ஒரு தடவை இங்குள்ள பப்ளிக் சானலில் மீள்சுழற்சி தோட்டம் பற்றி சொன்னார்கள். அதில் நாம் வீட்டு உபயோகத்திற்காக வாங்கும் பொருள்கள் உள்ள ப்ளாஸ்டிக் டப்பாக்களைத் தூக்கிப் போடாமல் அதை மறுசுழற்சி செய்து எப்படி செடி வளர்க்கலாம் என்று காட்டினார்கள்.
அவர்கள் சொன்ன மாதிரியே நானும் ஒரு பால் கேனை சுத்தம் செய்து, படத்திலுள்ளதுபோல் அடிப்பகுதியை நறுக்கிவிட்டு, மீதமாகும் தண்ணீர் வெளியேற மூடியில் ஒரு துளையிட்டு, டப்பாவில் பாதியளவிற்கு மண் நிரப்பி, தேவையான கொத்துமல்லி விதைகளை இரண்டிரண்டாக உடைத்துத் தூவி விட்டு, அதன்மேல் சிறிது மண் தூவி, தண்ணீர் தெளித்தேன்.
மண்மீது எப்படி உளுந்து தோல் இருக்குன்னுதானே பாக்குறீங்க ! அது வேறொன்னுமில்லீங்க, அவங்களே சொன்னாங்க, செடிகளுக்கு காய்கறி, பழங்கள், தானியங்கள் இவற்றைக் கழுவிய தண்ணீர் & பாஸ்தா வேக வைத்த தண்ணீர் எல்லாம் ரொம்ம்ம்ம்பப் பிடிக்குமாம். அவர்கள் இப்படி சொன்னது எனக்கு ரொம்ம்ம்பவே பிடிச்சு போச்சு.
அதிலிருந்து அரிசி கழுவிய முதல் இரண்டு தண்ணீர் (மூன்றாவது தண்ணீர் சமைக்க எடுத்துக்கொள்வேன்), உளுந்து கழுவிய தண்ணீர் & தோல் இவற்றை மட்டும் செடிகளுக்கு பயன்படுத்துவேன். சிலசமயங்களில் டீத்தூள்கூட போடுவேன்.
மேலும் காய்கறிகள், பழங்கள் நறுக்கும்போது தேவையில்லாதவற்றை குப்பையில் போடாமல் அவற்றை பொடியாக நறுக்கி செடிகளுக்குப் போடலாம் என்றும் சொன்னார்கள். அருமையான யோசனை, இதை செய்ய எனக்கும் விருப்பம்தான். ஆனால் கார்பேஜுக்கு போகவேண்டிய ஈக்கள் எங்கள் தோட்டத்திற்கு படையெடுத்துவிட்டால் என்ன செய்வது என பயந்து விட்டுவிட்டேன்.
மீண்டும் விட்ட இடத்திற்கே வருகிறேன். சில நாட்களில் கொத்துமல்லி விதைகள் முளைத்து வர ஆரம்பித்தன. பார்த்தாலே தெரிகிறதே, எவ்வளவு செழிப்பாக வளர்கிறதென்று !
செடிகளில் உள்ள பூச்சிகளை விரட்ட தண்ணீரில் dish liquid கலந்து ஸ்ப்ரே பண்ணச் சொன்னார்கள். நான்தான் செய்வதில்லை. அதற்கு பதிலாக காமாக்ஷிமா சொன்னமாதிரி ஒருதடவை மட்டும் தண்ணீரில் மஞ்சள் கலந்து அடித்தேன். மேலே படத்திலுள்ள மஞ்சள் நிறத்திற்கு அதுவே காரணம்.
எல்லாம் சரிதான்... இந்த டப்பாவில் செடியை வளர்ப்பதற்குள் நான் பட்டபாடு... ஐயையையையயோ. இந்த ப்ளாஸ்டிக் கேனைச் சுற்றி நான்கு பக்கமும் மற்ற தொட்டிகளை வைத்து அரண் அமைத்தால்தான் நிற்கும்.
காலையிலும், நண்பகலிலும் தொட்டிகளை வெயில் அடிக்கும் பக்கமாக நகர்த்தி வைப்பேன். அந்த சமயத்தில் மறந்துபோய் இந்த பால்கேன் பக்கத்திலுள்ள தொட்டியை எடுத்துவிட்டால் அவ்வளவுதான், உடனே கீழே சாய்ந்துவிடும்.
பெரிய தோட்டமாக இருந்து, எந்நேரமும் வெயிலும் அடித்தால் தாராளமாக இந்த முறையில் செடிகள் வளர்ப்பேன். முக்கியமாக ஊருக்குப்போய் தோட்டம் போட்டால் மேலே சொன்ன எல்லாவற்றையும் கடைபிடிக்க முடிவெடுத்துள்ளேன்.
விதை போட்டு நாற்று வளர்க்கக்கூட இந்த டப்பாக்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். கொத்துமல்லி மட்டுமல்லாமல் உடனே பயன்பாட்டுக்குத் தயாராகும் வெந்தயக் கீரையையும் இதில் வளர்க்கலாம்.
நான் சாதாரணமாக இங்கு தொட்டியில் வளர்க்கும் கொத்துமல்லி செடியைப் பார்க்க இங்கே 'க்ளிக்'கவும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தோட்ட உபயோகத்திற்கு :
மண், உரம் இடுவது மட்டும் போதாது. இரண்டு வாரத்திற்கு ஒரு முறையாவது செடியைச் சுற்றிலும் உள்ள மண்ணைக் கிளறிவிடுவது நல்லது. அப்போதுதான் செடி நன்கு வேர்பிடித்து செழிப்பாக வளரும்.
தோட்டத்தில் வேண்டாத புல், பூண்டுகள் இருந்தால் கொஞ்சம் வெந்நீரில் சமையல் உப்பு கலந்து அவற்றின் வேர் பகுதியில் படுமாறு ஸ்ப்ரே செய்தால் இரண்டொரு நாளில் அவை காய்ந்துவிடும்.
கேட்காத கடன் மட்டுமில்லீங்க, பார்க்காத பயிரும்கூட பாழாகிவிடும். அதனால் முடிந்தளவுக்கு காலையில் எழுந்ததும் தோட்டத்தை பார்வையிடுவது நல்லது.



























