஸ்! :)

    ReplyDelete
    Replies
    1. "சரக்குன்னு எதிர்பாராத திசையில ஒரு திருப்புத் திருப்பி" ____ மகி, நெஜமாவா ? கருத்தைப் பார்த்ததும் என்னாலேயே என்னை நம்ப முடியல, ஹா ஹா ஹா !!

      வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி மகி !

      Delete
  2. பாட்டி எப்படியோ அப்படியே பேத்தி... தண்ணீர் தெளித்து... கொடுமை...

    ReplyDelete
    Replies
    1. வயசானவங்கள விட்டுடுவோம், ஆனால் வாரிசுகளும் அப்படியே இருப்பது கொடுமைதான்.

      வருகைக்கு நன்றி தனபாலன்.

      Delete
  3. ஆகா... யோசிக்க முடியாத திருப்பம் ...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி அனு.

      Delete
  4. அடுத்த தலைமுறையும் இப்படியா.......ம்ம்ம் சரிதான்....நல்ல கதை....ஆனால் திடீரென்று முடிந்தது போல் இருக்கிறது இரு தோழியரும் அவரிடம் பேசி இருக்கலாமோ..அதை நீங்களே கூடச் சொல்லி இருக்கின்றீர்கள்...//உண்மை என்ன என்பதை இரு தரப்புமே தெரிந்துகொள்ள விரும்பவில்லை.// ம்இதுதான் பலரும் செய்வது....கதை நடை அருமை...

    ReplyDelete
    Replies
    1. சகோ துளசி & கீதா,

      கதை இருபது வருடங்களுக்கு முந்தையது. இப்போது மாறியிருக்கலாம்.

      "இரு தோழியரும் அவரிடம் பேசி இருக்கலாமோ" _____ நோஓஓ, மன உளைச்சல் தோழிகளுக்குத்தான் ! (கீதாவின் மனதில் ........ ஹ்ம்ம்ம், என்னதிது, நாமே பேச வைத்தாலும் ஆசிரியர் விடமாஆஆட்டார் போலிருக்கே !!)

      என் கதையையும் அலசியிருக்கீங்க என்பதில் மகிழ்ச்சி. விமர்சனங்களுக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி சகோ துளசி & கீதா.

      Delete
  5. அடடா.... இப்படியும் சில மனிதர்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் வெங்கட். ஒருவேளை இப்போது மாறி இருக்கலாம், மாறி இருப்பார்கள் என்றே நம்புவோம்.

      தொடர் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி வெங்கட்.

      Delete
  6. ஆவ்வ்வ்.. என் வக்கேஷனால் இப்போதான் வாசிச்சேன். சான்ஸே இல்லை. திருப்பம் எதிர்பாராதது. சூப்ப்பரா இருந்தது கதை.ஆனா மனித மனங்களை நினைக்க..... இப்படியுமா என நினைக்கத்தோன்றியது.

    ReplyDelete
  7. இப்படியும் இருக்காங்களே ! இப்போ மாறியிருக்கலாம்.

    பிஸியான நேரத்துலயும் வந்து எட்டிப் பார்த்ததில் சந்தோஷம் & நன்றி ப்ரியா.

    ReplyDelete