Thursday, February 5, 2015

கன்றுக்குட்டி !!

                    
                                                              கொள்ளை அழகுடன் !

                                                    என்னைப் பார்க்கவில்லையாம் !

                                                             அவிழ்த்து விடேன்  !!

கோடையில் ஊருக்குப் போயிருந்த சமயம் ஒரு உறவு வீட்டிற்கு முதல்முறை போன‌போது அம்மாவின் வயிற்றில் இருந்தவர், மூன்று வாரங்களுக்குப் பிறகு மீண்டும் அவ்வீட்டிற்கு சென்ற‌போது இப்படி ஜம்மென்று கொள்ளை அழகுடன் இருந்தார்.

பார்த்ததும், 'அட, நம்ம பிரேம்குமார் மாதிரியே இருக்கே' என்று க்ளிக்'கிக்கொண்டு வந்தேன்.

டிசம்பர் மாதம், விடுமுறையில் வீட்டிற்கு வந்த மகளுடன் ஊரில் எடுத்த புகைப் படங்களைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, "அம்ம்ம்மா, கேமராவுல இது எப்படி வந்துச்சு?" என்ற மகளின் ஆச்சரியக் கேள்வியால், 'வீட்டுக்குள் இருந்த மகளைத் தோட்டத்திற்கு அழைத்துபோய் காட்டாமல் விட்டுவிட்டேனே' என்று என்னையே நான் நொந்துகொண்டேன்.

" ..... அவங்க வீட்டிற்கு போயிருந்தபோது, எங்க பிரேம்குமார் மாதிரியே இருக்கவும் 'க்ளிக்'கினேன்", என்றேன்.

உங்களை மாதிரியேதான் மகளும், "யாரும்மா உங்க பிரேம்குமார் ?" என்று கேட்டாள்.

ஆமாம், யார் அந்த 'பிரேம்குமார்' ?

நான் ஒன்பதாம் வகுப்பு படித்தபோது எங்கள் வீட்டிற்கு மாடு ஒன்றின் திடீர் வருகை. வந்த‌ சில நாட்களிலேயே அது கன்று ஒன்றை ஈன்றது. அச்சு அசலில் படத்தில் இருக்கும் இந்த கன்று போலவேதான் இருந்தது அது.

அதுக்கு நான் வைத்த பெயர்தான் பிரேம்குமார். அப்போது நான் படித்துக்கொண்டிருந்த‌ துப்பறியும் கதையின் நாயகனின் பெயர்தான் அது.

எங்கிருந்து கூப்பிட்டாலும் முழு பெயெரோ அல்லது பிரேம் என்றாலோ அக்கன்று 'டக்'கென திரும்பிப் பார்க்கும். வளர்ந்த பிறகும் அப்படியேதான்.

இப்போதும் நாங்கள் சகோதரசகோதரிகள் ஒன்றாகக் கூடினால் எங்க 'பிரேம்' பற்றி பேசாமல் இருக்கமாட்டோம்.

பெயர் வைப்பதை இத்துடன் நிறுத்தமாட்டேன். பிடித்தவர்களின் வீட்டில் குழந்தை பிறந்தாலும் அவர்களின் குழந்தைக்கு ஒரு பெயரை வைத்துவிடுவேன். யார்யாரெல்லாம் வளர்ந்த பிறகு என்னைத் திட்டினாங்களோ !

ஆண் குழந்தை என்றால் பெரும்பாலும் கதையின் நாயகனாகவே இருப்பார்கள். பெண் குழந்தையாக இருந்தால் உடன் படித்த & பிடித்த‌ தோழிகளின் பெயராக இருக்கும்.

இப்படித்தான் அண்ணனின் மூன்று குழந்தைகளுக்கும் பெயர் வைத்தேன். நல்லவேளை, எங்க‌ அப்பா எல்லா பெயர்களையும் மாற்றி வைத்துவிட்டார். ஆனாலும் பெண்ணுக்கு மட்டும் நான் வைத்த பெயரே இன்றளவும் கூப்பிடும் பெயராக உள்ளது.

மாடு என்றாலே பெரும்பாலும் 'லஷ்மி'னுதான் பேர் வைப்பாங்க. ஆனால் நான் கொஞ்சம் வித்தியாசமாக இல்லையில்லை அதிவித்தியாசமாக, ஆமாங்க 'லஷ்மி' என பெண்ணின் பெயரை வைக்காமல் 'பிரேம்குமார்' என ஆணின் பெயரை வைத்திருக்கிறேன் என்பது சமீபத்தில்தான் தெரிந்தது.

நான் பயம் இல்லாமல் பழகிய‌து கன்றுக்குட்டி, ஆட்டுக்குட்டி, கோழிக்குஞ்சு இவைகள் மட்டுமே. இவர்களின் கொள்ளை அழகில் மயங்கிவிடுவேன்.

கன்றுக்குட்டியும், ஆட்டுக்குட்டியும் திடீர்திடீர் என எழுந்து குதிக்க ஆரம்பித்து விடுவார்கள். கொஞ்சம் ஏமாந்தாலும் நம் கால் விரல்களைப் பதம் பார்த்துவிடுவர். கோழிக் குஞ்சுகளின் கண்களுக்கு மை தீட்டிய மாதிரியே இருக்குமே, அது மனதைக் கொள்ளைகொள்ளும்.

ஆனாலும் இவர்களின் அம்மாக்கள் இவர்களை நாம் தொடுவதைப் பார்த்துவிட்டால் தீர்ந்தோம்.

மாடு கயிறை அறுத்துக்கொண்டு முட்ட வந்துவிடும். ஆடு அந்தளவிற்கு இல்லையென்றாலும் அதுவும் கோபப்படும். கோழி சொல்லவேத் தேவையில்லை, பறந்துபறந்து அடிக்கும்.

ஆனால் இவற்றை வளர்ப்பவருடன் நாம் ஒட்டிக்கொண்டு சென்றால் ஓரளவுக்குப் பிரச்சினை இருக்காது. இதுமாதிரி நிறைய வீடுகளுக்கு படையெடுத்திருக்கிறேன்.

இப்போது இவர்கள் எல்லோரும் எங்கேயோ போய்விட்டார்கள், பார்க்கவே முடியவில்லை !

Sunday, February 1, 2015

இருவருமே வேறு வேறு !!

கோடை விடுமுறை முடிந்து இன்றுதான் பள்ளி துவங்குகிறது. இதற்கான ஆயத்தங்கள் வீடு முதல் கடை வரை ஓரிரு வாரங்களுக்கு முன்பிருந்தே களைகட்டத் தொடங்கிவிட்டன.

இனி தெரு முழுவதும் பட்டாம்பூச்சிகளாய் பள்ளிப் பிள்ளைகள் பறந்து வருவதும், போவதுமாக வண்ணமயமாகிவிடும்.

நாங்களும் இந்தக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளாமல் விட்டால் எப்படி ? எங்கள் பாப்புவிற்கும் இன்றுதான் பதினோறாம் வகுப்பிற்கான முதல்நாள்.

'அதற்குள் என் பெண் பதினோறாம் வகுப்பு படிக்கப் போகிறாளா !!' என எனக்குள் ஒரே ஆச்சரியம்.

(" வயச குறைப்பீங்கன்னு தெரியும், ஆனால் இப்படி அநியாயத்துக்கு பாப்பாவின் வகுப்பையும் சேர்த்தில்ல குறைச்சிட்டீங்க" _______ மனக்குமுறல் கே  க்  கு  து. மேற்கொண்டு படிச்சாதானே எதுக்காக குறைச்சேன்னு தெரியும் !)

எல்லா அம்மாக்களையும் போலத்தானே நானும். பிள்ளைகள் சீக்கிரமே வளர்ந்துவிட வேண்டும் என நினைப்பதும், பிறந்தநாள் & ஒரு வகுப்பிலிருந்து அடுத்த வகுப்புக்கு மாறும்போதும் வியந்து 'அதுக்குள்ளே வளந்துட்டாங்களே' என வியப்பதும் வாடிக்கைதானே.

என் பெண்ணைவிட நான்தான் அன்று அதிக சந்தோஷமாக இருந்தேன். பின்னே இருக்காதா? இனி மதிய உணவுக்கு சாப்பாடு கட்ட வேண்  டிய  தில்  லைஐஐ ! வீட்டுக்கு வந்து சாப்பிட்டுக்கொள்வதாக மகள் சொன்னதுதான் அதற்கு காரணம்.

அன்று மகள் பள்ளிக்குக் கிளம்பிச் சென்றதும், ஓடிப்போய் ஃப்ரிட்ஜில் ஏற்கனவே ஒட்டப்பட்டிருந்த சென்ற வருட‌ காகிதங்களை எல்லாம் வழித்தெடுத்துவிட்டு, சுத்தம் செய்து (வெளிப்பக்கம் மட்டும்தான்) தயாராக வைத்திருந்தேன்.


இன்று பள்ளியிலிருந்து எடுத்து வரும் முக்கியமான காகிதங்களை ஃப்ரிட்ஜில் ஒட்டிவைக்க வேண்டும். அவற்றுள் அதிமுக்கியமானது தொலைபேசி, அலைபேசி எண்களுடன் கூடிய அவளுடைய‌ தோழிகளின் பெயர்கள். ஒரு அவசரம் என்றால் உதவுமே என, இது எனக்கானது .

இதில் சில பெயர்கள் இன்று காணாமல் போயிருக்கும், சிலர் புதிதாக முளைத்திருப்பார்கள். சிலர் தொடர்ந்து இடம் பெற்றுக்கொண்டே இருப்பார்கள்.

நான் இந்த காகிதத்தை ஒட்டும்போதே ஒரு நோட்டமிடுவேன். வேறெதற்கு ? நம்ம ஊர் பிள்ளைகள் யாராவது தென்படுகிறார்களா என்பதற்குத்தான்.

இதில் என் பெண்ணிற்கு உடன்பாடில்லை. இருந்தாலும் என்னால் இந்தப் பழக்கத்தை விடமுடியாது.

இங்கே ஒவ்வொரு விளையாட்டுக்கும் ஒவ்வொரு சீஸன் உண்டு. பள்ளியில் கல்வியாண்டின் முதல் பாதியில் டென்னிஸ் விளையாடுவார்கள். இரண்டாம் பாதியில்தான் பேட்மிண்டன் ஆரம்பிக்கும். இந்த வருடமும் அப்படியே.

அந்த சமயத்தில் முதல்நாள் பேட்மிட்டன் முடிந்து வந்ததும், " அம்மா, புது தோழி கெடச்சிருக்கா, பேர்கூட ழா(ரா)ம்யா" என்றாள்.

 ழகரமும், ரகரமும் இணைந்து புதுவிதமாக இந்தப் பெயரும் காதுகளுக்கு இனிமையாகத்தான் ஒலித்தது.

" பெயரைப் பார்த்தால் ... ", என்று நான் முடிக்குமுன், "ஆமாம்ம்மா, பார்ப்பதற்கு நம்ம ஊர்(நாடு) மாதிரியேதான் இருக்கா" என்றாள்.

மகளுக்குத் தெரியும் அம்மா அடுத்து என்ன கேட்பாங்க என்று. அதனால் அவளே முந்திக்கொண்டு பதில் சொல்லிவிட்டாள்.

"ஆனால் அவளுக்கு  நம்மையும், நம் ஊரையும்,  பிடிக்காதாம்", என்றாள்.

"ஒருவேளை இங்கேயே பிறந்து வளர்ந்ததால்கூட இருக்கலாம், நாளானால் சரியாயிடும்" என்றேன். ஆனால் இது தொடர்ந்து கொண்டுதான் இருந்தது.

பிரிதொரு நாள் அவள் இலங்கை என்பதை அறிந்தேன்.

'ஒருவேளை, அங்குள்ள பிரச்சினைகளால் ஏற்பட்ட மாறாத வடுக்களால் அப்படி சொல்லியிருக்கலாம்' என்றேன். அவள் இலங்கைத் தமிழர் என்ற முடிவுக்கு நானே வந்துவிட்டேன்.

வழக்கம்போல் நாட்கள் விரைந்து ஓடியதில் மகள் பனிரெண்டாம் வகுப்புக்கு வந்துவிட்டாள். புதிய காகிதங்களுக்காக‌ மீண்டும் ஃப்ரிட்ஜின் வெளிப்பக்கம் சுத்தமாக்கப்பட்டது.

மாலையில் நாங்கள் இருவரும் அன்றைய சுவாரசியமான நிகழ்வுகளை அலசிக்கொண்டே காகிதங்களை ஒட்டினோம்.

வழக்கம்போல நானும் ஃபோன் நம்பர்கள் உள்ள காகிதத்தை நோட்டம் விட்டேன். அதில் 'ழா(ரா)ம்யா'வின் பெயர் புதிதாக முளைத்திருந்தது.

கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன். இப்போது 'பிடிக்காது' என்பதன் அர்த்தமும் விளங்கிய‌து.

அங்குள்ள கிரிக்கெட் விளையாட்டு வீரர்களின் பெயரின் கடைசி எழுத்து, அதேபோல் அங்கிருக்கும் அரசியல்   வாதிகளின் பெயரின் கடைசி எழுத்திலும் அகரம் அல்லது ஏகாரம் மிகுந்திருக்குமே அந்தப் பெயரைப் போலவே இருந்தது அப்பெண்ணின் லாஸ்ட் நேம்.

கல்லூரிக்குப் பறந்துவிட்டாலும்  இன்றளவும் இருவரின் நட்பும் தொடர்ந்துகொண்டுதான் உள்ளது.

கல்லூரி வாசத்தினால் இப்போது கொஞ்சம் மனப்பக்குவம் வந்திருக்கும் என்றே நினைக்கிறேன். வந்திருக்க வேண்டும்.

மீண்டும் நாட்கள் உருண்டோடியதில் ஒரு வருட கல்லூரி வாசம் முடிந்து மகளுக்குக் கோடை விடுமுறை வந்தது. ஊருக்குப் போனோம். அங்கே நெருங்கிய உறவில் குட்டிப் பூ ஒன்றின் வரவு எங்களை மிகவும் மகிழ்வித்தது.

நீண்ட நேரத்திற்கு குழந்தையின் அழகில் மயங்கியும், பேச்சு சுவாரசியத்தில் மூழ்கியும் இருந்த நான் நினைவு மீண்டு,  "பாப்பாவுக்கு என்ன பேர் வச்சிருக்கீங்க?", என்றேன்.

"ரம்யா" என்றார் குழந்தையின் அம்மா.

ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஒருசேரக் கண்களில் தேக்கியவாறு மகளைப் பார்த்து முறுவலித்தேன்.

புரிந்துகொண்டவளாய் "அம்ம்ம்மா, that's okay, இவள் ரம்யா, அவள் ழா(ரா)ம்யா," என்றாள் மகள்.

வீட்டில் ஃப்ரிட்ஜின்மேல் ஒட்டியிருந்த‌ காகிதம்,  'அவர்களால் உச்சரிக்க முடியாமல்தானே ரம்யா, ழா(ரா)ம்யாவானாள்' என‌ மனக் காற்றில் அசைந்தாடி காட்டிக்கொண்டிருந்தது.

Monday, January 19, 2015

ரோ ஜா, ரோ ஜா ..... !!


மேலேயுள்ள இரண்டு பூக்களும் வீட்டுக்கார‌ரிடமிருந்து கடன் வாங்கியவை !

முன்பெல்லாம் பூக்களை அப்படியே நேராக‌ எடுப்பேன். இப்போது பக்கத்திலிருப்பவரைக் காப்பியடித்து(பள்ளிப் பழக்கம் போகமாட்டிங்கிது), கொஞ்சம் பக்கவாட்டிலிருந்தும் எடுக்கக் கற்றுக்கொண்டேன்.  ஹா ஹா, எவ்ளோ அழகா வந்திருக்கு !!

                                                 பூவிலிருந்து மேலெழும் தேனீ !


                            நானும், அலைபேசியும் சேர்ந்து ஏற்படுத்திய 'பூ கிரகணம்' !!

                                               முழுவதுமாகப் பூத்துவிட்ட பூக்கள் !


 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வெயில் இப்போதான் கொஞ்சம் எட்டிப்பாக்குது, ஒரு 'வாக்' போயிட்டு வந்திடுறேன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Wednesday, January 14, 2015

பொங்கல் வாழ்த்து !


உங்கள் அனைவருக்கும் இனிய, மனம் நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள் !!

அப்பா வாங்கி வரும் பொங்கல் வாழ்த்துக்களைப் பங்குபோட்டு எடுத்து, வீட்டிலேயே இருக்கும் சகோதர சகோதரிகளுக்கும், பக்கத்து வீட்டில் இருக்கும் தாய்மாமாவுக்கும், எதிர் வீட்டிலிருக்கும் சித்தப்பா பிள்ளைகளுக்கும், உடன் படிக்கும் தோழிகளுக்கும் அவரவ‌ர்களின் முகவரியை எழுதி, ஸ்டாம்ப் ஒட்டி அனுப்பிவிட்டு, அவர்களிடமிருந்து நமக்காக வரும் வாழ்த்துக்களைப் பெற்றுக்கொள்ள, தபால்காரர் வரும் நேரத்திற்கு வாசலிலேயேக் காத்திருந்து மகிழ்ந்தது ஒருகாலம்.

இப்போது வலைப்பூ மூலமாக உங்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை சொல்வதிலும் ஒரு மகிழ்ச்சி. 

பொங்குக, பொங்கலோ பொங்கல் !!

Monday, January 5, 2015

தேங்காய் படுத்திய பாடு !


"அங்கு மண்ணெல்லாம் எப்படி இருக்கு?,என்னென்ன மரம் செடிகளைப் பார்க்க முடிகிறது?, என்னென்ன பறவைகள் & விலங்குகள் இருக்கின்றன‌? " என்று ஏதோ இயற்கை சூழலை ஆராய்ச்சி செய்ய வீட்டுக்காரர் அமெரிக்கா போனதுபோல் இது மாதிரியான கேள்விகளைத்தான் முதலில் கேட்டு வைத்தேன்.

அவரிடமிருந்து எல்லாவற்றுக்கும் ஒரே பதில்தான், "வந்து பாக்கதான போற", என்பதுதான் அது.

என‌க்கோ வெளிநாடு என்பதைப் பற்றி ஒரு ஐடியாவும் கிடையாது. நெருங்கிய உறவினரில் யாராவது போய் இருந்தால்தானே தெரிந்துகொள்வதற்கு.

ஒரு நல்ல நாளில் இங்கு வந்தாச்சு. மரம், செடி, கொடிகளைத் தவிர மற்றவற்றை பார்ப்பது சிரமமாய் இருந்தது.

வீட்டிலிருந்த ஆளுயர ஃப்ரிட்ஜில் என்ன இருக்கும் எனும் ஆவலில் திறந்து பார்த்தால் ராட்சஸ சைஸில் கோஸ், காலிஃப்ளவர், சிவப்பு, மஞ்சள், வெள்ளை நிற பெரிய வெங்காயங்கள் போன்றவை ஆக்கிரமித்திருந்தன.

விலை அதிகம் என்பதாலோ அல்லது அதிலிருந்து ஒரு வாசனை வரும் என்பதாலோ அல்லது அதை சமைக்கவே தெரியாது என்பதாலோ என்னவோ எங்க‌ அம்மா காலிஃப்ளவரை சமைத்ததேயில்லை. மேலும் அதில் 'புழு' வேறு இருக்கும் என்று சொல்லிக் கேள்விப்பட்டிருந்ததால் அதைத் தொடவே பயம்.

வந்த ஒன்றிரண்டு நாட்களிலேயே பக்கத்தில் இருந்த ஒரு கடைக்குப் போனோம். கடையின் பெயரைப் பார்த்ததும் ( Albertsons ) son க்கு முன்னால் '&' போடாமல் விட்டிருக்கிறார்களே என்று நினைத்துக்கொண்டேன்.

அடுத்த நாள் safeway ( நினைத்ததென்னவோ sefe ) போகலாம் என்றார். ஸ்பெல்லிங்கைக் கேட்டுத் தெரிந்துகொண்டு , "இப்படி கூடவா பேர் வைப்பாங்க !" என மனதில் எண்ணம்.

இவரைக் கேட்டாலோ, "ஏதோ தெரியாம‌ வச்சிட்டாங்க, மன்னிச்சு விட்டுடு " என்பார்.

இதுவரை வெங்கடேஸ்வரா மளிகை ஸ்டோர், முரளி & சன்ஸ் ஆயில் மில், மீனா மெடிக்கல் இப்படியான பெயர்களையேப் பார்த்துப் பழகிய என‌க்கு இதெல்லாம் புதிதாகவே இருந்தன.

அதேபோல் எந்தக் கடையில் பார்த்தாலும் காய்கள் பலநாள் குளிரில் அடிபட்டு வாடி வதங்கிப்போய் இருந்ததே தவிர ஃப்ரெஷ்ஷாக எதுவுமில்லை. தேங்காயைத் தேடிப் பார்த்தால் கிடைக்கவேயில்லை.(இப்போது இது எல்லாக் கடைகளிலும் கிடைக்கிறது)

ஊரில் இருந்தவரை தினமும் தேங்காய் சேர்க்காமல் சமையல் இல்லை என்பதால், "தேங்காய் வேணும், எங்கு கிடைக்கும் ?" என்றேன்.

"கோகனட் ஹில் போனால் கிடைக்கும், சனிக்கிழமை போகலாம்", என்றார்.

நாங்கள் இருக்கும் ஊரைச் சுற்றிலும் தூரத்தில் மலைகள் இருப்பது தெரியும் என்பதால் அங்குள்ள ஏதோ ஒரு மலையில்தான் இந்த 'கோகனட் ஹில்' இருக்க வேண்டும். அப்படி போனால் "நிறைய இளநீரும், தேங்காய்களும் வாங்கி வர வேண்டும்" என எண்ணினேன்.

இவரிடமிருந்து எந்த  விவரமும் கிடைக்கப் போவதில்லை என்பதால் அமைதி காத்தேன்.

சனிக்கிழமை காலையும் வந்தது. 'கோகனட் ஹில்'லுக்கும் கிளம்பியாச்சு. கிளம்பிய சில நிமிடங்களிலேயே சில கடைகள் இருந்த வளாகத்திற்குள் வண்டி நின்றது.

"இறங்கி வா போகலாம்" என்றார் இவர்.

"ஓ, ஒருவேளை அதற்கான நுழைவுச் சீட்டை இங்குதான் வாங்க வேண்டுமோ" என எண்ணிக்கொண்டே உள்ளே நுழையும் முன் மேலே எழுதியிருந்த கடையின் பெயரைப் பார்த்துவிட்டேன்.  "Coconut Hill" என்றிருந்தது. அட‌, இது நம்ம ஊர் கடை ! கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. அதிலிருந்து பெயரை வைத்து எடைபோட மறந்தேன்.

அதன்பிறகு சில மாதங்களில் நம்ம ஊர் பெண் ஒருவர் அறிமுகமானார். அவர் இங்கு வந்து ஒன்றிரண்டு வாரங்களே ஆகியிருந்தன. இரண்டொரு நாளில் நெருங்கிய‌ தோழிகளாகிவிட்டோம்.

ஒரே குடியிருப்பு வளாகம் என்பதால் அடிக்கடி சந்தித்துக்கொள்வோம்.

"எந்த ஊர்?, எங்க இருக்கீங்க? " என்ற முக்கியமான கேள்விகளுக்குப் பின் அதி முக்கிய கேள்வியான "இன்னைக்கு உங்க வீட்ல என்ன சமையல் ? " என்ற கேள்வி பிறந்தது.

அவர் ஏதோ ஒரு குழம்பைச் சொன்னார். நான் பதிலுக்கு "வாழைப்பூ & முருங்கைக் கீரை சாம்பார்" என்றேன்.

அவர் ஆச்சரியமாகி "வாழைப் பூ, முருங்கைக் கீரை எல்லாம்கூட‌ இங்கு கிடைக்குதா? எங்கு வாங்கினீங்க? " என்றார்.

நான் எதேச்சையாக "கோகனட் ஹில் போய் வாங்கி வந்தேன்" என்றேன்.

அவரோ "இங்கு ஃப்ரெஷ் கோகனட்டே கிடைக்காதாமே. ஆனா நீங்க கோகனட் ஹில் போய் வாங்கி வந்தேன்னு சொல்றீங்க. அது எங்கிருக்கு? இங்கிருந்து எவ்வளவு தூரம்?" என்றார் ஆவலாக.

"ஆஹா, நம்மை மாதிரியே ஒரு ஆள் கிடைசிருக்காங்க, இவங்கள லேசுல விட்டுடக் கூடாது" என உள்ளே உறங்கிக்கொண்டிருந்த மன‌ பூதம் எதிரில் வந்து நாட்டியமாடியது.,

நாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து நடந்து போகும் தூரம்தான். ஆனாலும் "யான் பெற்ற இன்பத்தை நீயும் பெற வேண்டாமா" என்ற நல்ல்ல்ல எண்ணத்தில், "நானும் உங்கள மாதிரிதானே புதுசா வந்திருக்கேன், இடமெல்லாம் சரியா தெரியல, கண்டிப்பா உங்க வீட்டுக்காரருக்குத் தெரிஞ்சிருக்கும், வந்ததும் கேட்டுட்டு சொல்லுங்க‌", என்றேன்.

மாலை நெருங்க நெருங்க கண்டிப்பாக அந்தத் தோழியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வரும் என‌ எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.

நினைத்த மாதிரியே தொலைபேசி அழைக்கவும் எண்ணைப் பார்த்துத் தெரிந்துகொண்டேன் அந்தத் தோழியின் அழைப்புதானென்று.

அவரின் செல்லக் கோபத்தைத் தெரிந்து கொள்ளும் ஆவலில் விரைந்து அழுத்தினேன் talk பட்டனை.