Monday, November 11, 2013

கார்த்திகை தீபம்....தொடர்ச்சி


வரிசையாக வீடுகள், அதன் பின்னால் எல்லோருக்கும் நீளமான ஒரு தோட்டம் உண்டு. அதில் கண்டிப்பாக ஒரு பனைமரம் இருக்கும். எங்கள் வீட்டு தோட்டத்தில் இரண்டு பனைமரங்கள். பூக்கள் மட்டுமே பூக்கும். காய்கள் காய்க்காது. ஏன்னா எங்க வீட்ல பனங்காய், அதாங்க நுங்கு சாப்பிட ஆள் இல்லை பாருங்க, அதனாலதான். அதை ஆண்பனை என்று சொல்வார்கள்.

எல்லோரது வீட்டிலும் பனம்பூவை பொறுக்கும்போது அதிலும் நம் வயது குட்டீஸ்கள் அதை செய்யும்போது நமக்கு மனசு கேக்குமா சொல்லுங்க!

நாங்கள் (நான் & தம்பி) எடுத்து வைக்கும் பூவை பயன்படுத்தப்போவதில்லை என்று தெரிந்திருந்தாலும் மன திருப்திக்காக கொஞ்சம் பொறுக்கி வைப்போம்.

யார் வீட்டுத் தோட்டத்தில் இருந்து முதலில் புகை வருதுன்னு வெயிட் பண்ணுவோம். புகை வரும் இடத்தை நோக்கி மொத்த கூட்டமும் படையெடுக்கும். அடுத்தாற்போல் யார் வீடு என்று அங்கே ஓடுவார்கள்.

இத்தனையும் எதற்காக? பனம்பூவை வைத்து கார்த்தி சுற்றுவதற்கு தேவையான‌ மருந்து செய்வதற்காகத்தான்.

வீட்டின் தோட்டத்தில் யாராவது பெரியவங்க அரை அடி அகலம் ஒரு அடி ஆழம் அளவிற்கு சிறு கடப்பாறையால் ஒரு குழி தோண்டுவாங்க. அப்படி வந்து தோண்டுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் எள் என்றால் நாங்கள் (நல்)எண்ணெயாக இருப்போம். ஓடிஓடி உதவிகள் செய்வோம்.  இதெல்லாம் கார்த்தியை விரைந்து செய்து முடிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தால்தான்.

அவர் வந்து முதலில் செய்வது நாங்கள் எடுத்து வைத்திருக்கும் பனம்பூவை கண்டுகொள்ளாமல் பனைமரத்தில் இருந்து புது பூவாக ஒரு கொத்து பறித்துவந்து பயன்படுத்துவார். அவ்வ்வ்வ்.......

நாங்கள் எடுத்து வைத்திருப்பது விரல் நீளத்திற்கு குட்டிகுட்டியான, உடைந்துபோன, குப்பைக்கு போகவேண்டிய பூக்களாக இருக்கும். அவர் பறிப்பது நீளநீளமாக இருக்கும்.

பள்ளம் தோண்டி முடித்ததும் ஈரம் போவதற்காக அதில் கொஞ்சம் தவிடு தூவி, அதன்மேல் பனம்பூக்களை அடுக்கி, மேலேயும் கொஞ்சம் தவிடு தூவி, விறக‌டுப்பில் கனன்று கொண்டிருக்கும் கட்டை நெருப்பில் ஒன்றிரண்டு எடுத்துவ‌ந்து வைத்து விசிறிவிடப்படும்.

ஊதக்கூடாதுன்னு சொல்லுவாங்க. ஊதினால் ஊமக்காத்தி ஆகிவிடுமாம். தீ கனன்றுகொண்டே இருக்க வேண்டும். தீப்பிடித்து எறியக் கூடாது.  அதாவது பனம்பூ எறிந்துவிட்டால் சாம்பல்தான் மீதமாகும். அதை வைத்து மருந்து செய்ய முடியாது. இதை சொன்னால் புரியாதுன்னு என்னவெல்லாம் சொல்லியிருக்காங்க பாருங்க‌ !

பனம்பூ முழுவதும் நெருப்பு மாதிரி வந்தவுடன் தோட்டத்தில் இருக்கும் பூவரசு இலைகளைப் பறித்து குழியை மூடி அதன்மேல் மண் போட்டு மூடிவிடுவார்கள்.

மாலைக்குள் நெருப்பு ஆறிப்போயிருக்கும். மண், இலைகளை எல்லாம் தள்ளிவிட்டு பனம்பூ கரியை பத்திரமாக எடுத்துவந்து யாரிடமாவது கொடுத்து அம்மியில் வைத்து அரைத்து ரொம்பவும் மழமழனு இல்லாமல் கரகரப்பாகப் பொடித்து வைப்பதுதான் கார்த்தி மருந்து.

அடுத்த இரண்டுமூன்று நாட்களுக்கு அம்மியில் எதையும் அரைக்க முடியாது. அரைத்தால் கரிகரியா வரும்.

பழைய துணியில் இந்த மருந்தில் தேவையான அளவு வைத்து, சுருட்டி, கட்டி வைப்பாங்க. இரண்டு நாட்களுக்கு எத்தனை வேண்டுமோ அத்தனை எண்ணிக்கையில் கட்டி வைப்பாங்க.

பனை மட்டைகளை வெட்டி அவற்றை கத்தியால் சீவி எத்தனை கார்த்தி வேணுமோ அத்தனை செய்து, மேலும் கீழும் கயிறு வைத்து கட்டி, இடையில் பனம்பூ மருந்தை வைத்து இறுக்கமாக இருக்குமாறு செய்து,  தலைக்கு மேலாக சுற்றுவதற்கு வசதியாக ஒரு  கயிறும் கட்டி தருவாங்க.

இது ஒருபக்கம் நடக்கும்போதே அன்று எல்லோரும் தலை குளிப்பார்கள். இன்றைக்கு வடை & பாயஸத்துடன் சாப்பாடு தயாராகும்.


மாலை 6 மணிக்கு அகல் விளக்குகள், குத்துவிளக்குகள் எல்லாம் ஏற்றப்படும். மாலை 6 மணிக்குமேல்தான் சாமிக்கு படைப்பாங்க. ஏனெனில் திருவண்ணாமலையில் மாலை ஆறு மணிக்குதான் தீபம் ஏற்றுவார்கள். அங்கு தீபம் ஏற்றிய பிறகுதான் படைக்க வேண்டும் என்று சொல்லுவார்கள்.

சாமிக்குப் படைக்கும்போது கார்த்தியையும் சேர்த்து படைப்பாங்க. பிறகு அந்த கார்த்திகளில் மருந்துக்கு மேலாக சிறிது நெருப்பு வைத்து கனிய வைப்போம். அது தானாக கனிந்து நெருப்பாவதற்குள் சாப்பிட்டு முடித்துவிடுவோம். ஞாபகம் இருக்கட்டும், இப்போதும் ஊதக்கூடாது, ஊதினால் .......... !.

எங்கே சாப்பிடுவது? மனசு முழுவதும் கார்த்தியில்தான் இருக்கும். சாப்பிட்டுவிட்டு வந்து அந்த கார்த்தியை தலைக்குமேலாக பிடித்துக்கொண்டு சுத்துசுத்துனு சுத்த வேண்டியதுதான். அதிலுள்ள நெருப்பு பொறிகள் கொட்டுவது கண் கொள்ளா காட்சியாக இருக்கும். ஊர் முழுவதும் இப்படிதான் இருக்கும்.

சிலர் தீபாவளிக்கு வாங்கும் பட்டாசில் கொஞ்சம் மிச்சம் பிடித்து கார்த்தியின்போது வெடிப்பாங்க.

பெரிய அண்ணன்கள், அக்காக்கள் எல்லாம் விதவிதமாக தலைக்குமேல், பக்கவாட்டில் என சுற்றுவதைப் பார்க்கும்போது பொறாமையாக இருக்கும். இவர்கள் வீட்டில் உள்ள குட்டீஸை எதிரில் நிற்கவைத்தும் சுத்துவாஙக.

நானாக தலைக்குமேல் பிடித்து சுற்றும்வரை அந்த கார்த்தியை பிடித்து தரையில் இழுத்துக்கொண்டுதான் ஓடுவேன். அதிலிருந்து பூக்கள் கொட்டுவது ஒரு அழகு.

இது இரவு பத்து பதினொரு மணிவரை தொடரும். எங்க வீட்டு மெத்தைக்கு போய்ட்டு யார்யார் வீட்டு கார்த்தியில் எவ்வளவு பூக்கள் கொட்டுகிறது எனப் பார்த்து ரசிப்போம். நிறைய பொறி கொட்டும் கார்த்திக்கு சொந்தமானவரிடம் சென்று இரவல் வாங்கி ஆசை தீர சுற்றுபவர்களும் உண்டு.

சிறுவர்கள் மட்டுமின்றி வீட்டிலுள்ள பெரியவர்களும் தெருவில் இறங்கி வந்து கார்த்தியை ஒன்றிரண்டு சுற்றுகளாவது சுற்ற வேண்டும் என்பது வழக்கம் . அவ்வாறு சுற்றும்போது நம்மைப் பிடித்துள்ள பீடைகள் (கெட்டவைகள்) நீங்கிவிடும் என்று பெரியவர்கள் சொல்லுவார்கள்.

அடுத்த நாள் நாட்டுக்கார்த்தி. அன்று நல்லெண்ணெய் வைத்து தலை குளிப்பாங்க. அவரவர் வசதிக்கேற்ப அசைவ‌ சமையல் நடக்கும். இன்றும் முதல்நாள் போலவே ஆறு மணிக்குமேல் விளக்கு ஏற்றுவது, சாமிக்குப் படைப்பது, கார்த்தி சுத்துவது என எல்லாமும் நடக்கும்.

கார்த்தி சுற்றி முடித்த பிறகு அந்த மட்டைகளை வீட்டின் கூரைமேல் போட்டுவைப்பார்கள். போடும்போது மனதின் ஓரத்தில் சிறு வருத்தமிருக்கும், அது அடுத்த வருடம் வரும்வரை கார்த்தி சுற்ற காத்திருக்க வேண்டுமே என்பதற்காகத்தான் ! காய்ந்து போகும்வரை அவை அங்குதான் கிடக்கும் ........................................................(முற்றும்).

       அனைவருக்கும் இனிய திருக்கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்கள் !!

Wednesday, November 6, 2013

கார்த்திகை தீபம் ஸ்பெஷல் !



எங்கள் ஊரில் நாங்கள் கொண்டாடும் கார்த்திகை தீபம் பற்றிய பதிவு இது.

தீபாவளியை ஒட்டி வரும் மற்றொரு பண்டிகை கார்த்திகை தீபமாகும். கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரம் வரும் நாள் அன்று கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது.

பைசா செலவில்லாமல் நன்றாக எஞ்ஜாய் பண்ணி கொண்டாடும் ஒரு பண்டிகை என்றால் அது இதுதான். பொங்கலுக்கு அடுத்தபடியாக எங்களுக்குப் பிடித்த பண்டிகை என்றால் அது திருக்கார்த்திகை தீபம்தான்.

சிலர் தீபத்திற்கென‌ புத்தாடை வாங்குவதுண்டு. தீபாவளியின்போது வாங்கிய பட்டாசுகளில் மீதமானவற்றை பத்திரப்படுத்தி தீபத்தின்போது வெடிப்பதும் உண்டு.

எங்கள் ஊரில் இது இரண்டு நாள் பண்டிகையாகக் கொண்டாடப்படும். முதல் நாள் சாதாரண (பரணி) கார்த்தி, இரன்டாவது நாள் நாட்டு கார்த்தி. முதல் நாள் வடை & பாயசத்துடன் சமையல் நடக்கும். இரண்டாவது நாள் அசைவ சாப்பாடு, அவரவர் வசதிக்கேற்ப செய்வது வழக்கம்.

கார்த்திகை என்றாலே முதலில் நினைவுக்கு வருவது அகல் விளக்குகளின் வரிசையும், கார்த்தி சுற்றுவதும்தான். இந்த இரண்டு நாட்களிலும் இரவு நேரம் வண்ணமயமாக காட்சியளிக்கும். பார்க்கவே ஜ‌கஜோதியாக இருக்கும். ஜோதிப் பிழம்பானவன்தானே சிவபெருமான். ஊரில் எங்கும் மின்மினிப் பூச்சிகள் படையெடுப்பது போலவே இருக்கும்.

தீபம் வருவதற்கு ஒரு வாரம் முன்பாகவே அகல் விளக்குகளை கூடைகளில் வைத்து விற்பனைக்கு எடுத்து வருவார்கள். மேலே படத்திலுள்ளதுபோல் இருக்கும் சாதாரண விளக்குகள்தான் அவை. இப்போது பலவித கண்ணைப் பறிக்கும் அகல் விளக்குகள் விற்பனைக்கு வருகின்றன.

வாங்கிய புது அகல்விளக்குக்களைத் தண்ணீரில் போட்டு ஊறவிடுவர். பழைய அகல் விளக்குகள் வீட்டில் இருந்தால் அவற்றை சோப்பு நீரில் ஊறவிட்டு கழுவித் துடைத்து பயன்படுத்துவதும் உண்டு.  அன்றுதான் வீட்டிலுள்ள எல்லா குத்து விளக்குகளும் வெளியே வரும்.

விளக்குகளில் மஞ்சள், குங்குமம் வைத்து, நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் ஊற்றி தீபமேற்றுவர். தீபத்திருநாள் அன்று ஒவ்வொரு வீட்டிலும் பருத்தி பஞ்சிலிருந்து விளக்கிற்கு திரி செய்வது ஒரு பெரிய‌ வேலையாக‌ இருக்கும்.

இரண்டு நாட்களிலும் எல்லோரது வீட்டிலும் மாலை 6 மணிக்கு அகல் விளக்கு ஏற்றி வைப்பார்கள். இந்த இடம் என்றில்லை, வாசல், படிக்கட்டுகள் என எல்லா இடங்களிலும், அவ்வளவு ஏன் குப்பையிலும் ஏற்றுவார்கள். கொஞ்சம் கவனமாக இருந்து எடுத்துவிட வேண்டும். சில சமயங்களில் குப்பை எரிந்த சம்பவங்களும் உண்டு.

பிறகு ஒன்பது பத்து மணிக்கெல்லாம் எல்லா விளக்குகளையும் சேகரித்து அடுத்த நாளுக்குத் தயாராக வைப்பார்கள். அதுவரை தேவையானால் விளக்கில் எண்ணெய் ஊற்றி, காற்றில் அணையாமல் பாதுகாக்க வேண்டியது எங்களின் வேலை. அன்றைக்குனு பார்த்து காற்று வீசுவீசுன்னு வீசும்.

கார்த்திகை அன்று காலையில் குட்டிப் பிள்ளைகள் எல்லோரும் அவங்கவங்க வீட்டுத் தோட்டத்தில் இருக்கும் பனை மரத்தின் கீழே விழுந்து கிடக்கும் பனம்பூவை பொறுக்குவார்கள்.

யார்யார் வீட்டில் யார்யார் பனம்பூக்களைப் பொறுக்குகிறார்கள் என்பது அவரவர் வீட்டுத் தோட்டத்தில் இருந்து பார்த்தாலே தெரிந்துவிடும்.

பனம்பூவை எதற்காகப் பொறுக்குகிறார்கள் ! என்ன செய்வதற்காகப் பொறுக்குகிறார்கள் ! இதற்கும் தீபத்திற்கும் என்ன சம்மந்தம் ? ......(தொடரும்)

Friday, November 1, 2013

இலையுதிர் காலம் !


நான் தினமும் 'வாக்' போகும் வழியில் உள்ள ஒரு மரம் ( Maple tree ) இது. ஒவ்வொரு காலத்திற்கும் ஏற்றார்போல் அது தன்னை மாற்றிக்கொள்ளும் அழகைப் பாருங்களேன் !

இப்போது முதலில் நிறம்மாற ஆரம்பித்திருப்பது இந்த வகை மரங்கள்தான். மற்ற மரங்கள் எல்லாம் 'கப்சிப்' என‌ கையை கட்டிக்கொண்டு வரிசையில் .........

 *********************************************************************************

குளிர் காலத்தில்.......


பட்டுவிட்டாயே என
வெட்டிவிட வேண்டாம்
மீண்டும்
வசந்தகாலத்தின்
வளர்ச்சியைப் பார்க்காதவரை.

*********************************************************************************

வசந்தத்தில்.......


********************************************************************************

கோடையில்..........

*********************************************************************************

கொள்ளை அழகுடன் இலையுதிர் காலத்தில்......(தற்சமயம்)


*********************************************************************************

 குளிர்காலத்தில் காய்ந்துபோய், இனி அவ்வளவுதான் என நினைக்கும்போதே, வசந்தத்தில் துளிர்க்க ஆரம்பித்து, கோடையில் குதூகலமாகி, இலையுதிர் காலத்தில் பார்க்கவே கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

இன்னும் சில நாட்களில்.....ஒரு காற்றடித்தால் போதும், மரத்திலுள்ள இலைகள் எல்லாம் தரையில்....சோக‌மாய்.....மரத்துடன் சேர்ந்து நாமும்தான்!

**********************************************************************************

Wednesday, October 30, 2013

தீபாவளி ஸ்பெஷல் !!.........(தொடர்ச்சி)


                          சுடச்சுட புது முறுக்கு தயாரா இருக்கு, எடுத்துக்கோங்க ! 

**********************************************************************************

சென்ற பதிவின் தொடர்ச்சி....

நான் அமெரிக்கா வந்தபோது, கூடவே தீபாவளியும் வந்துசேர்ந்தது.

திருமணத்திற்குப் பிறகு சில‌ தீபாவளிகள் வந்தாலும் இங்கு வந்த பிறகுதான் ஒன்றாகக் கொண்டாடினோம். வேலை, வெளியூர் என ஆளுக்கொரு திசையில். ஊரில் இருந்தவரைக்கும் அம்மாவுடன்தான் தீபாவளி, பொங்கல்...... எல்லாம்.

முதன்முதலாக நாங்களாகக் கொண்டாடும் தீபாவளி. ஸ்வீட்ஸ், காரம் எல்லாம் நானே செய்ய வேண்டுமென ஆசை. ஊரில் அம்மாவுக்கு உதவிகள் செய்திருக்கிறேனே தவிர நானாக எதையும் செய்ததில்லை. ஆனாலும் சிலவற்றை செய்ய முடிவெடுத்தாச்சு. செய்வது எதுவாக இருந்தாலும் ஒரே நாளில் செய்யாமல் தினம் ஒன்று செய்வது எனத் தீர்மானித்தேன்.

திருமணமான புதிதில் பெங்களூருக்குப் போயிருந்தபோது இவர் ஒரு பெரிய புத்தகக்கடைக்கு கூட்டிக்கொண்டு போய் நான் விரும்பிய புத்தகங்களை வாங்கிக்கொள்ளச் சொன்னார். அவரைப்போலவே நானும் இருப்பேன் என நினைத்தது அவர் தவறு.

அங்கு 'சமைத்துப்பார்' என்ற தமிழ் புத்தகத்தை நான் கையில் எடுக்கவும் இவர் சிரித்துக்கொண்டே வாங்கிக்கொடுத்தார். அது இங்கு வந்த பிறகு அடிப்படையான சமையலுக்குக் கொஞ்சம் உதவியாக இருந்தது.

லட்டு எப்படி செய்ய வேண்டும் என்பதை மட்டும் அந்தப் புத்தகத்தில் பார்த்துக்கொண்டு அளவுகளை நானே போட்டு,  முதன்முதலாக எப்படியோ தட்டுத்தடுமாறி 11 லட்டுகள் செய்தேன். செய்து வைத்துவிட்டு என்னையே என்னால் நம்ப முடியாமல் டேஸ்ட்கூட பண்ணாமல் இவர்கள் வீட்டிற்கு வரும்வரை காத்திருந்தேன் .

சாப்பிட்டு பார்த்தால் சூப்பர் சுவை. முதல் ஸ்வீட்டே சூப்பராக வரவும் அடுத்தது என்ன செய்யலாம் என ஆர்வம் அதிகமாகிவிட்டது.

அடுத்த நாள் ஊரில் இருக்கும் என்னுடைய சகோதரியைப் பாடாய்ப்படுத்தி வெல்லப்பாகுக்கு பதம் கேட்டு, அழகழகான அதிரசங்களையும் சுட்டாச்சு. 

அடுத்து முறுக்கு செய்ய எண்ணி என்னென்னெ சேர்க்க வேண்டும் என அம்மாவிடம் அளவுகள் கேட்டு வாங்கி, அதை எந்த அளவுக்குக் குறைக்க முடியுமோ அந்த அளவுக்குக் குறைத்து, நானே ஒரு அளவைத் தயார் செய்துகொண்டு, அவற்றை வறுத்து மிக்ஸியில் போட்டு இடித்து மாவாக்கியாச்சு.

அம்மா சொல்லியிருந்தாங்க, "மாவு திப்பிதிப்பியா இருந்தா முறுக்கை கடித்துதான் சாப்பிட முடியும், சமயங்களில் அதுகூட முடியாது, அதனால மாவு மழமழன்னு இருக்கணும், அப்போதுதான் முறுக்கு பொரபொரனு வரும்", என்று.

என்னிடம் நம்ம ஊர் மிக்ஸி இல்லை. இந்த ஊர் மிக்ஸி எப்படி அரைக்கும் என்று சொல்லத் தேவையில்லை.

மாவை சலிக்க வேண்டும், சல்லடை இல்லை. அருகில் இருந்த ஒரு தோழியிடம் 'சல்லடை இருக்கிறதா' எனக் கேட்டேன்.

அவர், "என்னிடம் சல்லடை இல்லை சித்ரா, 'டீ அரிப்பி' இருக்கு, எடுத்துட்டு வரேன்" என்றார்.

சல்லடை மாதிரியிருக்கும் ஒன்றைத்தான் டீ அரிப்பி என்கிறாரோ, அது எப்படி இருக்கும் என்ற ஆவலில் அவர் வருகையை எதிர்பார்த்து வெளியிலேயே காத்திருந்தேன்.

அவரோ எவர் சிலவர் டீ வடிகட்டியுடன் வந்தார். பிறகு 'உங்கள் ஊரில் இப்படித்தான் சொல்வீர்களா, எங்கள் ஊரில் இப்படி சொல்லுவோம்' என்ற சம்பாஷனைகளைத் தொடர்ந்து, நான் வேண்டாம் என்று மறுத்தும் அவர் தன்னிடம் ம‌ற்றொன்று இருப்பதாகச்சொல்லி, கொடுத்துவிட்டுப் போய்விட்டார்.

போகும்போது 'நான் சொன்ன மாதிரி முறுக்கு செய்திருந்தால் இவ்வளவு பிரச்சினையில்லையே' என்றார்.  [என் பேச்சையே நான் கேட்காதபோது, அவர் சொல்வதையா கேட்கப்போகிறேன்!].

மனசு கேட்காமல், மாவை சலித்துவிட்டு டீ வடிகட்டியை நன்றாகக் கழுவி எடுத்துபோய் அவரிடம் கொடுத்தால், இனி தேவைப்படும்போது பயன்படுத்திக்கொள் என்று சொல்லிவிட்டார்.

அந்த டீ வடிகட்டி இன்னும் என்னிடம் பத்திரமாக இருக்கிறது. ஒரு 10 மாதங்களுக்கு கொழுக்கட்டை, புட்டு என எல்லாவற்றிற்கும் அந்த டீ வடிகட்டிதான் ஒரு சல்லடையாய் இருந்து எங்களுக்கு உதவியது. ஊருக்குப் போனால் வாங்கி வரும் பொருள்களின் லிஸ்டில் சல்லடை முதல் இடத்தைப் பிடித்துக்கொண்டது.

அந்த முறுக்கு மாவில் அழகழ‌கான குட்டிகுட்டி முறுக்குகள் சுட்டேன். அழகாக இருந்தது போலவே நன்றாகவும் இருந்தது.

அம்மா செய்வது மாதிரி பெரிய முறுக்காக சுட்டிருந்தால் ஒரு முறுக்கிலேயே மொத்த மாவும் காலியாகியிருக்கும் என்பதுதான் உண்மை.

டீ வடிகட்டியில் மாவு சலித்து முறுக்கு சுட்டேன் என்றால் எவ்வளவு மாவு இடித்திருப்பேன் என்று கற்ப‌னை செய்துகொள்ளுங்கள்.

இதுவரை எல்லாமே சொதப்பாமல் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. பிரச்சினை மிக்ஸர் வடிவத்தில் எட்டிப்பார்த்தது.

அடுத்த நாள் மிக்ஸர் செய்யலாம் என முடிவெடுத்து நீண்ட நேரம் போராடி .....   ......    ....  .....  எல்லாம் செய்து கலந்து, கறிவேப்பிலை வறுத்துபோட்டுவிட்டு, கடைசியாக ஊறவைத்த பச்சை பட்டாணியை வடிகட்டி ஈரத்தை துடைத்துவிட்டு வாணலில் இருந்த எண்ணெயில் போட்டதுதான் தாமதம், ஒரு நொடி என்ன நடந்துதுன்னே தெரியவில்லை.

சுதாரித்துக்கொண்டு பார்த்தால் வாணலில் இருந்த எண்ணெயையும் காணோம், போட்ட பட்டாணிகளையும் காணோம், பட்.. பட்பட்.... படார் படார்..... என்ற சத்தம் மட்டுமே மனதில் கேட்டுக்கொண்டிருந்தது. நல்லவேளை வாணலில் எண்ணெய் கொஞ்சமாக இருந்ததால் தப்பித்தேன்.

சமையலறை முழுக்க எண்ணையும் பட்டாணியில் பாதியும். மீதி பட்டாணி எங்கன்னே தெரியவில்லை. பக்கத்தில் யாராவது இருந்தாலும் புலம்பித் தீர்த்திருக்கலாம்.

சிறிது நேரத்திற்கு அப்படியே உட்கார்ந்தாச்சு. 'கூல் டவுன் சித்ரா' என எனக்கு நானே சொல்லிக்கொண்டு தரை, அடுப்படி என எல்லாவற்றையும் துடைத்து கழுவி மீண்டும் துடைத்து........... போதும்போதும்னு ஆயிடுச்சு.

அடுத்த நாள் தீபாவளி........

காலை எட்டு மணிக்கெல்லாம் இட்லி, வடை, கேசரி எல்லாம் செய்துவிட்டு மக‌ளை பள்ளிக்கு அனுப்புவதற்குள் சாமி படைத்துவிடலாம் என நினைத்து கற்பூரம் ஏற்றிவிட்டு, அவர்களை அனுப்பிவிட்டு, கொஞ்சம் உயரத்தில், சுவரில் மாட்டியிருந்த முருகன் காலண்டர் என்னைப் பார்ப்பது போல இருக்கவும் அங்கே சென்று கற்பூரத்தட்டைக் காட்டியதும்தான் தாமதம், அதற்கும் மேலே உயரத்திலிருந்த‌ Smoke detector லிருந்து பீப் பீப் சத்தம் வந்துவிட்டது.

ஏதாவது பிரச்சினை என்றால் அலாரம் வரும் எனத் தெரியும். ஆனால் என்ன செய்ய வேண்டும் எனத் தெரியாது. இவருக்கு ஃபோன் செய்தால் எடுக்கவில்லை. உடனே டீ அரிப்பி கொடுத்த தோழிக்கு ஃபோன் செய்தேன்.

அவர் ஒன்றும் பயப்பட வேண்டாம். கதவு சன்னலை எல்லாம் திறந்துவிட்டால் போதும் என்றார். ஒன்றும் பயனில்லை. ஒருவழியாக ஃபோனை எடுத்த இவரிடம் சொன்னால் 'பேப்பர் எடுத்து விசிறிவிடு' என்றார்.

மேல் வீடு என்பதால் உயரமான ஸீலிங். நல்ல உயரத்தில் ஸ்மோக் அலாரம். நாற்காலியைப் போட்டு எட்டிஎட்டி விசிறிப் பார்த்துவிட்டேன், பலனில்லை. பதட்டமாகவே இருந்தேன். வந்த புதுசா, எமர்ஜென்ஸிகாரங்க வந்திடுவாங்களோன்னு ஒரு பயம். வந்து கேட்டால் என்ன சொல்வது?

இவர் மகளைப் பள்ளியில் விட்டுவிட்டு வந்து அதற்கு சாமரம் வீசும்வரை சத்தம் வந்துகொண்டேதான் இருந்தது. "அதெப்படி நான் இல்லாத சமயமா பார்த்து உனக்கு பிரச்சினை வருது", என்றார். இவர் இருந்தால் பிரச்சினை பிரச்சினையாக ஆக வாய்ப்பே இல்லையே .

ஒவ்வொரு தீபாவளிக்கும் இந்த நினைவுகள் வரத்தவறுவதில்லை. என்னென்ன வேலையெல்லாம் செஞ்சிருக்கோம்னு சிரிப்புதான் வரும்.

இப்போதெல்லாம் எப்படிக் கொண்டாடுறோம்னு நெனக்கிறீங்களா? நாங்கதான் நல்ல்ல்லா தெளிவாயிட்டோமே ! இந்த வருட தீபாவளியைக்கூட நவம்பர் கடைசி 'வீக்கெண்ட்'டுக்கு தள்ளி வச்சிருக்கோம்னா பார்த்துக்கோங்க!    (முற்றும்)
                                                                                                                                            

அனைவருக்கும் இதயம்கனிந்த, இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் !!

Friday, October 25, 2013

தீபாவளி ஸ்பெஷல் !!.........(தொடர்ச்சி)



தீபாவளி ஸ்பெஷலாக சோமாஸ் கொண்டு வந்திருக்கேன், எப்படி இருக்குன்னு (சாப்பிட்டு பார்த்துதான்) சொல்லுங்க !

#################################################################################

இரவு தீபாவளி வரும்நாளை நாங்கள் 'இடிச்சு பொடச்சு' போடும் நாள் என்போம். ஒருவேளை அந்த நாட்களில் நெல், அரிசி இவற்றை இடித்தும் புடைத்தும் செய்ததால் இந்தப் பெயர் வந்திருக்க வேண்டும்.

அன்று காலையே அடுத்த நாள் இட்லிக்கான அரிசியும் உளுந்தும் ஊற வைத்துவிடுவார்கள். ஏதோ மாதக்கணக்கில் வைத்து சாப்பிடுவதற்கு அரைப்பதுபோல் பெரிய பெரிய பாத்திரங்களில் அவை ஊறிக்கொண்டிருக்கும்.

நண்பகலுக்கே மாவை அரைக்க ஆரம்பித்துவிடுவார்கள். மின்சாரம் போய்விட்டால் அவ்வளவையும் யார் கையால் ஆட்டி எடுப்பது? எனவே மதியத்திலிருந்து மாலைவரை கிரண்டர் ஓடும் சத்தம்...அப்பப்பா, எப்போது நிற்கும் எனத் தோன்றும்.

வீட்டிலுள்ள ஆண்களில் யாராவது போய் 'நான்வெஜ்' எடுத்து வருவார்கள். ஆடு, மீன் என அது அவரவர் வசதியைப் பொறுத்தது. எங்கம்மாவுக்கு இரவுவரை அதை சமைக்கவே நேரம் சரியாக இருக்கும்.

அன்று வீட்டிலுள்ள எல்லோரும் வழியவழிய தலையில் நல்லெண்ணெய் வைத்து தலை குளித்து முடிப்பர்.

புது துணி எடுத்திருந்தால் அது சரியாக இருக்கிறதா என போட்டுபோட்டுப் பார்த்து கடைசியில் அது பாதி பழசாகியிருக்கும்.

நாங்கள் எங்கள் பங்குக்கு அப்பா வாங்கிவந்த பட்டாசுகளை எல்லாம் மெத்தைக்கு எடுத்துக் கொண்டுபோய் காயவைக்கிறோம் பேர்வழின்னு அந்த வெயிலில் வாடி வதங்கிக் கொண்டிருப்போம். இவ்வளவும் காயவைக்கும் நான் ஒரு பட்டாசாவது வெடிக்க வேண்டுமே ....ம்ஹூம்...தொடவே மாட்டேன். அவ்வளவு பயம். பாம்பு மாத்திரை, மத்தாப்பூ பெட்டி, கம்பி, பென்சில் இவைதான் நான் கொளுத்துவது.

பட்டாசு வெடிச் சத்தத்தாலோ அல்லது பட்டாசால் வரும் புகையாலோ தெரியாது, தீபாவளி முடிந்து கொஞ்ச நாட்களுக்கு எங்கள் ஊரில் கொசுத் தொல்லையே இருக்காது.

இப்படி ஒவ்வொரு வேலையாக முடிந்துவர இரவு ஆகிவிடும். பிறகு சாமிக்குப் படைத்துவிட்டு சாப்பிடுபவர்கள் சாப்பிடவும், பட்டாசு வெடிப்பவர்கள் பட்டாசு வெடிக்க வீட்டிற்கு வெளியிலும் வந்துவிடுவார்கள்.

அன்றிரவு தூக்கமே வராது. ஒருவழியாக தூங்க ஆரம்பிக்கும்போது மீண்டும் கிரைண்டர் ஓடும் சத்தம் ஆரம்பித்துவிடும்.

உளுந்துவடை, கடலைப்பருப்பு வடை, சீயம், விதவிதமான‌ பஜ்ஜி, கேசரி என எல்லாமும் தயாராகிக்கொண்டிருக்கும். அம்மாவைப் பார்த்தாலே பாவமாக இருக்கும். எதுக்கு இவ்வளவு செய்றாங்கன்னு தோனும். கொஞ்சம் வளர்ந்த பிறகு அம்மாவுக்கு நிறைய உதவிகள் செய்வோம்.

மீண்டும் அதிகாலையில் எல்லோரும் எண்ணெய் தேய்த்து வெந்நீரில் குளிப்பார்கள். அப்பா கடையிலிருந்து வாங்கி வந்திருக்கும் ஸ்வீட்ஸுடன், வீட்டில் செய்த பலகாரங்கள், பட்டாசு, புது துணி (எடுத்திருந்தால்) என எல்லாவற்றையும் சாமிக்கு முன்னால் வைத்து தீபாராதனை செய்யப்படும்.

சாமி அறையிலேயே கம்பி மத்தாப்பூ, தரை சக்கரம், பென்சில் என சிலவற்றை கொளுத்துவோம். பிறகு புதுதுணி போட்டுக்கொண்டு ஒரே ஓட்டமாக வெளியில் வந்து பட்டாசுகள் கொளுத்தி மகிழ்வார்கள்.

செய்த பலகாரங்களை பாத்திரங்களில் போட்டு எல்லா வீடுகளுக்கும் கொடுப்பார்கள். அவர்களின் வீடுகளிலிருந்து எங்கள் வீட்டுக்கும் வரும். எதற்காக இவ்வளவையும் செய்து எல்லோருக்கும் கொடுத்து, அவர்களும் இவர்களுக்கு கொடுத்து...... எல்லாம் ஒரு உறவுப்பாலம்தான்.

சோர்வடையும்வரை ஆட்டம்தான். எல்லா உறவுகளும் பக்கத்திலேயே இருப்பதால் இங்கும் அங்குமாக ஓடிஓடி வந்து.....ஜாலியாக இருக்கும்.

அன்று மதியம் சமையல் கிடையாது. அவரவரும் பிடித்தமானவற்றை எடுத்து சாப்பிட்டுக்கொள்ள வேண்டியதுதான். ஆனால் அம்மா பாடுதான் கொஞ்சம் கஷ்டம். அப்பாவுக்கு இது பிடிக்காது. டீ, காபி என எப்படியோ ஓட்டிவிடுவார்கள்.

சென்ற பதிவில் நோன்பு, நோன்பு சட்டி என்றும் சொல்லியிருந்தேனே, அது எப்படி செய்வார்கள் என்று பார்ப்போமே !

சில சமயங்களில் தீபாவளி அன்று அமாவாசை வரும். இல்லையென்றால் அதற்கும் அடுத்த நாள் வரும். அந்த அமாவாசை வரும் நாளன்றுதான் கேதார கௌரி விரதம் இருப்பார்கள்.

நோன்புக்கு விரதம் இருப்பவர்கள் அன்று காலையில் இருந்தே எச்சில்கூட விழுங்காமல் இருப்பார்கள். திருமணமாகாத பெண்கள் இந்த விரதம் இருந்தால் நல்லது என்பார்கள்.

தினையை ஊறவைத்து உரலில் இடித்து, மாவாக்கி (இதற்கு ஏழு தோல் இருக்கும் என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கேன், அவ்வளவு எளிதில் மாவாகாது) அதில் வெல்ல பாகு ஊற்றி கிண்டி அதிரசம் செய்வதற்காக  எடுத்து வைத்திருப்பார்கள். 'எப்போதடா படைச்சு முடிப்பாங்க, அந்த மாவை ஒருகை பார்த்துவிடலாம்' என பிள்ளைகள் எதிர்பார்த்திருப்பார்கள். அவ்வளவு சுவையாக இருக்கும் அந்த மாவு.

இப்போது தினையை பார்ப்பதே அரிது. அதனால் பச்சரிசியிலேயே அதிரசம் செய்துவிடுகிறார்கள். செய்வதற்கும் எளிது.

நோன்புக்கு தேவையான சாமான்கள் எல்லாம் வாங்கிவந்து ஒரு புது சட்டியில் போட்டு வைத்திருப்பார்கள். நோன்புக்கயிறு, விலவ இலை போன்றவை அதில் முக்கியமானவை.

மாலையானதும் ஒருபக்கம் சமையலும், இன்னொரு பக்கம் அதிரசம் செய்வதும் நடக்கும். அவற்றை சாமி அறையில் கொண்டுவந்து வைத்து படைப்பாங்க. விரதம் இருப்பவர் புதுதுணி அணிந்துகொண்டு, வில்வ இலைகளை கையில் வைத்துக்கொண்டு தன்னைத்தானே ஒன்பது சுற்றுகள் சுற்றிக்கொண்டு, ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு இலை என நோன்பு சட்டியில் போட்டுவிட்டு, சாமி கும்பிட்டுவிட்டுதான் சாப்பிடுவார்கள். இன்று மீண்டும் பட்டாசுகள் கொளுத்தப்படும்.

படைத்ததும் எல்லோரும் நோன்புக்கயிறை கையில் கட்டிக்கொள்வார்கள். அதைக் கட்டும் விதமே வித்தியாசமாக இருக்கும். அம்மா வீட்டிலிருந்து பெண்ணுக்கு நோன்புக்கயிறும் அதிரசமும் அனுப்பி வைகப்படும்.

இந்த நோன்பு செய்முறை ஒவ்வொரு குடும்பத்திற்கும் இடையே வேறுபடும். நான் சொன்னது எங்க அம்மா வீட்டில் செய்வது.அதேபோல் வெளியூரில் உள்ள உறவினர் வீடுகளில் வேறு மாதிரியாக கடைபிடிப்பார்கள்.

சில வீடுகளில் "எண்ணி வைத்து செய்வது" வழக்கம். அதாவது சமையலில் சேர்க்கப்படும் காய்கறிகளிலிருந்து அதிரசம், நோன்புக்கயிறு என எல்லாமும் 21 எண்ணிக்கை வருமாறு செய்வார்கள். சிலர் நோன்பு சட்டியை  கோயிலுக்கு எடுத்துச்சென்று படைத்து எடுத்துவருவர்.

இப்போது உள்ளதுபோல் அப்போதெல்லாம் காரம் & ஸ்வீட்ஸ் எல்லாம் தீபாவளிக்கு முன்னரே செய்து வைத்துவிட மாட்டார்கள். தீபாவளி முடிந்த பிறகுதான் முறுக்கு மாவே தயாராகும்.

தீபாவளிப் பலகாரங்களில் முறுக்கும் அதிரசமும் கட்டாயம் உண்டு. மேற்கொண்டு எல்லடை, சோமாஸ் என எல்லாம் அவரவர் விருப்பம்போல்,  வசதிக்கேற்றார்போல் செய்யப்படும்.

தீபாவளி முடிந்த பிறகு ஓரிரு மாதங்கள்வரை பேருந்தில் பயணம் மேற்கொள்வோரில் பாதிபேருக்கும்மேல் உறவினர் வீடுகளுக்கு பலகாரங்களுடன் பயணம் செய்ப‌வர்களாகத்தான் இருப்பார்கள்.....(தொடரும்)

[இந்த ஊரில் நான் கொண்டாடிய நகைச்சுவையான‌ முதல் தீபாவளி அடுத்த தீபாவளி ஸ்பெஷலில்]