Wednesday, September 23, 2015

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை !

'இந்த வருடம் பத்தாம் வகுப்பு மாணவிகள் தஞ்சாவூருக்கு சுற்றுலா போகிறார்களாம்' என்ற ரகசியம் கசிந்ததும், முதலில் நினைவுக்கு வந்தது தஞ்சாவூரு தலையாட்டி பொம்மைதான்.

என்னுடைய‌ சின்ன வயசுல அப்பா தஞ்சாவூர் போனபோது இந்த பொம்மையை வாங்கிக்கொண்டு வந்து கொடுத்தார். பல வருடங்களுக்கு அது என்னுடைய விளையாட்டுப் பொருள்களுடன் ஒரு அங்கமாக‌ இருந்தது.

முறையான அறிவிப்பு வந்ததும் கூடிய சீக்கிரமே பத்து ரூபாயைக் கட்டிவிடுவதாகச் சொல்லி முதல் ஆளாக என் பெயரைப் பதிவு செய்துவிட்டேன்.

விடுதி சலுகையால் எங்களுக்கெல்லாம் பத்து ரூபாய். வெளியில் இருந்து வரும் மாணவிகளுக்கு இருபது ரூபாய்.

அப்பாவுக்குக் கடிதம் எழுதி விவரங்களைச் சொல்லி ..... வரவழைத்து ...... இல்லையில்லை ..... அப்பா தினமும் எங்களைப் பார்க்க வருவார் :) அதனால் பிரச்சினை இல்லாமல் உடனே கட்டியாகிவிட்டது.

என் சகோதரி பூம்புகார், வேளாங்கண்ணி, நாகூர், நாகப்பட்டினம் என அவரது வகுப்புடன் சென்றுவிட்டார்.

ஒரு வெள்ளிக்கிழமை அதிகாலையில் பேருந்தில் சன்னல் ஓரம் இடம் பிடித்து, சந்தோஷமாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டே, காலை உணவையும் பேருந்திலேயே முடித்துக்கொண்டு, நேரே தஞ்சை பெரிய கோயிலில் இறக்கி விடப்பட்டோம்.

கோயிலின் சிறப்புக்களாக நிறைய சொல்லிக்கொண்டே வந்தார்கள். பல புரிந்தும் சில புரியாமலும் இங்கும் அங்குமாக போய்க்கொண்டிருந்தோம்.

பிறகு ஒரு பூங்காவில் பேருந்துகளை நிறுத்தி மதிய உணவு முடித்துக்கொண்டு ஒரு தேவாலயத்தில் கொண்டுபோய் நிறுத்தி, ..... கிறித்துவப்பள்ளி என்பதால் எங்கு சுற்றுலா போனாலும் கடைசியாக ஒரு தேவாலயத்துக்கு அழைத்துக் கொண்டுபோய் ஜெபம் செய்துவிட்டு, நாங்கள் இங்கும் அங்குமாக சுற்றிக் கொண்டிருக்கும்போது எங்களுடன் வரும் வார்டன்கள், ஆசிரியைகள் அனைவரும் ஆலயத்தில் உள்ள முக்கியமானவர்களுடன் பேசிக்கொண்டிருப்பார்கள்.

இப்போதும் அப்படியே ! மனம் முழுவதும், "எப்போது ஷாப்பிங் விடுவாங்க, எப்போது பொம்மை வாங்கலாம்" என்பதிலேயே இருந்தது.

ஒருவழியாக அவர்களின் உரையாடல் முடிந்து கடைகள் இருக்குமிடத்தில் இறக்கிவிட்டதும் நாலா திசைகளிலும் பஞ்சாய் பறந்துவிட்டோம்.

நானும் அடித்துப் பிடித்து தலையாட்டி பொம்மைகள் இருக்கும் கடைக்குச் சென்று பார்த்தேன். பல வண்ணங்களில் ஆண்க‌ளும், பெண்களுமாகக் கண்ணைக் கவரும் அழகழகான பொம்மைகள்.

பச்சை நிற பெண் பொம்மை என்னைக் கவர்ந்தது, நிறைய பொன்னிற நகைகளுடன், நீளமான ஜடையுடன், ஒரு பக்கமாகப் பெரிய கொண்டையுடனும், அழகான நெத்திச் சுட்டியுடனும் இருக்கவும் வாங்கிவிட்டேன். ( அந்த நாளில் என்னால் அதிகமான முறை வரைந்து பார்க்கப்பட்ட படம் இதுவாகத்தான் இருக்கும்)

பொம்மை விலையும், சுற்றுலாவுக்கான பணமும் ஒன்றுதான். ஆமாம், பொம்மையின் விலை பத்த்த்து ரூபாய்.

எங்களைப் பார்க்க சனிக்கிழமை அப்பா வந்தார். அவரிடம் பொம்மையைக் கொண்டுவந்து கொடுத்து வீட்டிற்கு எடுத்து செல்லச் சொன்னேன்.

'உனக்குதானே வாங்கின, நீ வீட்டுக்கு வரும்போது எடுத்துட்டு வா" என்றார் அப்பா.

எனக்கோ நான் வாங்கிய‌தை வீட்டிலுள்ள‌ எல்லோருக்கும் காட்ட வேண்டுமென ஆசை. அதனால் கொடுத்தனுப்பிவிட்டு விடுமுறைக்காகக் காத்திருந்தேன்.

ஏறக்குறைய ஒரு மாதத்திற்குப் பிறகு விடுமுறை வந்தது, வீட்டுக்குப் போனேன்.

மனம் முழுவதும் பொம்மையின் மேலேயே இருந்தாலும் உறவுகளின் பேச்சு சுவாரசியத்தில் ஆர்வத்தைக் கொஞ்சம் தள்ளிப் போட்டேன்..

பள்ளி விட்டு தம்பி வந்தான். என்னைப் பார்த்ததும் ஆவலுடன் ஓடிவந்து, " அப்பாவிடம் நீ வாங்கி கொடுத்து அனுப்பினியே தலையாட்டி பொம்மை, அதுக்குள்ள என்ன இருந்துச்சு தெரியுமா ? ஒரு கொட்டாஞ்சிக்குள்ள, களிமண்ண அடைச்சு வச்சு, பேப்பர பிச்சு பிச்சு வச்சு ஒட்டி பொம்மை செஞ்சிருக்காங்க" என்றான். காகிதக் கூழைத்தான் அப்படி சொன்னான்.

எந்த ஒரு விளையாட்டுப் பொருளையும் அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்துப்போட்டு அதன் உள்ளே என்ன இருக்கும்னு பார்த்துவிடும் தம்பி இந்த தலையாட்டிப் பொம்மையையும் பிச்சு எடுத்துவிட்டான்.

ஆவலுடன் "வர்றியா காட்டுறேன், தோட்டத்துல கிட‌க்கு", என்றவனிடம் "இப்போ வேண்டாம், அப்புறமா போய் பார்க்கலாம்" என்றேன்.

14 comments:

  1. அடடா!! பொம்மையை ரசிக்கமுடியாமல் போயிடுச்சே!! ஹூம்!! ஆனாலும் உங்க தம்பி பொம்மையை உடைச்சதால்தானே இன்னும் நினைவு வச்சு எழுதிருக்கீங்க? :)

    ReplyDelete
    Replies
    1. அதுசரி X(

      ஆமாம் மகி, அடுத்து அந்த பொம்மையை நான் பார்க்கவே இல்லை :(
      'சரி போயிட்டு போவுது விடு'னு சமாதானம் செய்துக்க வேண்டியதுதான். எங்க பாப்புகூட மலரும் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டபோது வந்த ஞாபகம்தான் :)

      Delete
  2. உருட்டுசட்டி பொம்மைஇது உருண்டு உருண்டு ஆடும் இது தஞ்சாவூரு ரயிலடியில் தம்பிபாப்பா அழுதபோது சின்ன அத்தான் வாங்கித்தந்த சீரான பொம்மை இது. பொம்மை ஓவரால் ஆகிவிட்டது. எவ்வளவு எரிச்சல் வந்திருக்கும். பச்சைக்கலர்தான் யாவரின் விருப்பமும். நல்ல சுற்றுலா. அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. காமாக்ஷிமா,

      ஆஹா, பாட்டு சூப்பரா இருக்கு :))) உங்களுக்கும் பிடிச்ச கலர் பச்சையா! பாடலுடன் பின்னூட்டமும் அருமை அம்மா, அன்புடன் சித்ரா.

      Delete
  3. சித்ரா க்கா, இங்கத்தி நிலைமையும் அது தான், ஆனா நான் வாங்கி வந்ததை எங்கம்மா என் தம்பி கிட்ட இருந்தலாம் காப்பாற்றி என் மகளிடம் கொடுத்தார்கள். அது இப்போ கவலைக்கிடமான நிலையில் என் மகளின் விளையாட்டு பொருட்களுடன் கிடக்கிறது. இனிய நினைவுகள்..)

    ReplyDelete
    Replies
    1. அப்போ எல்லார் வீட்டிலும் இது நடந்திருக்கு :)

      நீங்க விளையாடினதை உங்க பெண்ணும் வைத்து விளையாடுவது ஆச்சரியமா இருக்கு அபி. உங்க நினைவுகளையும் பகிர்ந்துகொண்டதில் மகிழ்ச்சி அபிநயா !

      Delete
  4. அடடா.... தஞ்சாவூர் பொம்மை எப்படி செய்வார்கள் என்று பிரித்து மேய்ந்து விட்டார் போலும்!

    நினைவுகள் பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா அதேதான் :)) தம்ம்ம்பியாச்சே, என்ன செய்வது !

      Delete
  5. அச்சச்சோ கடைசியில் இப்படி ஆயிட்டுதே சித்ரா. ஆசைஆசையாக வாங்கியது . பேசாமல் வைத்திருந்திருக்கலாம். அந்நேரம் உங்க மனநிலை எப்படியிருந்திருக்கும்..
    எங்க வீட்டிலேயும் இருந்தது. கொலுவைக்கும்போது அதெல்லாம் வைப்பது. உடைக்க ஆள் இல்லை. பத்திரமாவே இருக்கும். இருந்தது. பிரச்சனையின்போது எல்லாம் விட்டிட்டு போயாச்சு. ம்.ம்ம் போயிட்டுது.

    ReplyDelete
    Replies
    1. இல்ல ப்ரியா, கொடுத்தனுப்பினதே முக்கியமா அவன் பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால் இப்படி பண்ணுவான் என தெரியாது :) கஷ்டமாத்தான் இருந்துச்சு.

      "பிரச்சனையின்போது எல்லாம் விட்டிட்டு போயாச்சு. ம்.ம்ம் போயிட்டுது." _____ உடைபடுவதைவிட இது இன்னும் அதிகமா வலியைக் கொடுக்கிறதே :((

      Delete
  6. ஒரு நல்ல சிறுகதையை வாசித்தது போல இருந்தது. விரைவில் 'சித்ராவின் சிறுகதைகள்' என்று வலைத்தளம் தொடங்கி எழுதுங்கள். என்னைபோல நிறைய ரசிகர்கள் என் இந்த வேண்டுகோளை வழிமொழியக் கூடும்!

    ReplyDelete
    Replies
    1. வலைத்தளத்துக்கு பேர்கூட ரெடியாயிடுச்சா :))) பேரும்கூட‌ எதுகைமோனையோட சூப்பரா இருக்கு. முயற்சி செய்கிறேன்.

      உற்சாகமான வார்த்தைகளுக்கு நன்றியும், மகிழ்ச்சியும்.

      Delete
  7. தஞ்சாவூர் பொம்மை இப்போதும் மயக்கும் ஒன்று!!! கடைசில இப்படி ஆகி ப் போச்சே சகோ?!!! அப்புறம் வாங்கினீங்களா இல்லையா...

    ReplyDelete
    Replies
    1. அப்புறம் வாங்கலீங்க :( அந்த ஊர் பக்கமே போகவில்லை, எங்க ஊர் பக்கமும் அதைப் பார்த்ததில்லை, என் மகள் பிறந்த பிறகு அவளுக்கு வாங்கிக்கொடுக்க வேண்டும் என்ற ஆசையில் கடைகளுக்குப் போனால் அதைத் தேடாமல் வரமாட்டேன். இன்னமும் தேடிட்டேதான் இருக்கேன். இதுக்காகவே தஞ்சாவூர் போய் வரவேண்டும்போல :)

      நன்றி சகோ துளசி & கீதா !

      Delete