Friday, December 4, 2015

மொழினா, கிடைத்துவிட்டாள் !


தூக்கம் தெளிந்துவிட்டாலும் குளிருக்கு இதமாகப் போர்வையை இழுத்து போர்த்திக்கொண்டு' "இன்னும் என்ன தூக்கம் ? " என‌ யார் வந்து கேட்கப்போகிறார்கள் என்ற தைரியத்தில் மீண்டும் ஒரு குட்டித்தூக்கம் போடலாம் என நினைக்கும்போதே தொலைபேசி அழைத்தது.

கேட்க ஆளில்லை, ஆனால் அழைக்காமல் இருப்பார்களா ? அழைப்பு தொலைபேசி வழியாக வந்தது.

'ஹ்ம்ம்ம்ம் ? இவ்வளவு காலையில் யாராக இருக்கும் ?' என நினைத்துக்கொண்டே இருக்கையில் ஏதோ ஒரு பெயரைச் சொல்லிமுடித்து, தன்னை எடுக்க ஆளில்லை என்றதும் வாய்ஸ் மெயிலுக்குப் போனது.

"மொழினா, உங்கிட்ட கொஞ்சம் பேசணும், போன எடு, போன எடு" என ஒரு அம்மாவின் குரல் ஒலித்து முடித்தது.

"ஹ்ம்ம்ம்ம் ? மொழினா வந்தால் பேசிக்கட்டும்" என நான் தூக்கம் கலைந்த கடுப்பில் எழுந்து டீ போட போனேன்.

'மரினா' ( Marina )  அவர்களின் உச்சரிப்பினால் 'மொழினா'வாகி இருக்கிறாள் என்பது என் எண்ணம். காலர் ஐடி ல் அப்படித்தான் பதிவாகி இருந்தது. மொழினாவின் பெயரில் காலர் ஐடி வைத்ததிலிருந்து அவள் இவர்களின் பெண் அல்லது பேத்தியாக இருக்க வேண்டும் !

மீண்டும் தொலைபேசி சத்தம் போட்டது. அதே எண்ணிலிருந்து, அதே பெயரில் என்றதும் கொஞ்சம் எரிச்சலுடன் கண்டுகொள்ளவில்லை.

அன்று நண்பகல் மீண்டும், "மொழினா ! மொழினா ! நாங்க உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும், ஃபோன எடு" என்று மீண்டும் வாய்ஸ்மெயில் வைத்தார் அந்த அம்மா.

வாய்ஸ்மெயில் முடியும் தருணத்தில் ஒரு ஆண் குரலும் சேர்ந்துகொண்டது. குரல் யாரையோ திட்டிக்கொண்டிருந்தது.

சரி யாரோ, யாரிடமோ பேச வேண்டும்போல் தெரிகிற‌து, நாம் ஏன் அதைபற்றி யோசிக்க வேண்டும் என நினைத்து விட்டுவிட்டேன்.

ஆனாலும் போனை எடுத்து "அப்படி யாரும் இங்கில்லை" என சொல்லியிருக்கலாமோ என நினைக்குமுன்னே ஃபோன்.

'நல்லவேளை, மீண்டும் ஃபோன் செய்தார்களே' என நினைத்து, நல்ல பெண்ணாக‌, போனை எடுத்து "ஹலோ" சொன்னதுதான் தாமதம், "மொழினா மொழினா ! முக்கியமான விஷயத்த நாங்க உங்கிட்ட பேசணும். போன வச்சிடாதே" என அந்த அம்மா கெஞ்சினார்.

அவர் சொல்லும்போதே பின்னாலிருந்து அந்த ஐயா செம திட்டு திட்டினார், வேறு யாரை ? மொழினா'வைத்தான் !

"மொழினா என யாரும் இங்கில்லை, ஸாரி" என சொல்லி போனை வைத்தேன். அந்த அம்மாவும் ஸாரி சொன்னார். எனக்கும் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

அடுத்தநாள் காலை மீண்டும் அதே எண்ணிலிருந்து போன் & வாய்ஸ்மெயில் + ஐயாவின் திட்டுடன்.

போனை ஸ்பீக்கரில் போட்டிருக்கிறார்கள் என்பது ஐயாவின் திட்டுகளை கேட்க முடிந்ததை வைத்து ஓரளவுக்கு யூகிக்க முடிந்தது.

"அய்யா சாமி, ஆள விடுங்க" என நான் கண்டுகொள்ளவில்லை.

"மொழினா சீக்கிரம் லைனுக்கு வந்திடு, இல்லாட்டி ஃபோன் போட்டே என்னை உண்டு இல்லை என்று பண்ணிவிடுவார்கள்" என மனதளவில் 'மொழினா'வுக்கு ஒரு வேண்டுகோள் வைத்தேன்.

இந்த பிரச்சினை ஒருநாள், ரெண்டுநாள் இல்லை, ஒரு வாரத்திற்கும் மேலாக நீடித்தது.

ஒருநாள் "இத சால்வ் பண்ண முடியலயா ? இன்னிக்கு நான் எடுக்கிறேன்" என ஆத்துக்காரர் களத்தில் குதித்தார்.

வழக்கம்போல அன்றும் போன் வந்தது. இவர் எடுத்து பொறுமையா எல்லாவற்றையும் விளக்கி, அதற்கு அந்த அம்மா ஸாரி சொல்லி, 'அப்பாடா ஒரு வழியா இனி நிம்மதியா இருக்கலாம்' என நினைக்கும்போதே ...... அவ்வ்வ்வ்வ் ....... மறுபடியும் அவர்களிடமிருந்தே போன்.

இவர் ஆஃபீஸுக்கு போகும் சாக்கில் எஸ்கேப். எனக்கோ செம கடுப்பு. அவர்களாகவே, தானாக நிறுத்தும்வரை இனி எடுக்கவே கூடாது என முடிவெடுத்தேன்.

அம்மா மொழினாவை போனை எடுக்கச் சொல்லுவதும், ஐயா பின்னாலிருந்து திட்டுவதுமாக நிறைய வாய்ஸ் மெயில்கள்.

கடைசியாக ஒரு நாள், என்னுடைய முடிவை மாற்றிக்கொண்டு, எடுத்து, " ஸாரி நீங்க அடிக்கடி போன் செய்வது எனக்குத் தொந்தரவா இருக்கு, எண்களை சரி பார்த்துட்டு செய்யுங்க" என்றதும் அம்மா தனது மிகுந்த வருத்தத்தைத் தெரிவித்தார். ஐயா வழக்கம்போல திட்டிக்கொண்டிருந்தார்.

மீண்டும் போன். "இப்போதானே சொல்லிட்டு வச்சேன், அதுக்குள்ளேயேவா " என எரிச்சலுடன் அழுகையும் சேர்ந்து வந்தது, ஆனாலும் எடுத்தேன்.

 என்ன ஆச்சரியம் ! அந்த அம்மாதான் சொல்ல ஆரம்பித்தார் !

'மொழினா என நினைத்து என்னைத் தொந்தரவு செய்துவிட்டதாகவும் (இதைத்தானேம்மா இவ்வளவு நாளும் சொல்லிக்கொண்டிருந்தேன்), தனக்கு 'மொழினா'வின் தொலைபேசி எண் கிடைத்துவிட்டதாகவும், இவ்வளவு நாளும் தொந்தரவு செய்ததற்கு மன்னிக்கச் சொல்லியும், இப்போதுகூட மதியம் நான் சிறு ஓய்வு எடுக்கும் நேரத்தில் தான் தொந்தரவு செய்துவிட்டதாகவும் சொல்லி மன்னிப்பு கேட்டுவிட்டு, இனி தன்னிடமிருந்து எந்த தொலைபேசி அழைப்பும் வராது' என கையில் அடித்து சத்தியம் செய்யாத குறையாக பேசிவிட்டு வைத்தார்.

அவர் போனை வைக்கும் சமயம் ஐயாவின் குரல் ........ ஏதோ சொல்ல வருவதுபோல் தெரிந்தது. இவரும் 'ஸாரி' சொல்ல முற்படுகிறாரோ என நினைக்கும்படி இருந்தது குரல். நல்லவேளை, இந்த முறைதான் 'மொழினா'வுக்குத் திட்டு கிடைக்கவில்லை.

"அப்பாஆஆஆடா, ஆள விட்டாங்களே " என்றிருந்தது எனக்கு. என் சந்தோஷம் ஒரு நொடிகூட நீடிக்கவில்லை.

மீண்டும் போன் !! ஐய்ய யயை யையோ,  தாங்க முடியல ! மறுபடியும் ஆரம்பத்திலிருந்தேவா :(((

எது எப்படியோ போகட்டுமென எடுத்து "ஹலோ" சொன்னதும் ........ இவ்வளவு நாளும் பின்னாலிருந்து குரல் கொடுத்த‌ ஐயா இப்போது நேரடியாக லைனுக்கு வந்தார்.

"தொலைபேசி எண்ணை  நாங்கள் தவறாக சேமித்து வைத்துக்கொண்டு சில நாட்களாக உனக்கு மிகுந்த தொந்தரவு கொடுத்து விட்டோம், ரொம்ப ரொம்ப‌ ஸாரி" என்றதும் மனம் கணத்துவிட்டது.

ஏன் நமக்கு இவ்வளவு எரிச்சல் ? அவர்களின் வயிற்று வலி, கத்தினார்கள், அடங்கியதும் நிறுத்திவிட்டார்களே" என என் மீதே எனக்குக் கோபம் வந்தது.

இவர்களால் எங்கள் வீட்டின் வாய்ஸ்மெயில் பாக்ஸ் நிரம்பி வழிந்தது.

எல்லாவற்றையும் டெலீட் பண்ணிக்கொண்டே வரும்போது, 'சரி எதற்கும் இருக்கட்டும்' என‌ அவர்களின் ஒரு வாய்ஸ்மெயிலை மட்டும் அப்படியே விட்டுவிட்டேன் !

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
'நலமுடன் இருக்கிறேன்' என்பதற்காகத்தான் இந்தப் பதிவு ! நலன் விசாரித்த நல்லுள்ளங்களுக்கு நன்றி :)

இரண்டு மாதங்களாக வீடு தேடும் படலம் (வாடகைக்குதாங்க‌), ஒருவழியா அது முடிந்ததும் இப்போது பொருள்களை எல்லாம் பேக் பண்ணி, வீட்டை சுத்தம் செய்து ஒப்படைத்துவிட்டு ...... இங்குள்ள குப்பைகளை அள்ளிக்கொண்டுபோய் அங்கும் குப்பையாக்கி முடிக்கும்வரை வலைப்பதிவு பக்கம் வருவது கஷ்டம். க்றிஸ்மஸ் சமயத்தில் உங்கள் எல்லோருடைய பக்கங்களுக்கும் வந்துவிடுவேன் என்ற நம்பிக்கையுடன் ... சித்ரா :)

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^