Thursday, July 28, 2016

சித்ரா'ஸ் குக்கிங் ஸ்கூல் _ தொடர்ச்சி !

சித்ரா'ஸ் குக்கிங் ஸ்கூலுக்குக் கூவிக்கூவி அழைத்தும், கட்டணத்தைக் காரணம் காட்டி யாருமே எட்டிப் பார்க்காத‌ சூழலில், இழுத்து மூடுவதைத் தவிர வேறென்ன செய்ய முடியும் ?

சோகத்துடன் மூடப்போகும்  தருணத்தில் எலி ஒன்று, வந்து, வசமாக சிக்கியது மகள் வடிவத்தில்.

"அம்ம்ம்மா, ஈஸியா இருக்கணும், அதே நேரத்துல‌ சுவையாவும் இருக்கணும், அது மாதிரி ஏதாவது ரெஸிபி இருந்தா லீவுல‌ சொல்லிக்குடும்மா " என்றாள் லீவுக்கு வருமுன்னமே.

ஆறு மாதங்கள் வீட்டுப்பக்கம் தலை காட்டாததன் விளைவு இது.

எளிமையான‌ சிலவற்றை வரிசையாக  லிஸ்ட் போட்டோம்.

சாம்பார் _ வேண்டாம் ! பருப்பு வேகவச்சு, காய் கட் பண்ணி .... நானே வேண்டாம்னு சொல்லிட்டேன்.

ரிஜெக்ட் ஆன லிஸ்டில் புளிக்குழம்பு, குருமா, கீரை எல்லாம் இருந்தன.

லிஸ்டில் முதலாவதாக எலுமிச்சை சாதம், உருளைக்கிழங்கு பொரியல், முட்டை இவை மூன்றும் இடம் பிடித்த‌ன.

மகள் சொன்னாள், " அம்மா, நீ ஒரு சூப் வப்பியே, சூப்பரா இருக்குமே, அத கத்துக்கிறேனே" என்றாள்.

நானாவது சூப் வைப்பதாவது ?

"முறுங்க கீரை தண்ணி சாறு வைப்பேனே ...... அத சொல்றியா, நீ இருக்கும் ஊர்ல அது கிடைக்காது. இன்னும் கொஞ்சம் நாள் போகட்டும், இப்போதானே லயா வீட்ல செடி வாங்கி வச்சிருக்காங்க‌, அது    வளர்ந்ந்ந்து ...... கீர பறிக்க ......... எவ்ளோஓஓ நாளாகுமோ,  அப்போ பார்த்துக்கலாம்" என்றேன்.

"அது இல்லம்மா, அதுல கீர எதுவுமே இருக்காது, கொஞ்சம் ப்ரௌன் கலர்ல இருக்குமே, சூப்பராவும் இருக்குமே, அது" என்றாள்.

நெஜமாவே எனக்கு என்னன்னு புரியல, விட்டுட்டேன்

விடுமுறையில் வீட்டுக்கு வந்து சாப்பிடும்போது சாம்பார் முடிந்து ரசம் ஊற்றியதும்,  "இதேதான், இததான் நான் சூப்னு சொன்னேன்" என்றாள்.

இப்போ லிஸ்ட்ல ரசமும் சேர்ந்துகொண்டது.

நல்ல நாள் பார்த்து kitchen boot campஐ ஆரம்பிச்சாச்சு.

முதல் இரண்டு நாட்கள் 'இதை எடு, அதை வை' என ஒரே மிரட்டல்தான் :)) சரியா செய்யாட்டி push ups, sit ups என பனீஷ்மெண்ட்டுடன் முடிந்தது .

எலுமிச்சை சாதம் எந்தவித‌ப் பிரச்சினையும் இல்லாமல் வந்துவிட்டது. முட்டையும் எளிதோ எளிதாகிவிட்டது.

உருளைக்கிழங்கு ? கைவிட்டாச்சு !

ரசம் கற்றுக்கொண்டு mid term testம் வைத்து, finalம் முடிந்துவிட்டது.

ஆனாலும் 'பூச்சி மாதிரி இருக்கு'னு புளியைக் கரைக்காமலும், தக்காளி பிடிக்காது என்பதால் அதைப் பிழியாமல் பொடியாக நறுக்கிப் போட்டதாலும் மதிப்பெண்கள் கொஞ்சம் குறைந்துதான் போனது.

இருந்தாலும் கொத்துமல்லி விதை, மிளகு & சீரகம் இவற்றை வறுத்துப் பொடிப்பதை "ஸோ இண்ட்ரஸ்டிங்", "ரசம் வைப்பதிலேயே இதுதான் ஃபன் பார்ட்" என சொன்னதால் A + கொடுத்தாச்சு.

விடுதிக்குப்போய்  தக்காளியை நறுக்கியோ, புளியைக் கரைக்காமலோ ரசம் வைப்பதும் வைக்காததும் இனி அவள்பாடு, அதை ருசிக்கப் போகும் அவளின் தோழிகள் பாடு  !!

கடைசியாகக் கிடைத்த தகவலின்படி சூப்பர் ரசம் வைத்து சாப்பிட்டதாக படத்துடன் வாட்ஸ் அப் சொன்னது.

பார்த்தீங்களா ?  சக்தி, சக்தி இல்லாட்டி ஆச்சி,  மெட்ராஸ், ஆனந்த் என போகாமல் தினமும் ரசத்துக்குப் பொடிப்பதை ஃபன் பார்ட்டா நெனச்சுக் கத்துப்பீங்க‌.

அடுத்த வகுப்புகள் ஆரம்பிக்க இன்னும் சில நாள்களே உள்ளன. Summer  சலுகையும் உண்டு. உஷாராகி உடனே பதிஞ்சுக்கோங்க :))))

Sunday, July 24, 2016

மஞ்சள் செம்பருத்தி !



என்னமோ தெரியல, திடீர்னு மஞ்சள் நிறப் பூச்செடி வாங்க வேணும்போல் தோனியது. இரண்டு வாரங்களுக்குமுன் கடைக்குப் போனேன், துளுக்கு சாமந்தி ஈர்த்தது. ஆனாலும் வாங்கிவந்து நிழலில் வைத்து காயவைக்க வேணுமா ? பாவம், அது கடையிலேயே இருந்துவிட்டுப் போகட்டும் என வந்துவிட்டேன்.

கடையிலயுமே சரியா தண்ணி விடாம செடிகள் வாடிப்போய் இருந்தன. அதன் பிறகு அந்தக்கடை பக்கமே தலை காட்டல! நிறைய மல்லிச்செடிகள் வந்திருந்தது. சிவப்பு நிறத்திலேயே கொஞ்சம்கொஞ்சம் நிறம் மாறினாற்போல் செம்பருத்தி செடிகளும் இருந்தன.

நேற்று 'ட்ரேடர் ஜோஸ்' போனபோது சிவப்பு நிற செம்பருத்தி செடிகளுடன் இந்த மஞ்சள் நிற செம்பருத்தி செடியும் (நிறைய மொட்டுக்களுடன்) இருந்தது. ஏதோ தைரியத்தில் வாங்கி வந்துவிட்டேன்.

எல்லாம் சென்ற வாரம் செக்கிங்'கு வந்த  Apt mgmt ppl, தொட்டிச் செடிகளை வேலியின்மேல் வைத்துக்கொள்ள பச்சைக்கொடி காட்டியதால் வந்த தைரியத்தில்தான்.

காலையில் ஒரு ஐந்து நிமி இடது பக்கமும், மாலையில் ஒரு ஐந்து நிமி வலது பக்கமுமாக வெயில் வரும். இதில் (ஏதோ)பாதுகாப்பு கருதி(யாம்), இடது பக்கம் மட்டுமே வைக்க அனுமதி.

                                         இன்று அதிகாலையில் ஒரு பூ பூக்கத் தொடங்கியது.

                    வாக் போயிட்டு 8 மணிக்கெல்லாம் வந்து பார்த்தால் நன்றாகப் பூத்திருந்தது.

                                        10 மணி வாக்கில் மற்றொன்றும் பூத்துவிட்டது :))
இந்த ரெண்டு பூக்களையும்தான் வளைச்சுவளைச்சு படம் எடுத்து வச்சிருக்கேன் ! இனிமேல் பூப்பதையும் இங்கேயே கொண்டுவந்துவிடுவேன்.

நாள் முழுவதும் பார்த்துக்கொண்டிருந்தாலும் ஆசை தீரவில்லை, மஞ்சளும், இளஞ்சிவப்பும் கலந்து .... அவ்வ்வ்வளவு அழகு !!

Wednesday, July 13, 2016

Pokémon Go !

என் பெண்ணிற்கு விடுமுறை என்றால் அது விடுமுறைதான். அவசியம் என்றால் தவிர வீட்டை விட்டு வெளியே வரமாட்டாள்.

அதெல்லாம் அப்போ ! அப்படின்னா இப்போ ???

கடந்த சில தினங்களாக காலையில் நானே மறந்தாலும் நினைவுபடுத்தி என்னை நடைப்பயிற்சிக்கு அழைத்து செல்கிறாள். அதுவும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தெரு வழியாக.

இந்த வார இறுதியில் அதிசயமாக எங்களுடன் பூங்காவிற்கு வந்தாள். கடைகளுக்கும் விஜயம் த‌ந்தாள்.

மாதத்தில் ஓரிரண்டு முறை சந்தித்துக்கொள்ளவே சிரமப்படும் என் பெண்ணும் அவளின் தோழிகளும் இந்த வாரத்தில் மட்டுமே இரண்டுமுறை சந்தித்துக்கொண்டார்கள்.

இன்று 'நூலகம் செல்லலாம்' என்றாள்.

'அடடே புத்தகங்களின் மேல் என்ன ஒரு ஈர்ப்பு' என வியந்து(போனேன்) போனேன். நூலகத்தை அலசு அலசு என அலசிவிட்டு,  'நூலகத்தின் பின்னால் இருக்கும் பூங்காவுக்குப் போகலாம்' என சொல்லி ஆச்சரியப்படுத்தினாள்.

வழக்கத்துக்கு மாறாக அங்கோ ஏகத்துக்கும் கூட்டம். 'பின்னே இருக்காதா ? பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையாச்சே' அப்படின்னுதானே நினைக்கத் தோன்றும் !! ஹா ஹா ஹா :))))

எல்லாம் இவளைப் போலவே மேனிலை & கல்லூரிப் பிள்ளைகள் தனித்தனியாகவும், குழுகுழுவாகவும் தங்கள் அலைபேசியுடன் சுற்றித் திரிந்தனர்.

வேறெதெற்கு ? Pokémonகளை  catch பண்ணத்தான்.

எங்கெங்கோ வெளி மாநிலங்களில் இருக்கும் தோழிகளுக்குள், " நீ எவ்வளவு போக்கிமான்களைப் பிடிச்சிருக்க, எந்த நிற டீம்ல நீ இருக்க ? "என்றெல்லாம் கேள்விகள் பறக்கினறன.

வீட்டிலே இருந்தாலும் Couch Potatoவாக இல்லாமல் இங்கும் அங்குமாக‌ நடந்துகொண்டே இருப்பதுவும் நன்றாகத்தான் இருக்கிறது.

பிள்ளைகள் வீட்டை விட்டு வெளியில் வந்தது ஆரோக்கியமானதே என்றபோதிலும், எங்கெல்லாம் போவது பாதுகாப்பு, எங்கெல்லாம் போகக் கூடாது என்ற அறிவுரைகளுடன்  உள்ளூர் & உலக செய்திகளில் தினமும் இந்த விளையாட்டை விளையாடுபவர்களைப் பற்றிய செய்தி தவறாமல் இடம் பிடித்துவிடுகிறது.

என் அலைபேசியை நான் தொட்டாலே "நீயும் ஆரம்பிச்சிட்டியா, இன்னிக்கு நீ எத்தனை Pokémonகளைப் பிடிச்ச‌ " என்ற கேள்வி என் வீட்டிலிருந்தே என்னை நோக்கி வருகிறது.

இதனால் சாதாரணமாகத் தெரிந்த அலைபேசி, இப்போது அதை யார் நடந்துகொண்டே பயன்படுத்தினாலும் 'போக்கிமான் கேம் விளையாடுறாங்களோ" என்றே நினைக்கத் தோன்றுகிறது.

ஹலோஓஓ !! அலைபேசியோட எங்க கெளம்பிட்டீங்க ??

ஹா ஹா .....இப்போ உங்களுக்கும் 'Pokémon Go' fever வந்துடுச்சா :))))

Tuesday, July 5, 2016

தேறுமா ? தேறாதா ?


இப்படி காய்ஞ்சு போய் கிடக்கே !! கழித்தல், கூட்டல், பெருக்கல் எல்லாம் தேவையா ? இல்லாட்டி அப்படியே விட்டுடலாமா ?  ஏதாவது ஐடியா சொல்லுங்க !!

                      **********************************************

இதே மாதிரியான‌ கோடைகாலத்தில்தான் ஏற்கனவே இருந்த அப்பார்ட்மென்டிற்கு  குடி வந்தோம். பக்கத்திலுள்ள பார்க்'கிற்கு வாக் போக ஆரம்பித்தபோது குளிர்காலமே வந்துவிட்டது

ஒருசில மரங்கள் & செடிகளைத் தவிர பார்க் முழுவதுமே காய்ந்துபோய் கிடந்தன. அங்கிருந்த மற்ற மரங்கள் & செடிகளை எல்லாம் அளவோடு வெட்டிவிடும்போது இந்த செடியை மட்டும் அப்படியே விட்டுவிட்டார்கள். கவனக் குறைவால் பிடுங்காமல் விட்டிருப்பார்கள் என‌ நினைத்தேன்.

ஆனால் வசந்தம் வந்ததுமே நம்ப முடியாத அளவிற்கு பச்சைப்பசேல் என துளிர்க்க ஆரம்பித்துவிட்டது. 

கோடையில் மின்னல் பூச்சிகள் பறப்பதுபோல் அந்த இடமே பளிச் என பூக்களால் நிரம்பிவிட்டது. அங்கிருந்தவரை வருடந்தோறும் இதை ரசிப்பதுண்டு. 

                    *************************************************

                                             வருகை தந்த அனைவருக்கும் நன்றி !