Tuesday, January 19, 2016

பாசச் சுவடுகள் !

'இன்று நண்பகல் வரை சூரியன் இருக்கும்'  என்று hourly weather ல் பார்த்து உறுதி செய்துகொண்டு, இன்று ஒரு நாளைக்கு மட்டும் (நம்புங்க, நெஜமாத்தான்) சாப்பிடும்போது சுட வைத்துக்கொள்ளலாம் என முடிவெடுத்து, கடகடவென காலையிலேயே சமையலை முடித்து, பத்து மணிக்கெல்லாம் பக்கத்தில் இருக்கும் ஒரு சிறிய பூங்காவுக்கு நடையைக் கட்டினேன்.

ஆமாங்க, எல் நினோ'வின் புண்ணியத்தால் நாங்களும் பல வருடங்களாகக் காணாத மழையை இப்போது விடாமல் கண்டு களிக்கிறோம். எங்கள் ஊரிலும் தொடர்ந்து மழை பெய்துகொண்டிருக்கிற‌து.

ஆனாலும் பல நாட்களாக சூரியனையேக் காணாமல் கொஞ்சம் கடுப்பாகவும் இருந்தது.  பெரிய பெரிய மரங்களின் அணி வகுப்பால் எங்கள் குடியிருப்பு வளாகம் கும்மிருட்டாகவே இருப்பதால்தான் இன்று பூங்காவுக்கு பயணம்.

பூங்காவில் dogs not allowed except on leash என்ற வாசகங்கள் ஆங்காங்கே தென்பட்டன. மனதினுள் ஒரு தைரியம், 'அப்பாடா' என்றிருந்தது.

ஆனால் பிறகுதான் தெரிந்தது, வாசகங்கள் பெயரளவுக்குத்தான் என்பது.  ஒருசிலர் மட்டும் leash உட‌னும், மற்றவர்கள் leash இல்லாமலும் அழைத்து வந்திருந்தனர்.

நானும் படு ஜாக்கிரதையாக‌ ஒரு மணி நேரத்திற்கு நடந்துவிட்டு, 'கொஞ்சம் குளிர் காய்வோமே' என்ற ஆசையில் அங்குள்ள picnic area இல் இருக்கும் ஒரு மர பெஞ்சில் அமர்ந்து அலைபேசியில் அப்போதைக்கு எடுத்த‌ குளிர்கால‌ புகைப் படங்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

கொஞ்சம் போரடிக்கவும், 'சரி கிளம்பலாம்' என நினைக்கும்போதே சாலைக்கு அந்தப் பக்கம் ஒரு பையன் (சுமார் இருபது வயதிருக்கும்) தன் நாயுடன் நின்றுகொண்டிருந்ததைக் கவனித்தேன்.  நாய் நல்ல உயரம் & நீளம். லைட் ப்ரௌன் நிறம்.

உடனே எனக்குப் பட்டது அவன் கையில் லீஷ் இல்லை என்பது மட்டுமே.  யாராவாது நாயுடன் வந்தால் அதன் பிடி அவர்களின் கையில் இருக்கிறதா என்றுதான் முதலில் பார்ப்பேன்

''சரி இப்போது போகவேண்டாம், அவன் போன பிறகு போகலாம்', என நினைக்கும்போதே அந்த அரை ஆள் உயர நாய் மட்டும் சாலையைக் கடந்து இந்தப் பக்கம் வந்துவிட்டது.

அவனோ அங்கிருந்தே 'ஸ்நூப்பி ஸ்நூப்பி' என கத்திக்கொண்டிருந்தான். போக்குவரத்து அதிகமாக இருந்ததால் அவனால் சாலையை உடனே கடக்க முடியவில்லை.

எனக்கோ உதறல் எடுத்துவிட்டது.

'கடவுளே, சில நொடிகளுக்கு போக்குவரத்தை நிறுத்தி, அவனை இந்தப் பக்கம் அனுப்பிவிடு' என மனம் தானாக பிரார்த்தணையில் ஈடுப்பட்டது.

அடடா, நமக்கும் நல்ல மனசுதான் போலிருக்கிற‌து :)) இப்படி யார் யாருக்கெல்லாமோ வேண்டிக்கொள்கிறோமே !

கண்ணிமைக்கும் நேரத்தில் நாய் என்னைப் பார்த்துவிட்டது. நான் பயந்துபோய் பார்த்ததை,  அது 'பாசப் பார்வை' என தவறாக நினைத்தோ என்னவோ, என்னை நோக்கி ஒரே ஓட்டம்.

'இன்று மருத்துவரை பார்த்தே ஆக வேண்டும் என்பது தலையெழுத்துபோல, யாரால மாத்த முடியும் ? ' என்றெல்லாம் மனம் குழம்பியது

'ஓடினால் துரத்தும்' என்று கேள்விப்பட்டிருந்ததால் ஆடாமல் அசையாமல் அப்படியே இருந்தேன்.

இதுவரைக்கும் இல்லாத அனுபவம், என் மேல் ஏறி விளையாடி.....  அதன் முகம் என் கண்ணுக்கு நேரே !

கொஞ்ச தூரம் ஓடுவதும் .... 'அப்பாடா' என நினைக்கும்போதே :((    மீண்டும் ஓடி வந்து ..........( அதுவும் என்னிடம் ???  )   விளையாடுவதுமாக ,    எனக்கு  என்ன‌ செய்யிறதுன்னே புரியல !

ஒரு வழியா அந்தப் பையன் சாலையைக் கடந்து இந்தப் பக்கம் ஓடிவரவும், இதுவும் ஒரு வழியா என்னை ஆளை விட்டது.

"ஸாரி, ஸ்நூப்பி ஒன்னும் பண்ணாது, ஃப்ரெண்ட்லியாதான் இருக்கும்" என சொல்லிக்கொண்டே ஓடி மறைந்தான் அவன்.

பிறகுதான் கவனித்தேன், என் உடை முழுவதும் மண். அவற்றை தட்டிவிட முயன்றபோதுதான் தெரிந்தது, விரல்கள் முழுவதும் உமிழ்நீர் என்பது. முகம் & தலையிலும் ஈரம். அப்போதைக்கு பேப்பர் டவலால் துடைத்துக்கொண்டேன்.

'போதும் வெயில்' என கடுப்பாகி வீடு திரும்பும் வழியில் என் பெண்ணிடம் நடந்ததை சொல்லிக்கொண்டே வந்தேன்.

கடைசியில், " அது நெனச்சிருந்தா ஒரே கடி கடிச்சிருக்கலாம். அதுக்கு ஒருவேள சாப்பாடோ அல்லது பாசமா தடவிக் கொடுக்கவோ இல்ல‌, ஆனாலும் அது ஏன் இவ்வளவு பாசத்தக் காட்டணும் ? அதன் பாசம் அப்படியே மனசுல பதிஞ்சு போச்சு " என்றேன்.

பல வருடங்களாக என்னை நாய்க்குட்டி அல்லது பூனைக்குட்டி வாங்கச் சொல்லிக்கொண்டிருக்கும் மகள், இதுதான் சமயமென,  "ammaa, i thingk god is telling u to get a pet by having you experience these things.& then eventually you will start to like them",  என மெஸேஜ் அனுப்பினாள்.

அதனிடமிருந்து தப்பியாச்சு, இப்போ மகளிடமிருந்து தப்பிக்க வேண்டுமே, " வீடு வந்தாச்சு, முதல்ல ஷவர் எடுத்துட்டு, பிறகு பேசுறேன்" என்று எஸ்கேப் ஆனேன்.