கோடை விடுமுறை முடிந்து இன்றுதான் பள்ளி துவங்குகிறது. இதற்கான ஆயத்தங்கள் வீடு முதல் கடை வரை ஓரிரு வாரங்களுக்கு முன்பிருந்தே களைகட்டத் தொடங்கிவிட்டன.
இனி தெரு முழுவதும் பட்டாம்பூச்சிகளாய் பள்ளிப் பிள்ளைகள் பறந்து வருவதும், போவதுமாக வண்ணமயமாகிவிடும்.
நாங்களும் இந்தக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளாமல் விட்டால் எப்படி ? எங்கள் பாப்புவிற்கும் இன்றுதான் பதினோறாம் வகுப்பிற்கான முதல்நாள்.
'அதற்குள் என் பெண் பதினோறாம் வகுப்பு படிக்கப் போகிறாளா !!' என எனக்குள் ஒரே ஆச்சரியம்.
("
வயச குறைப்பீங்கன்னு தெரியும், ஆனால் இப்படி அநியாயத்துக்கு பாப்பாவின் வகுப்பையும் சேர்த்தில்ல குறைச்சிட்டீங்க" _______ மனக்குமுறல் கே க் கு து. மேற்கொண்டு படிச்சாதானே எதுக்காக குறைச்சேன்னு தெரியும் !)
எல்லா அம்மாக்களையும் போலத்தானே நானும். பிள்ளைகள் சீக்கிரமே வளர்ந்துவிட வேண்டும் என நினைப்பதும், பிறந்தநாள் & ஒரு வகுப்பிலிருந்து அடுத்த வகுப்புக்கு மாறும்போதும் வியந்து 'அதுக்குள்ளே வளந்துட்டாங்களே' என வியப்பதும் வாடிக்கைதானே.
என் பெண்ணைவிட நான்தான் அன்று அதிக சந்தோஷமாக இருந்தேன். பின்னே இருக்காதா? இனி மதிய உணவுக்கு சாப்பாடு கட்ட வேண் டிய தில் லைஐஐ ! வீட்டுக்கு வந்து சாப்பிட்டுக்கொள்வதாக மகள் சொன்னதுதான் அதற்கு காரணம்.
அன்று மகள் பள்ளிக்குக் கிளம்பிச் சென்றதும், ஓடிப்போய் ஃப்ரிட்ஜில் ஏற்கனவே ஒட்டப்பட்டிருந்த சென்ற வருட காகிதங்களை எல்லாம் வழித்தெடுத்துவிட்டு, சுத்தம் செய்து (வெளிப்பக்கம் மட்டும்தான்) தயாராக வைத்திருந்தேன்.
இன்று பள்ளியிலிருந்து எடுத்து வரும் முக்கியமான காகிதங்களை ஃப்ரிட்ஜில் ஒட்டிவைக்க வேண்டும். அவற்றுள் அதிமுக்கியமானது தொலைபேசி, அலைபேசி எண்களுடன் கூடிய அவளுடைய தோழிகளின் பெயர்கள். ஒரு அவசரம் என்றால் உதவுமே என, இது எனக்கானது .
இதில் சில பெயர்கள் இன்று காணாமல் போயிருக்கும், சிலர் புதிதாக முளைத்திருப்பார்கள். சிலர் தொடர்ந்து இடம் பெற்றுக்கொண்டே இருப்பார்கள்.
நான் இந்த காகிதத்தை ஒட்டும்போதே ஒரு நோட்டமிடுவேன். வேறெதற்கு ? நம்ம ஊர் பிள்ளைகள் யாராவது தென்படுகிறார்களா என்பதற்குத்தான்.
இதில் என் பெண்ணிற்கு உடன்பாடில்லை. இருந்தாலும் என்னால் இந்தப் பழக்கத்தை விடமுடியாது.
இங்கே ஒவ்வொரு விளையாட்டுக்கும் ஒவ்வொரு சீஸன் உண்டு. பள்ளியில் கல்வியாண்டின் முதல் பாதியில் டென்னிஸ் விளையாடுவார்கள். இரண்டாம் பாதியில்தான் பேட்மிண்டன் ஆரம்பிக்கும். இந்த வருடமும் அப்படியே.
அந்த சமயத்தில் முதல்நாள் பேட்மிட்டன் முடிந்து வந்ததும், " அம்மா, புது தோழி கெடச்சிருக்கா, பேர்கூட ழா(ரா)ம்யா" என்றாள்.
ழகரமும், ரகரமும் இணைந்து புதுவிதமாக இந்தப் பெயரும் காதுகளுக்கு இனிமையாகத்தான் ஒலித்தது.
" பெயரைப் பார்த்தால் ... ", என்று நான் முடிக்குமுன், "ஆமாம்ம்மா, பார்ப்பதற்கு நம்ம ஊர்(நாடு) மாதிரியேதான் இருக்கா" என்றாள்.
மகளுக்குத் தெரியும் அம்மா அடுத்து என்ன கேட்பாங்க என்று. அதனால் அவளே முந்திக்கொண்டு பதில் சொல்லிவிட்டாள்.
"ஆனால் அவளுக்கு நம்மையும், நம் ஊரையும், பிடிக்காதாம்", என்றாள்.
"ஒருவேளை இங்கேயே பிறந்து வளர்ந்ததால்கூட இருக்கலாம், நாளானால் சரியாயிடும்" என்றேன். ஆனால் இது தொடர்ந்து கொண்டுதான் இருந்தது.
பிரிதொரு நாள் அவள் இலங்கை என்பதை அறிந்தேன்.
'ஒருவேளை, அங்குள்ள பிரச்சினைகளால் ஏற்பட்ட மாறாத வடுக்களால் அப்படி சொல்லியிருக்கலாம்' என்றேன். அவள் இலங்கைத் தமிழர் என்ற முடிவுக்கு நானே வந்துவிட்டேன்.
வழக்கம்போல் நாட்கள் விரைந்து ஓடியதில் மகள் பனிரெண்டாம் வகுப்புக்கு வந்துவிட்டாள். புதிய காகிதங்களுக்காக மீண்டும் ஃப்ரிட்ஜின் வெளிப்பக்கம் சுத்தமாக்கப்பட்டது.
மாலையில் நாங்கள் இருவரும் அன்றைய சுவாரசியமான நிகழ்வுகளை அலசிக்கொண்டே காகிதங்களை ஒட்டினோம்.
வழக்கம்போல நானும் ஃபோன் நம்பர்கள் உள்ள காகிதத்தை நோட்டம் விட்டேன். அதில் 'ழா(ரா)ம்யா'வின் பெயர் புதிதாக முளைத்திருந்தது.
கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன். இப்போது 'பிடிக்காது' என்பதன் அர்த்தமும் விளங்கியது.
அங்குள்ள கிரிக்கெட் விளையாட்டு வீரர்களின் பெயரின் கடைசி எழுத்து, அதேபோல் அங்கிருக்கும் அரசியல் வாதிகளின் பெயரின் கடைசி எழுத்திலும் அகரம் அல்லது ஏகாரம் மிகுந்திருக்குமே அந்தப் பெயரைப் போலவே இருந்தது அப்பெண்ணின் லாஸ்ட் நேம்.
கல்லூரிக்குப் பறந்துவிட்டாலும் இன்றளவும் இருவரின் நட்பும் தொடர்ந்துகொண்டுதான் உள்ளது.
கல்லூரி வாசத்தினால் இப்போது கொஞ்சம் மனப்பக்குவம் வந்திருக்கும் என்றே நினைக்கிறேன். வந்திருக்க வேண்டும்.
மீண்டும் நாட்கள் உருண்டோடியதில் ஒரு வருட கல்லூரி வாசம் முடிந்து மகளுக்குக் கோடை விடுமுறை வந்தது. ஊருக்குப் போனோம். அங்கே நெருங்கிய உறவில் குட்டிப் பூ ஒன்றின் வரவு எங்களை மிகவும் மகிழ்வித்தது.
நீண்ட நேரத்திற்கு குழந்தையின் அழகில் மயங்கியும், பேச்சு சுவாரசியத்தில் மூழ்கியும் இருந்த நான் நினைவு மீண்டு, "பாப்பாவுக்கு என்ன பேர் வச்சிருக்கீங்க?", என்றேன்.
"ரம்யா" என்றார் குழந்தையின் அம்மா.
ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஒருசேரக் கண்களில் தேக்கியவாறு மகளைப் பார்த்து முறுவலித்தேன்.
புரிந்துகொண்டவளாய் "அம்ம்ம்மா, that's okay, இவள் ரம்யா, அவள் ழா(ரா)ம்யா," என்றாள் மகள்.
வீட்டில் ஃப்ரிட்ஜின்மேல் ஒட்டியிருந்த காகிதம், 'அவர்களால் உச்சரிக்க முடியாமல்தானே ரம்யா, ழா(ரா)ம்யாவானாள்' என மனக் காற்றில் அசைந்தாடி காட்டிக்கொண்டிருந்தது.