Monday, August 31, 2015

டவுன்பஸ் அனுபவம் !!


ஊருக்குப் போனால் டவுன் பஸ்ஸிலும், ஆட்டோவிலும் ஏறி இறங்காமல் வரமாட்டேன். எனக்குப் பிடித்த வாகனங்கள் இவை இரண்டும்.

அந்த பளிச் வெண்ணிறமும், சிவப்பு நிற கோடும் இருந்த டவுன்பஸ்'களின் நிறம் மாற்றப்பட்டதில் கொஞ்சம் வருத்தம்.

சென்றமுறை ஊருக்குப் போனபோது வேலைப்பளுவினால் ஆட்டோவில் ஏற மறந்தே போனேன். அந்த வருத்தம் இன்னமும் இருக்கிற‌து.

அடுத்த தடவை ஊருக்குப் போனால் ? வேறென்ன ? ஆட்டோ பயணத்தை இரட்டிப்பாக்கிவிட வேண்டியதுதான் :)

ஒரு நாள் மாலையில் பண்ருட்டி பேருந்து நிலையத்தில் கடலூர் செல்லும் டவுன் பஸ்ஸில் நானும் என் பெண்ணும் ஏறினோம். துண்டுபோட்டு ஸீட்டு பிடிக்கும் பழக்கம் இன்னும் இருக்கிறது என்பது புரிந்தது.

என்னவொன்று இந்த தடவை துண்டுக்குப் பதிலாக லன்ச் பேக், டிஃபன் பாக்ஸ் என பொருட்கள் கொஞ்சம் வித்தியாசமாக ஸீட்டுகளில் நிறைந்திருந்தன. பள்ளி விட்டிருக்கிறார்கள் என்பதும் தெரிந்தது.

எப்போதும் அடித்துப்பிடித்து ஏறி இடம் பிடிப்பவர்களைக் கீழே நின்று ரசித்துப் பார்த்துக்கொண்டிருப்பேன். இப்போதும் அப்படியே !

கடைசியாக ஏறி உள்ளே போனால், அந்தளவிற்கு கூட்டம் இல்லை. நாலைந்து பேர் மட்டுமே நின்றிருந்தோம்.

நான் நின்றிருந்த ஸீட்டில் ஒரு பெண்  ஜன்னலோரம்  லன்ச் பேக்கை வைத்துவிட்டு ஸீட்டின் நுனியில் உட்கார்ந்துகொண்டு வெளியில் எட்டி எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தார்.

அவருக்கு முன், பின் இருக்கைகளில் அவரைப் போலவே பெண்கள் அமர்ந்திருந்தனர். எல்லோருமாக பேசி சிரிக்கவும் ஓரிடத்தில் வேலை செய்கிறவ‌ர்கள் அல்லது ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள் என்பதும் தெரிந்தது.

ஸீட்டு காலியாக இருக்கவும், " பேக்'க எடுத்தீங்கன்னா நான் உட்கார்ந்துப்பேன் இல்ல " என்றேன்.

அவரிடமிருந்து " இல்ல, இங்க உட்காரும் ஆள் வந்துட்டே இருக்காங்க" என்ற பதில் வந்தது. சரியென விட்டுவிட்டேன்.

சுமார் பத்து நிமிடங்களுக்குப் பிறகு ஓட்டுனர் வந்து பேருந்தை எடுத்தார். அப்படியே ஆமைபோல் நகர்த்தினார். இன்னமும் அந்த ஸீட்டு காலியாகவே இருந்தது. கடைசி நேரப் பயணிகள் ஓரிருவர் ஓடிவந்து ஏறினர்.

மகள் " அம்ம்மா, யாரும்தான் வரலையே, அந்த ஸீட்டு எதுக்காக அப்படியே காலியா இருக்கணும், இப்போ கேட்டுப் பார்" என்றாள். உண்மையில் என்னைவிட என் மகள்தான் ஆர்வமாய் இருந்தாள்.

கேட்டேன். " பஸ் வெளில போறதுக்குள்ள வந்திடுவாங்க" என்றார் அப்பெண்.

சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டே இருந்தார். இல்லாத ஆளுக்காக‌ ஸீட்டு பிடித்து வைத்திருப்பது என் பெண்ணிற்கு ஆச்சரியமாய் இருந்தது.

இப்போது பஸ் சாலைக்கு வந்து வேகமெடுத்தது.

சிரித்துக்கொண்டே, "இப்போ உட்காரலாமா ?" என்றேன்.

உம்மென்று முகத்தைத் திருப்பிக்கொண்டாரே தவிர அசைந்து கொடுக்கவில்லை.

"கண்டக்டர் வர்றார், ஏன் இந்த ஸீட்ல யாரும் உட்காரக் கூடாதான்னு ? அவரிடமே கேட்கிறேன்,  " என்றேன் நான் .

பத்து நிமிடங்களுக்குள்ளாகவே நாங்கள் இறங்கும் இடம் வந்துவிடும். இருந்தாலும், எனக்கு சீண்டிப் பார்க்க ஆசை.

பிறகு பின் இருக்கையில் இருந்த அவரது தோழியிடம் தான் ஏதோ கண்டு பிடித்துவிட்டது போல், " பார்க்க‌ வெளியூர் மாதிரி தெரியுறாங்க, இந்த ரூல்ஸ் எல்லாம் தெரியாது போல " என கிசுகிசுத்தார்.

" கலைவாணி டீச்சர் பஸ்'ஸ விட்டுட்டாங்கபோல, சரி அந்த‌ ஸீட்டை அவங்களுக்கே விட்டுடுங்க‌ " என உத்தரவு பறந்து வந்தது அத்தோழியிடம் இருந்து .

இவரும் போனால் போகுதுன்னு நகர்ந்து இடம் கொடுத்தார்.

"எனக்கு பண்ருட்டி, உங்களுக்கு ? " என்றேன். பதிலில்லை.

"நம்ம கண்டுபிடிப்பு அநியாயத்துக்கு இப்படி வீணாப் போச்சே " என நினைத்திருப்பாரோ !

ஆனால் அவர் எந்த ஊர் என்பதை நான் கண்டுபிடித்துவிட்டேன் !

' நான் எப்படி கண்டுபிடித்தேன் ' என்பதை இந்நேரம் நீங்களும் கண்டு பிடித்திருப்பீர்களே !!

" நீங்க சொன்ன அந்த சூப்பர் ரூல்ஸ்'ஸைப் போட்ட ஆள் யாருங்க ? தெரிஞ்சிக்கலாமா ? " என்று கேட்க ஆசைதான். கேட்டால் பதில் வந்திருக்கும்னா நெனக்கிறீங்க ?

ஹும்ம்ம், அந்த நாள்'ல நாங்க போடாத ரூல்ஸ்'ஸாஆஆ?  :))))))

Friday, August 28, 2015

எங்கள் வீட்டுத் தோட்டத்தில் _ மிதி பாவக்காய் !



'இவ்ளோஓஓ பாவக்காயா !!'னு கண்ணு வைக்கிறவங்க பதிவு முடிஞ்ச பிறகு, வைக்கலாமா ? வேண்டாமா ? ன்னு  முடிவு பண்ணி வைங்க.

ஏப்ரல் மாதத்தில் ஒருநாள் நம்ம ஊர் கடைக்குப் போனபோது ஒரு அட்டைப் பெட்டியில் குட்டிகுட்டிப் பாவக்காய்கள் இருக்கவும், ஆச்சர்யமாகி, ஏனென்றால் அதற்குமுன் இந்த பாவக்காயை நான் பார்த்ததே இல்லை. காமாஷிமா ப்ளாக்கில் ஒருதடவை பார்த்திருக்கிறேன், வாங்கலாம் எனப் பார்த்தால் ஒன்றும் நன்றாக இல்லை.

அவற்றுள் ஒரு காய் மட்டும் பழுத்து வெடித்து விதைகள் நல்ல சிவப்பு நிறத்தோலுடன் 'பளிச்' என கண்ணைப் பறிக்கவும், எடுத்துக்கொண்டு வந்து 'எங்கே முளைக்கப் போகிற‌து !!' என சும்மா ஒரு தொட்டியில் போட்டுவிட்டு ஏதாவது முளைத்து வந்துள்ளதா என தினமும் ஒருமுறை எட்டிப் பார்த்து ........ பிறகு சுத்தமாக மறந்தே போனேன்.

மே மாதத்தில் ஒருநாள் பருப்புக் கீரையைப் பறிக்கும்போது அவற்றிற்கிடையில் ஒரு குட்டி புது செடி ஒன்று வந்திருக்கவும், இலைகளை வைத்து அது பாவக்காய் என முடிவு செய்து, இலையில் சிறிது கிள்ளி கசக்கி முகர்ந்து பார்த்தால் :) பாவக்காயேதான் !!

                                  பிறகு அதை ராஜமரியாதையுன் கவனித்து .........


அருகில் இருந்த மிளகாய்ச் செடியைப் பற்றிப் படர்ந்து, வளர்ந்து, பூக்கள் விட்டும் காய் வராததால், காத்திருந்து, பிறகு காய்கள் வந்து ..... பெருசாகும் எனப் பார்த்தால் .... விட்டது விட்டபடியே இருந்து காய்ந்து போனது.

ஆண் பூ, பெண் பூ இரண்டும் ஒரே செடியில் பூக்கிறது. பெண் பூதான் காய்க்கிறது, ஆண் பூ கொட்டிவிடுகிறது

நிறைய காய்கள் காய்த்தாலும் சமையலுக்குப் பயன்படாமல் போகிறது. விதை வீரியமில்லாததால் காய்களும் பயனற்று உள்ளது. கொண்டைக்கடலை அளவுதான் உள்ளது.

இருந்தாலும் செடியைப் பிடுங்க மனமில்லாமல் "அழகாத்தானே இருக்கு, இருந்துட்டுப் போகட்டுமே" என விட்டுவிட்டேன். ஒரு காய் பெருசானாலும் ஓடி வந்து உங்களிடம் சொல்லிவிடுகிறேன் !

சந்தேகங்களுக்குப் பதிலளித்த தோட்டம் சிவா'வுக்கும் நன்றி.

       கையைக் காலை ஆட்டி இவங்க நாட்டியமாடும் அழகே தனிதான் !


                                              இனி காய்களைப் பார்ப்போமா !!

Wednesday, August 19, 2015

ஈச்சம் பழத்தின் இனிய நினைவுகள் !!

 கடலூர் டூ புதுவை போகும் வழியில் வாங்கிய ஈச்சம் பழம்
ஒவ்வொருவருக்கும் அவரவர் வீட்டில் ஏதோ ஒரு இடம் ஸ்பெஷலாக இருக்கும். அப்படித்தான் எனக்கும் எங்கள் வீட்டில் மெத்தை ரூம் ரொம்பவே ஸ்பெஷல்.

எங்களின் ஒட்டுமொத்த குறும்புத்தனங்களும் அரங்கேறிய இடமாயிற்றே !

அந்த அறைக்கு இரண்டு வழிகள், ஒன்று வெளி நடையில் இருந்து, மற்றொன்று வீட்டுக்குள்ளிருந்து. அதனால் ஓடிப் பிடித்து விளையாட வசதியாக இருக்கும்.

எங்களுக்குப் பிடித்தது, ஆனால் அதுவே பெரியவர்களுக்குப் பிடிக்காதது என நிறைய விஷயங்கள் உண்டு.

அவற்றுள் முக்கியமானது பழம் பழுக்க வைப்பது.   அதற்கு ஏற்ற இடம்தான் இந்த மெத்தை ரூம். நல்ல வெளிச்சமும், காற்று வசதியும், கொஞ்சம் தவிடு மூட்டைகளும் இருப்பதால் ரொம்பவே பிடிக்கும்.
ஈச்சமரம் மாதிரியே இங்குள்ள மரம்
பெரும்பாலானவர்களின் வீட்டுத் தோட்டத்தில் ஈச்ச மரங்கள் ஒன்றிரண்டு இருக்கும். அதில் இப்படித்தான் குலைகுலையாகக் காய்கள் காய்க்கும்.

எப்படியோ எங்களுக்கும் இந்தக் காய்கள் கிடைக்கும். அவற்றை மெத்தை ரூமிலுள்ள தவிடு மூட்டைகளில் மறைத்து வைத்து பழுக்க வைப்போம்.

ஒவ்வொரு முறையும் தவிடு அள்ளும்போதும் திட்டு கிடைக்கும். தவிடு எடுக்கறவங்க," உங்க அப்பா வரட்டும், சொல்றேன்" என்பார்கள்.

அம்மவைத் தாண்டித்தான் விஷயம் அப்பாவிடம் போகும். அதனால் ஒரு நம்பிக்கை, அம்மா கண்டிப்பாக  போட்டுக் கொடுக்கமாட்டாங்கன்னு :)

எதற்கு வம்பு என ஒரு சிறிய கூடையில் கொஞ்சம் தவிடு போட்டு அதில் இந்தக் காய்களில் பாதியைப் போட்டு மேலே கொஞ்சம் தவிடு தூவி கூடையை ஒரு ஓரமாக வைத்து பழுக்க வைப்போம்.

மீதி காய்களை வீட்டில் உள்ளவர்களுக்குத் தெரியாமல் எடுத்துக்கொண்டு போய் இரண்டு மனைகள் தள்ளியுள்ள எங்கள் தோட்டத்தில் உள்ள வைக்கோல் போரில் துளைத்து, அதில் இந்த ஈச்சங்காய்களைக் கொட்டி மூடிவிடுவோம்.

காய்கள் கொஞ்சமாவது செங்காயாக இருந்தால் பழுக்கும். படு பிஞ்சாகத்தான் எங்களுக்குக் கிடைக்கும். அதைத்தான் பழுக்க வைப்போம்.

தினமும் போய் அவற்றை பார்த்துவிட்டு வருவோம். எப்போதெல்லாம் பார்க்கப் போகிறோமோ அப்போதெல்லாம் 'பழுத்தாச்சா' என தின்று பார்ப்போம்.

பச்சைக் காய்களாதலால் மேல் தோல் காய்ந்து போகுமே தவிர பழுக்காது. கடைசியில் காய்ந்துபோய் ஒன்றுக்கும் உதவாமல் போகும்.

ஒழுங்கா அவை மரத்திலேயேப் பழுத்தாலும் சாப்பிட சுவையாக இருந்திருக்கும். அதை 'பழுக்க வைக்கிறோம்' என்ற பெயரில் பிஞ்சிலேயேப் பறித்து வீணாக்குவதே வருடந்தோறும் நடக்கும் வேடிக்கை.

சோகமயமாக இருக்கும் எங்களுக்குக் கடைசியில் யார் வீட்டிலிருந்தாவது குலைகுலையாக ஈச்சம் பழங்கள் கொடுத்துவிடுவார்கள். பிறகென்ன இஷ்டத்திற்கும் பிச்சு பிச்சு பறித்து தின்போம்.

ருசித்தவர்களுக்குத்தான் தெரியும் அதன் சுவையை ! பனங்கிழங்கு, நுங்கு மாதிரிதான் இதுவும்.
ஃப்ரெஷ் பேரீச்சம் பழம்
அமெரிக்கா வந்தபோது உழவர் சந்தையில் படத்திலுள்ள இந்த பழங்களைப் பார்த்ததும், ஏதோ பிஞ்சு தேங்காய்கள் என்றுதான் முதலில் நினைத்தேன். 'இதை வைத்து என்ன செய்வார்கள்?' என ஒரு சந்தேகம்.

அடுத்த வாரம் போனபோது அதே காய்கள். இந்த முறை கேட்டாச்சு. 'ஃப்ரெஷ் பேரீச்சம் பழம்' என்றனர்.

எங்களுக்கோ ஈச்சம் பழத்தின் நினைவு வரவும், விலை அதிகமானாலும் பரவாயில்லை என வாங்கித் தின்று பார்த்தோம். சுவை ஈச்சம் பழத்தின் செங்காய்களைப் போலவே இனிப்பாக இருந்தது.

அதிலிருந்து எப்போது, எங்கே பார்த்தாலும் கொஞ்சமாவது வாங்கிவிடுவோம்.


படத்திலுள்ளவை இந்த வாரம் ஒரு மெக்ஸிகன் பழக்கடையில் வாங்கியவை. முன்புபோல் உழவர் சந்தைக்கு வராத சில பழங்களில் இதுவும் ஒன்று.

ஆனாலும் உழவர் சந்தையில் கிடைக்கும் பழத்தின் சுவைபோல் வெளியில் வாங்கும் பழத்தில் இருப்பதில்லை.

எனக்கொரு சந்தேகம், பழமாகக் கிடைக்கும்போது எதற்காக நாங்கள் அவற்றை ஒளித்து & மறைத்து பழுக்க வைத்தோம் என இதுவரை புரியவில்லை.

ஆனால் இங்கே வாங்கிய காய்களை இதுவரை பழுக்க வைக்க முயற்சித்ததில்லை.

மெத்தை ரூமுக்கும், தவிட்டுக்கும், வைக்கோல் போருக்கும் எங்கே போவது :)

Monday, August 17, 2015

பிரச்சினை என்னவோ ஒன்றுதான் !!



இட்லி மாவு !

புளிக்கலைன்னாலும் பிரச்சினை !

புளிச்சு வந்தாலும் பிரச்சினை !!

Sunday, August 16, 2015

கண்ணாமூச்சி !!



சென்ற வாரத்தில் ஒருநாள் வியர்க்க, விறுவிறுக்க(நெஜமாத்தான்) வாக் முடிச்சிட்டு அப்பார்ட்மென்ட் கதவை நான் திறக்க முயற்சிக்க, எனக்கும் முன்னால் கம்பிகளுக்கிடையே புகுந்து நுழைந்தவரைத் தேடினால் ஆளைக் காணோம்.

பக்கத்திலேயே புதரில் மறைந்து நின்று எப்படி பார்க்கிறார் !! எந்தப் பக்கம் வந்தாலும் அந்தப் பக்கமாகத் திரும்பி போஸ் கொடுத்தார்.

Tuesday, August 11, 2015

பதினைந்து வருட பந்தமாயிற்றே !!



வெயிலுக்குப் பயந்து சனிக்கிழமை காலையிலேயே 'வாக்' போய் வந்தாச்சு. மாலை வெளியில் போகக் கிளம்பியபோது car remote key ஐக் காணோம். சாவிக் கொத்திலிருந்து அது மட்டும் தனியாகக் கழண்டுவிட்டிருந்தது.

அங்கும், இங்கும், எங்கும் தேடியதில் கிடைக்கவேயில்லை. பிறகு 'ஒருவேளை 'வாக்' போனபோது தொலைந்து போயிருக்கலாம்' என்ற முடிவுக்கு வந்தாச்சு.

பதினைந்து வருடங்களுக்கும் மேலாகக் கூடவே இருந்தது, திடீரெனத் தொலைந்து போனால்?

மாற்று remote key இருக்கிறது. இருந்தாலும் வேண்டாதவர் கையில் கிடைத்து, அவர் இந்தப் பக்கமாக வந்து அழுத்தப்போய், "இதோ, நான் இங்கே இருக்கிறேன்" என காட்டிக் கொடுக்கப்போய் ...... வேடிக்கைதான். ஸ்டியரிங் லாக் இருப்பதால் பயமில்லை ...... இருந்தாலும் ?

வெளியில் போகும்போது பார்த்திருக்கிறேன், நம்மை மாதிரி நல்ல மனசு உள்ளவங்க:) தொலைத்தவர்களின் சாவியை எடுத்து மரத்தில் கட்டி வைத்திருப்பதை.

அப்போதெல்லாம், 'இது நல்ல ஐடியாவா இருக்கே' என சொல்லிக்கொண்டே போவோம்.

அதுபோல் 'நம்முடைய சாவியும் எங்காவது கட்டப்பட்டிருந்தால் நல்லாருக்குமே' என ஞாயிறன்று வாக் போகும்போது பேசிக்கொண்டே போனோம். ம்ம்ஹூம், அதைப்பற்றி பேசியதுதான் மிச்சம்.

'சூட்கேஸிலிருந்து மாற்று 'ரிமோட் கீ'யை நாளை கண்டிப்பாக தேடி எடுத்து வைக்கவேண்டும்' ___ நான் மனதினுள்.

திங்கள் காலை இவர் அலுவலகம் செல்ல ஷூவைப் போடும்போது காலில் ஏதோ தட்டுப்படவும் ..... பார்த்தால் ? ....... தொலைந்ததாக நினைத்த 'ரிமோட் கீ'யேதான் :))))) 'ஷூ'வினுள்ளேயே விழுந்திருக்கிறது ! அதுவும் வெள்ளிக்கிழமை மாலையே !!

எங்கள் வீட்டில் 'ஆட்டைத் தோலின் மேலேயே போட்டுக்கொண்டு தேடிய கதை'யில் இது பத்தோடு பதினொன்றானது !! ஹா ஹா ஹா :))))))

பதினைந்து வருடங்களுக்கும் மேலான பந்தமாயிற்றே, அவ்வளவு எளிதில் நம்மை விட்டுப் போய்விடுமா என்ன !!