Tuesday, August 9, 2016

குரு பார்வை !


கோடை விடுமுறையில்(ஜூன் முதல் வாரம்) மகள் வருவதற்கு விமான‌ டிக்கெட் புக் பண்ணியதுமே இதுவரை பிடிக்காமல் இருந்த இந்த வீடு கொஞ்சம் அழகானதுபோல் தோன்றியது.

இன்னும் இரண்டு மாதங்களில் குரு பெயர்ச்சி வருதுன்னு சொல்றாங்களே, ஒருவேளை நம்ம ராசியை(?) குரு பார்க்கப் போகிறாரோ ! அதனால்தான் திடீரென இந்த வீடு பிடிக்கிறதோ !

இதுவரை கொஞ்சம் மூடினாற் போலவே கிடந்த ஜன்னல்கள், கதவுகள் திறக்கப்பட்டதும் ...... வீட்டிற்குள் நல்ல வெளிச்சம் ! நிச்சயம் இது குரு பார்வை வரப்போவதற்கான அறிகுறிக‌ள்தான்.

முன்பு எப்போதோ(மார்ச் ?) ஒருமுறை 'வாக்' போகும்போது வழியில் பார்த்து 'ஹாய்' சொன்ன நம்ம ஊர் தோழியை இரண்டு வாரங்களுக்குமுன் மீண்டும் வழியில் சந்திக்க நேர்ந்தது.

வீட்டிற்கு வருமாறு அழைப்பு. நான்தான் தயங்கினேன். காரணம் அவருடன் துறுதுறுவென வந்திருந்த வளர்ப்பு செல்லம்.

நான் அழைக்கவில்லை. குற்றவுணர்ச்சிதான், வேறு வழியில்லை.

வழியில் பார்கும்போதே பயம். வீட்டுக்குப் போனால் ? அல்லது வீட்டுக்கு வந்துவிட்டால் ?

அடுத்த நாளே மீண்டும் வழியில் சந்திப்பு.

"நீங்க தினமும் வாக் போறீங்கன்னா நானும் வருகிறேனே" என்றார்.

தோழிகளுடன் 'வாக்' போயி பல வருடங்களாகிவிட்டது. எப்போதாவது ஒரு சமயம்தான் இது மாதிரியெல்லாம் வாய்க்கும்.

நான் சொல்லலை ? ஆகஸ்ட் 2 அருகில் வந்துவிட்டதே !

சென்ற வாரம் திங்கள் கிழமை 'வாக்' போகும்போதே வழியில் இருக்கும் அவரது வீட்டிற்கு, "அதெல்லாம் பார்த்துக்கலாம் வாங்க'னு அழைத்துச் சென்றுவிட்டார்.

அவர் வீட்டு செல்லம் புதியவர் வருகையால் குஷியாகி என்னிடம் வரவும், என் வள்ளல் தெரிந்தபடியால், "வேண்டாம்" என்று தோழி சொன்னதும் என்கிட்டே வரவேயில்லை .

'அப்பாடா' என்றிருந்தது.

நானும் பயந்துநடுங்கி ஒரு வழியாக ஓடியே வந்துவிட்டேன்.

ஏனோ தெரியவில்லை, அடுத்த நாள் 'வாக்' முடிந்து நானும் அவர் வீட்டுக்குப் போனேன்.

இன்று செல்லம் என்ன நினைத்ததோ தெரியவில்லை, என்னைப் பார்த்ததும் தலையை உள்ளே இழுத்துக்கொண்டது.

வெட்கமா ? அல்லது என் நல்ல்ல்ல மனம் அதற்குத் தெரிந்துவிட்டதா ?

"வெளில வா, உன்னைப் பார்க்கணுமாம், யார் வந்திருக்காங்க பாரு ?" என்றார்.

ம்ஹூம் ....

தோழி உள்ளே போய் அழைத்து வந்தார்.

தைரியத்தை வரவழைத்துக்கொண்டு நான் அதைத் தடவி விடவும் என் பக்கம் வந்து ஒட்டிக்கொண்டது.

இங்கே, "விலங்குகளோடு பழக்கமில்லாதவர்கள் அவற்றின் கண்ணோடு கண் பார்க்கக் கூடாது" என்ற கீதாவின் வரிகள் நினைவுக்கு வந்தாலும் ....... தவிர்க்க‌ முடியவில்லை.

என்னையே என்னால் நம்ப முடியவில்லை. மனதினுள் அவ்வளவு சந்தோஷம் !

யாரிடமாவது இதைச் சொல்ல வேண்டாமா ?

வீட்டுக்காரர் ?

இந்த ஒரு விஷயத்தில்தான் எங்களுக்குள் ஏகத்துக்கும் ஒற்றுமை. அதைக் கெடுத்துக்கொள்ள வேண்டாமென என் பெண்ணிடம் சொன்னேன்.

ஏற்கனவே "நாய் & பூனை adopt பண்ணி இருவருக்கு லைஃப் கொடு" என என்னை ப்ரெய்ன் வாஷ்  செய்துகொண்டிருப்பவள் ஆச்சரியப்பட்டு, "பேர் என்ன வச்சிருக்காங்க ?" என்றாள்.

"குரு" என்றேன்.

"அப்படின்னா உனக்கு குரு பார்வ கெடச்சிடுச்சுனு சொல்லு " என்றாள் :)))