Sunday, October 30, 2016

நீதான் கேட்கவே இல்லையே !

புதுமணத் தம்பதி தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.

கணவன் மனைவியிடம் சொன்னான், "உனக்கு ஏதேனும் விருப்பம் இருந்தா சொல்லு, நிறைவேத்த முடியுதான்னு பார்க்கிறேன்"னு.

மனைவி சொன்னாள், "மொதல்ல‌ நா(ன்) வேலைக்குப் போகக் கூடாது".

கணவனோ, " நீ வேலைக்குப் போவது உனக்காகத்தானே, எதுக்கும் மறு பரிசீலனை செய்" என்றான்.

"படிக்கும் காலத்திலிருந்து இப்போ வரைக்கும் காலையிலேயேக் கிளம்பி ..... பஸ்ஸைப் பிடித்து ..... போரடிச்சாச்சு, அதனால அட்லீஸ்ட் கொஞ்ச நாளைக்காவது நான் வீட்டில் இருக்கிறேனே" என்றாள்.

"சரி, உனக்கு அதுதான் விருப்பம் என்றால் எனக்கும் ஓகே, வேறு ஏதேனும்" என்றான்.

"துணி துவைக்கக் கூடாது" என்றாள்.

"சரி, நான் இனிமே துணியே துவைக்கமாட்டேன்" என்றான் சிரித்துக்கொண்டே.

"அய்ய்யோ, என்னைச் சொன்னேன்" என்றாள்.

"சரி அடுத்து" என்றான்.

"பாத்திரம் கழுவக் கூடாது, வீடு பெருக்கக் கூடாது" என அடுக்கினாள்.

"இதையெல்லாம் ஈஸியாக்க ஒவ்வொன்னா வந்திட்டிருக்கு, பார்க்கலாம்" என்றான்.

"முக்கியமா சமைக்கவேக் கூடாது" என்றாள்.

நல்லவேளை, 'சமைத்தே தீருவேன்'னு அடம் பிடிக்காமல் போனதில் அவனுக்கு மகிழ்ச்சியே.

ஒருசில வருடங்கள் கழித்து கணவனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்து குடும்பத்துடன் அங்கே போய் குடியேறினார்கள்.

ஒரு வழியா செட்டில் ஆனபின், " வேலைக்குப் போகாமல் இருப்பது தொடங்கி நீ கேட்டது எல்லாமும் நிறைவேத்திட்டேனா ?" என்றான் சந்தோஷமாக. தற்போதைக்கு அவளே விரும்பினாலும் வேலைக்குப் போக முடியாது என்பது வேறுவிஷயம்.

"ம்ம்ம்ம்ம் .... ஆனால் வீட்லதான் ஜனங்களே(சுற்றம்) இல்ல" என்றாள் சோகமாக‌.

" அப்போ, நீ இத கேக்கவே இல்லயே" என்றான் கணவன்.

Friday, October 14, 2016

Half Moon Bay Beach !



எங்க ஊருக்குக்(?) கொஞ்சம் பக்கத்தில் இருக்கும் ஒரு ஊர் Half Moon Bay. ஜூன் மாதத்தில் ஒருநாள் அங்குள்ள பீச்சுக்குப் போனபோது எடுத்த கடல் அலைகளின் படங்கள் !

கடல் அலைகளில் எவ்வளவு நேரம் காலை நனைத்துக்கொண்டு இருந்தாலும் அலுப்பு வராதுதானே. அப்படி நினைத்துத்தான் போனேன். ஆனால் இரண்டொருமுறை காலை நனைத்ததுமே குளிர் ஜுரமே வந்திடும்போல இருந்தது. அந்தளவுக்குத் தண்ணீர் ஜில்ல்ல்லுன்னு இருந்துச்சு. வெயிலும் அதிகம், அதற்கு இணையாக‌ குளிரும் போட்டிபோட்டது !

கோடையிலேயே இந்த போடு போட்டால் ? குளிர்காலத்தில் எப்படி இருக்குமோ !!

இதற்குமேல் நின்றால் urgent care குத்தான் போகணும்னு வெறும் மணலிலேயே நீண்ட தூறம் காலாற நடந்துவிட்டுத் திரும்பினோம்.

                               போகும் வழியில் ஓரிடத்தில் கிறிஸ்துமஸுக்காகத் தயாராகும் மரங்கள் !

எங்க ஊரு பீச்சிலும் குதிரை சவாரி உண்டுங்கோ ! என்ன ஒன்னு, இதுக்குனு தனி பாதை இருக்கு.
கடலின் அழகில் மயங்கி, வர்ணிக்க வார்த்தைகள் வராததால் (ஹி ஹி தெரியாது என்பதுதான் உண்மை) படங்களை அப்படியே பார்த்துக்கொண்டே செல்வோமே ! !
நாங்கள் போனபோது ஆள் அரவமே இல்லாமல் இருந்தது. நேரம் ஆகஆக சேர், குடை, பந்து என இவை சகிதமாக மக்கள் கூட்டம் வரத் தொடங்கியது. ஒரு பக்கம் மக்கள் கூட்டம் தாங்கள் கொண்டு வந்திருந்த கட்டுசோத்தைப் பிரிச்சு ஒரு வெட்டு வெட்டிக்கொண்டிருந்தனர். பார்க்கும் நமக்கும் பசி வரத்தானே செய்யும் !
மதியம் வீட்டுக்குக் கிளம்பும்போது நல்ல பசி. சரி அங்குள்ள நம்ம ஊர் ரெஸ்டாரண்ட் எப்படி இருக்கும்னு போனோம். ஒரு மணி ஆச்சே, எவ்வளவு கூட்டம் இருக்குமோன்னு கொஞ்சம் பயம்தான். ஏன்னா, எங்க ஊர்ல சாதாரணமாவே கூட்டம் வழியும், அதிலும் சனிஞாயிறு என்றால் அவ்வளவுதான். கடைக்கு வெளியிலயே ஒரு பெரிய க்யூ தென்படும். ஆனால் இங்கே கடையில் ஒரு காக்காகுருவியைக் கூடக் காணோம் ! நாங்க மட்டுமே :) நாங்க பாதி சாப்பிட்ட நிலையில் ஓர் அமெரிக்கர் வந்து சூப் வாங்கி டேஸ்ட் பார்த்துவிட்டு, ஆல்இன்ஆல் ஆன அங்கிருந்த அம்மாவிடம் 'அருமை' எனக் கூறினார். எங்களுக்கும் 'இல்லாத ஊரில் இது பரவாயில்லை' எனும்படியே இருந்தது.

போய்வரும் வழியெங்கும் காடும், மலைகளும் இருப்பதால் கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருந்தது. வழியில் ஆங்காங்கே நிலத்தில் காய்கறிகள், பழங்கள் விற்பனை நடந்தது. இறங்கி வாங்கும் பொறுமையெல்லாம் இல்லை, அடுத்த தடவை வந்தால் வாங்கலாம் என பேசிக்கொண்டோம் !