Monday, May 23, 2016

செலவழித்த ஸெல்ஃபோன் நெம்பர் !!!

பல வருடத் தேடலுக்குப்பின் இப்போதுதான் பள்ளிக்கால நெருங்கிய தோழியின் அலைபேசி எண் கிடைத்தது, ஏதோ கலிஃபோர்னியா லாட்டரி அடித்ததுபோல் இருந்தது எனக்கு.

எத்தனை வருடங்களுக்குப் பிறகு பேசப் போகிறேன். பேச்சு மணிக் கணக்கில் நீளுமே !

ஒன்று முதல் பனிரெண்டு வரை எங்கள் பக்கத்தில் அமர்ந்த தோழிகள், அவர்களிடம் நடந்த செல்லச் சீண்டல்கள், போட்ட சண்டைகள், பொய்க் கோபங்கள், ஆசிரியைகள் ..... என ஏகத்துக்கும் பேச வேண்டாமா ?

மடித்துக்கட்டிய ரெட்டை ஜடையுடன் பள்ளியில் உலாவந்த அந்த‌ நாட்களை மறக்கத்தான் முடியுமா ? இவை எல்லாவற்றையும் இன்று பேசி மகிழ‌ வேண்டும்.

ஒரே ஊர், ஒரே பள்ளி, ஒரே வகுப்பு, கோபம் வந்து ஆசிரியை மாற்றி உட்கார வைத்தால் தவிர ஒரே டெஸ்க், ..... என எல்லாமும் பனிரெண்டு வரை எதிர்பாராமல் எங்களின் விருப்பம்போல்தான் போய்க்கொண்டிருந்தது.

அதன்பிறகு இருவருமே வேறுவேறு பாதைகளில் பயணமாகிப் போனோம். கடைசித் தேர்வான உயிரியல் தேர்வின்போது பார்த்ததுதான்.

எப்போதாவது யாரிடமாவது அவளைப்பற்றி கேட்டுத் தெரிந்துகொள்வேன். ஒருவேளை அவளும் என்னைப்பற்றி யாரிடமாவது விசாரித்திருக்கலாம்.

என்னவொன்று .... தன்னைப்பற்றி அந்த நாட்களிலேயே கொஞ்சம் படிபடியாக அளப்பாள். ஒருவேளை இப்போது மாறியிருக்கலாம்.

இதற்குமேல் பொறுமை இல்லை. நினைவுகளை பின்னுக்குத் தள்ளி பேசும் ஆவலில் எண்களை அழுத்தினேன். மறுமுனையில் ரிங் போகிறது.

'ஹலோ' சொல்லப்போகும் அவளது குரல் அப்படியேதான் இருக்குமா !! குரலை வைத்து என்னையும் கண்டுபிடித்து விடுவாளோ !!

"ஹலோ, யாரு, எங்கிருந்து பேசறீங்க ? நெம்பர் கொஞ்சம் வித்தியாசமா இருக்கே ! " என்றாள்.

"அகதா'தானே, நான் அனிதா பேசறேன்" என்றேன் ஆவலாக.

"எந்த அனிதா? " __ வந்த கேள்வியால் கொஞ்சம் ஏமாற்றம்.

பெயரைக் கேட்டதும் துள்ளிக் குதிப்பாள் என எதிர்பார்த்தேன். 'அனிதா' என்றால் நான்தானே நினைவுக்கு வரவேண்டும்.

குரல் மட்டுமல்ல, பெயரும் இங்கே எடுபடவில்லை.

ஒருவாறாக‌ சமாளித்து இரண்டு பேரும் ஒன்றாகப் படித்ததை நினைவூட்டவேண்டி வந்தது.

"இந்த பேர்ல நிறைய பேர் படிச்சிருக்காங்களே, நீங்க எந்த அனிதா ?", என்றாள்.

ஊரின் பெயரைச் சொன்னதும் "இப்படி சொல்ல வேண்டியதுதானே, மொட்டையாச் சொன்னா எப்படி ?", என்றாள் சாதாரணமாக‌.

'கூப்பிட்டிருக்க வேண்டாமோ' என்றிருந்தது. மாற்றியது காலமா அல்லது குடும்பப் பொறுப்புகளா ! அவள் மாறியிருக்கிறாள் என்றால் ? நான் ஏன் மாறவில்லை ?

முன்பு  படிக்கணக்கில் அளந்தவள் இப்போது பிறந்தவீடு(ஏற்கனவே தெரிந்ததுதான்) & புகுந்தவீட்டுப்(தேவையில்லாத ஒன்று) பெருமைகளை வண்டிவண்டியாய் ஏற்றிக்கொண்டிருந்தாள்.

மாறவில்லை அப்படியேதான் இருக்கிறாள் :)

"ஐயோ, இது எதுவுமே எனக்கு வேண்டாம், நம் ஊரில் யாரையாவது பிடித்தால் இந்த வேலை முடிந்துவிடும். நாம் நம் பள்ளி நினைவுகளைப் பற்றி பேசுவோமே" என சொல்ல நினைத்து இடையில் இங்கொன்றும் அங்கொன்றுமாக‌ நான் சந்தித்த‌ தோழிகளைப் பற்றியும், ஒருதடவை ஃபிஸிக்ஸ் டீச்சர் அவர் கையால் எனக்கு காஃபி கொடுத்ததையும், 'சும்மா உட்கார்' என கணித ஆசிரியை கஸ்தூரியை அவர் பக்கத்தில் அமர வைத்ததையும், நானும் ரெஜினாவும் ஒரு ட்ரெயினிங்'கின்போது எதிர்பாராமல் சந்தித்துக்கொண்டதையும் ஆவலுடன் சொன்னபோது, 'இதையெல்லாம் இன்னுமா ஞாபகம் வச்சிருக்க ?" என சொல்லவும் அவளிடமிருந்து யாராவது ஒருவரைப் பற்றியாவது தெரிந்துகொள்ள மாட்டோமா என்றிருந்த எனக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.

பேச்சை எந்தப்பக்கம் திருப்பினாலும் கடைசிவரை தன் குடும்பத்தைச் சுற்றிசுற்றியே வந்தாள், சலிப்பாகிவிட்டது.

கடைசியாக "நீகூட வேலைக்குப் போனியே ? " என்றாள் நினைவு வந்தவளாக. பேச்சைத் தொடரலாமா? வேண்டாமா? என்றிருந்தது எனக்கு.

"இல்ல, விட்டுட்டேன்" என்றேன் பேசும் ஆர்வமின்றி.

"ஏன் விட்டுட்ட, இப்போ எவ்ளோ சமபளம் தெரியுமா ? " என்றாள்.

"வீட்டுக்காரர் வெளியூர் வந்துட்டார், அதனால விட வேண்டியதாப் போச்சு " என்றேன்.

"இப்போ எங்க இருக்க ?" என்றாள்.

சொன்னதும் ஆச்சரியமாகி, "எவ்ளோ நாளா இருக்க ? வீட்டுக்காரர் என்ன செய்றார்? பசங்க என்ன பண்றாங்க ?" என்று கேட்டாள்.

பதிலை வாங்கிக்கொண்டு, " அப்படியே கொஞ்சம் ஹோல்ட் பண்ணிக்கோ, செகண்ட் ல வந்திடுறேன்" என்றாள்.

சொன்ன மாதிரியே வந்தவள் " என் வீட்டுக்காரர்ட்ட உன்னப்பத்தி சொன்னேன்(ஹா ஹா இவளுக்கு நான் யார் என்பதைப் புரிய வைக்கவே சில நிமிடங்கள் பிடித்தது), 'பொண்ணு கேளு பொண்ணு கேளுன்றார்' " என்றாள்.

"யாருக்கு பொண்ணு கேக்கணும் ?" என்றேன்.

"என் பையன் ஜீவாவுக்குத்தான்" என்றாள்.

"ஓ அப்படியா! யார(எந்த பெண்ணை) , யாரிடம் கேக்கணும் ?"_ வலிக்காத மாதிரியே நடித்தேன்.

"மறந்துடாதே, இனி அடிக்கடி பேசுவோம் " என்றாள்.

"அதுக்கென்ன, பேசலாமே" என சொல்லிக்கொண்டே,  தேடித்தேடி சில நிமிடங்களுக்கு முன்னால் பொக்கிஷமாக நினைத்து தொலைபேசியிலும், அலைபேசியிலும் சேமித்து வைத்த தோழியின் செல்ஃபோன் எண்ணை, ஏனோ இப்போது முற்றிலுமாக செலவழித்துவிட்டேன்.

10 comments:

  1. நல்லதா வேறு எங்காகிலும்் ஒரு பெண் பார்த்து சொல்லக்கூடாது? பணம்,பதவி,இடம் பொருள் ஏவல் எல்லாம் அவளுக்கு வேண்டும் போலுள்ளது. நிறைய மனிதர்கள் நாம் பேசினால்தான் பேசுவார்கள். இப்போதுதான் நினைத்துக் கொண்டேன் உனக்குப் போன் பண்ண வேண்டுமென்று. நீயே செய்து விட்டாய். என்றபேச்சுதான் வரும். பழைய ஞாபகங்களும், தோழமைகளும் அவ்வளவாக பொருட்படுத்தாதவர்கள் இதெல்லாம் நினைக்க எனக்கு பொழுதே இல்லை என்பார்கள் உன் சினேகிதி அதற்கும் ஒரு படி மேல். பரவாயில்லை. எழுத ஸ்வாரஸ்யமாகக் கிடைத்ததை வரவேற்கிறேன். அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அம்மா, நம் நடைமுறை வாழ்க்கையிலேயே நிறைய கரு கிடைத்துவிடுகிறதே ! அவை சுவாரசியமாக இருக்கும்போது கதையாகிவிடுகிரது. தொலைபேசி விஷயமாக‌ நீங்க சொன்னதுதான் நம் எல்லோருக்கும் போலும். அன்புடன் சித்ரா.

      Delete
  2. ஆமாம் சித்ரா. சில சமயங்களில் நாம் இப்படித் தான் ஏமாந்து விடுகிறோம். ஆனால்,அவர்கள் வாழ்க்கையில் சந்தித்த அனுபவங்கள் அவர்களை மாற்றியிருக்கலாம் என்பதை மறந்து விடுகிறோம் என்று நினைத்துக் கொண்டு தான் படித்தேன். ஆனால் சிலர் சந்தர்ப்பவாதிகளாக மாறி விடுவார்கள் என்கிற பேருண்மை இறுதியில் புரிய வந்தது.

    ReplyDelete
    Replies
    1. முதலில் யார்னே தெரியாத மாதிரி பேசும்போது நாமும், அவர்களுக்கு ஆயிரம் பிரச்சினைகள் இருக்கும், வாழ்க்கை சூழலில் இதெல்லாம் சகஜம்தானே என சகஜ நிலைக்கு வரும்போது, "நாங்க‌ விவரமான ஆள்தான்" என நிரூபித்துவிடுகின்றனர்.

      வருகைக்கும் நன்றிங்க !

      Delete
  3. இது உண்மையான அன்புடன் கூடிய நட்பு போலில்லையே, எதிர்ப்புறம்! இல்லையா? இப்படித்தான் சிலர் ஏதேனும் வேலை என்றால் மட்டுமே தொடரவும் தொடர்பும் கொள்வர். இல்லை என்றால் நீ யாரோ நான் யாரோ, இது போன்ற நட்புகளை நாங்களும் செலவழித்துவிடுகின்றோம். அருமை...

    ReplyDelete
    Replies
    1. கொஞ்சம் ரீல் விடுவதைத் தவிர்த்து, அந்த நாளில் அவளும் நல்ல பெண்தான். சந்தர்ப்பவாதத்தை பிறகு கற்றுக்கொண்டிருப்பாளோ என்னவோ ! 'ஏன் இப்படி?' என மனம் பாதித்துவிட்டது.

      ஹா ஹா :))) நீங்களும் செலவழிக்கிறீங்களா !! நன்றி சகோ துளசி & கீதா !

      Delete
  4. நிச்சயமாக ஒரு பெரிய ஏமாற்றம் தான் சகோதரியே, நட்பு பாராட்ட நினைத்த உங்களிடம், உறவை வலுபடுத்த நினைக்கிறார் உங்கள் தோழி. வித்தியாசமான மனிதர்கள், அவர்களின் எண்ணங்கள் நினைத்தாலே சிரிப்பாகவும், வியப்பாகவும் இருக்கிறது.
    அயல் நாட்டிற்கு வந்த புதிதில் ஒவ்வொரு உறவிர்களுக்கும், நண்பர்களுக்கும் (பள்ளி, கல்லூரி, அலுவலகம்) தேடி, தேடி தொலைபேசியில் அழைப்பேன். ஆனால் பல ஆண்டுகள் முடிந்த பின்பு கூட ஒரு மிஸ் கால் கூட யாரிடமும் இருந்து வரவில்லை. நான் அழைத்தால் மட்டும் பேசுவார்கள். தனிமை பல நேரங்கள் நெருடலாக இருக்கும். திருமணமான பின் நட்பு வட்டாரத்தை மிகவும் சுருக்கி விட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், நீங்கள் சொல்வது வெளிநாட்டில் வசிக்கும் பலருக்கும் பொருந்தும்.

      "நெனச்சிட்டே இருந்தேன், நல்லவேள நீயே கால் பண்ணிட்ட" இதுதான் பெரும்பாலானவர்களிடமிருந்து வரும் வார்த்தைகளாக இருக்கும். விட்டுட்டு போயிட்டே இருக்க வேண்டியதுதான்.

      நன்றி யாசின்.

      Delete
  5. எல்லோரும் நம்ம மாதிரியே இருக்க மாட்டாங்க அக்கா.. நாம நினைச்சு நினைச்சு சந்தோஷ படுற சில விஷயங்களை பொருட்டாவே நினைக்க மாட்டாங்க..
    தோழிக்கு திருமணம் முடிந்தப்புறம் 4 வாட்டி போன் பண்ணினேன்.. 4 முறையும் வீட்டு பெருமை பேசியே என் பேலன்சை காலி பண்ணாள்.. அப்புறம் போன் பண்றதை நிறுத்தி 4 வருடம் ஆகப் போகுது..

    ReplyDelete
    Replies
    1. அபி,

      உங்க தோழியும் இப்படியா !!

      அத்தி பூத்தாற்போல் ஒருசிலரை சந்தித்திருக்கிறேன். அவர்கள் மூலமாக வேறு யாரெல்லாம் எங்கெங்கே இருக்காங்க, என்ன செய்றாங்க‌ என்றுதான் ஆர்வமா பேசியிருக்கோம். ஏனோ ஒருசிலர் மட்டும் இப்படி ஆயிடறாங்க.

      Delete