Tuesday, September 9, 2014

பசுமை நிறைந்த நினைவுகள் ..... கிளி ஜோஸியம்

                                                                                      

இந்தியாவுக்குப் போனதும் முதல் வேலையாக மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலுக்கு அழைத்துச் சென்றார் அண்ணன். அங்கே அம்மனை தரிசித்துவிட்டு வெளியே வரும்போது ஒரு ஓரமாக கிளி ஜோஸியக்காரர் ஒருவர் உட்கார்ந்து ஜோஸியம் பார்த்துக்கொண்டிருந்தார். அவரைச் சுற்றி ஒரு கூட்டம்.

மகள் எங்களிடம் ' 'கிளி ஜோஸியம்'னு போட்டிருக்கே என்ன?' என்று கேட்டாள். விஷயம் தெரிந்ததும் தானும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டாள். சிறு வயதிலிருந்தே மகளுக்கு ஜாதகத்தின்மேல் ஒரு ஆர்வம் உண்டு. பல தளங்களுக்கும் சென்று கைரேகை, ராசிபலன் எல்லாம் பார்ப்பாள்.

அடுத்து சென்னைக்குப் போகிற வேலை இருந்ததால், 'இன்னொரு நாள் பார்த்துக்கொள்ளலாம்', என சமாதானம் சொல்லி அழைத்துச் சென்றுவிட்டோம்.

எனக்கும்கூட சிறு வயதிலிருந்தே இந்த கிளி ஜோஸியத்தின்மீது ஒரு கண் உண்டு. தெருவில் யார் வீட்டுத் திண்ணையிலாவது ஜோஸியக்காரர் உட்கார்ந்தால் போதும் வியாபாரம் களைகட்டிவிடும். ஒவ்வொருவராக வந்து பார்த்துவிட்டு அடுத்தவரையும் பார்க்கச் சொல்லி ஆசையை கிளப்பிவிடுவர்.

வீட்டில் அனுமதி இல்லாததால் வேடிக்கை பார்ப்பதோடு சரி. இந்தமுறை பாப்பாவுக்குப் பார்க்கும்போது நாமும் நம் ஆசையை நிறைவேற்றிக்கொள்ள வேண்டியதுதான் என மனதளவில் சந்தோஷப்பட்டேன்.

இரண்டு வாரங்கள் கழித்து கிளி ஜோஸியக்காரர் எங்கள் தெரு வழியாக வந்திருக்கிறார். வெளியில் நின்றிருந்த மகள் என்னை அவசரமாகக் கூப்பிட்டு, ' "கிளி ஜோஸியர் போகிறார்,  கூப்பிடும்மா" என்றாள்.

'கிளி ஜோஸியம் பார்த்து முடிந்ததும் அவர் என்ன சொன்னார் என்பதைத் தனக்குச் சொல்ல வேண்டும்' என்ற கட்டளையுடன் பவ்யமாக உட்கார்ந்தாள். 10 ரூபாய் கொடுத்த பிறகே அதாவது ஜோஸியர் பணத்தை வாங்கிக்கொண்டு பெட்டியை ஒரு தட்டு தட்டியதும் கிளி வெளியே வந்தது.. ஜோஸியர் பெட்டியை மீண்டும் தட்டியதும் கார்டுகளை ஒவ்வொன்றாக எடுத்துப்போட்டது.


ஜோஸியர் பெட்டியை மீண்டும் தட்டியதும் வாயிலிருந்த கார்டை அவரிடம் கொடுத்துவிட்டு பெட்டிக்குள் சென்றுவிட்டது.பெட்டிக்குள் போகும்போது பாவமாக இருந்தது.


அடுத்தடுத்து நாங்கள் அனைவரும் பார்த்துக்கொண்டோம்.  பல வருடக் கனவு நிறைவேறியதில் எனக்கு மகிழ்ச்சி.

இந்த ஒரு கிளியை நம்பி குடும்பத்தை திருநெல்வேலியில் விட்டுவிட்டு வந்திருப்பதாகச் சொன்னார் ஜோஸியர்.

ஜோஸியர் போனதும் மகள் என்னிடம் "அம்மா, அந்தக் கிளியை அவர்தானே வளர்க்கிறார். அதை ஏன் பயமுறுத்தி வைத்திருக்கிறார் ? ஒரு தடவைகூட கிளியை அவர் தடவிக் கொடுக்கவில்லை, கொஞ்சவும் இல்லை, கிளியைப் பார்க்க பாவாமாக இருக்கிறது" என்றாள்.

ஆமாம், காசா பணமா ? தடவிக் கொடுத்திருக்கலாம்தான், அல்லது கொஞ்சம் கொஞ்சியாவது இருக்கலாம்தான்.

அவளைப் பொறுத்தவரை வளர்ப்புச் செல்லங்கள் என்றால் அவள் வளரும் ஊரில் அவள் பார்த்த மாதிரி இருக்கும் என்று நினைத்துக்கொண்டாள் !!

11 comments:

  1. கிளி ஜோசியம் பார்த்து கிளி ஜோசியக்காரரின் சவால்கள் எல்லாம் நீங்களும் உங்கள் மகளும் தெரிந்து கொண்டு விட்டீர்கள போல் தெரிகிறதே! பாவம் அது தான் வாழ்க்கையின் ஆதாரம் அவருக்கு.

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க, நாங்க நாலு பேர் பாத்துக்கிட்டோம். அப்படியே அவரிடம் பேச்சுக் கொடுத்து தெரிஞ்சுகிட்டாச்சு.

      Delete
  2. நல்ல அனுபவம் தான்.

    பல சமயங்களில் கிளியைப் பார்க்கும் போது பாவமாக இருக்கும். அதை பறக்க விட்டுவிடலாம் என்று கூடத் தோன்றும்.

    ReplyDelete
    Replies
    1. சின்ன வயசுல கிளி ஜோஸியக்காரர பார்த்தா ஒரு சந்தோஷம் இருக்கும். ஆனால் வளர வளர கிளியின் நிலையைப் பார்த்து சோகம்தான் வரும், பறக்க விடணும்போல்தான் இருக்கும்.

      Delete
  3. வெளிநாட்டில வளரும் பிள்ளைகள் இப்படிதான் யோசிப்பாங்க சித்ரா ..என் பொண்ணு சொல்வா அனிமல்ஸ் குடும்ப அங்கதினராம் :) ..மேனகா காந்தி தடை போட்டாங்களே சில வருடமுன் ? மீண்டும் கிளிகள் ஜோசியம் சொல்றாங்களா

    ReplyDelete
    Replies
    1. கிளி ஜோஸியத்த தடை பண்ணினாங்கன்னு இப்போதான் கேள்விப்படுறேன் ஏஞ்சலின். எத்தனை பேரைத்தான் நேரில் வந்து பார்த்து தண்டனை கொடுக்க முடியும்? மக்களாகப் பார்த்து திருந்தினால்தான் உண்டு.

      Delete
  4. உங்கள் மகளின் கருத்து சரிதாங்க...

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க, கிளியிடம் கொஞ்சம் கருணை முகத்துடன் நடந்திருக்கலாம்.

      Delete
  5. சித்ரா ,
    உங்களுடன் விருது ஒன்றைப் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.
    இணைப்பு இதோ http://rajalakshmiparamasivam.blogspot.com/2014/09/blog-post_13.html

    ReplyDelete
    Replies
    1. வந்து பார்க்கிறேனே. தகவலுக்கும் நன்றிங்க !

      Delete
  6. கிளி மட்டுமா, எலி, நரி, கரடியை வைத்துக்கூட ஜோசியம் பார்க்கிறார்களே!

    ReplyDelete