Saturday, September 3, 2016

டீ கடை டீ க்ளாஸ் !


நாம் ஊரில் ரசித்து, சுவைத்த சிலவற்றை வெளியூரில் மிஸ் பண்ணுவோம். அதுமாதிரி நான் பெரிய அளவில் மிஸ் பண்ணியது டீ'கடை டீ :)

வீட்டில் எத்தனை விதமான கப்புகளில் டீ குடித்தாலும், கடையிலிருந்து வாங்கிக் குடிக்கும் டீ'கடை க்ளாஸ் 'டீ' மாதிரி வராதுதானே. என்னதான் சுத்தத்தைப் பற்றி யோசித்தாலும் ஒன்றும் வேலைக்காகாது.

டீ கடைகளில் Tea glass போயி ப்ளாஸ்டிக் கப்புகள் வந்து ..... இப்போது எப்படி எனத் தெரியவில்லை ...... இன்னமும் அந்த tea glass டீ'தான் பிடிக்கிற‌து.

Tea glass ஐ கையில் பிடிக்கும்போது தெரியாத சூடு, குடிக்கும்போதுதான் தெரியும் ....  டீ எவ்வளவு சூடாக இருக்கிறதென.

Glass ல் கொஞ்சமே கொஞ்சம்தான் டீ இருக்கும், ஆனால் பார்ப்பதற்கு நிறைய இருப்பதாகத் தெரியும்.

காஃபி மட்டுமே குடித்த எனக்கு இந்த டீ பழக்கம் இடையில் வந்து ஒட்டிக்கொண்டதுதான்.

முன்பு இங்கிருந்து எப்போது ஊருக்குப் போனாலும் பெரிய லிஸ்ட் ஒன்று போடுவேன். அந்த லிஸ்டில் கட்டாயம் டீ'கடை டீயும் இருக்கும்.

என்னவொன்று, இப்போதெல்லாம் ஏனோ அந்த பழைய சுவை கிடைப்ப‌தில்லை. அல்லது எனக்கு சுவை மாறிவிட்டதா எனத் தெரியவில்லை.

நிச்சயமா எனக்குத்தான்(நட்பூ ஒருவருக்கும் :) ) மாறியிருக்க வேண்டும். இல்லையென்றால் உடன் வருவோர், " நல்லாத்தானே இருக்கு" என குடிக்கமாட்டார்களே !

ஒன்று பால் காயாத மாதிரியே இருக்கும்.

இல்லாவிட்டால் டீ தூள் சரியாகக் கொதிக்காமல் போட்டதுபோல் டீ தூள் வாசம் வரும்.

கால் சர்க்கரை போட்டுக் கொடுக்கச்சொல்லிக் கேட்டாலும் ஒன்றரை சர்க்கரை அளவில் போட்டுக் கொடுத்து ...... வெறுத்துவிட்டது.

உறவுகளும் அப்படியே.

பால் பொங்கி வந்ததும், டீ தூளைப் போட்டு, சுடு தண்ணீர் காலில் கொட்டியதுபோல் பட‌க்கென அடுப்பிலிருந்து இறக்கி ...... பால் வாசமும் டீதூள் வாசமும் போட்டி போட்டு வெறுப்பேற்றும்.

எங்க அம்மா யார் காதிலும் விழாதவாறு, " புது பால்ல போட்டுக் குடுக்கறது உனக்குப் பிடிக்காதுதான், என்ன பண்றது, ஒரு வாரத்துக்கு ஐஸ்'ல‌ வச்சி குடிச்சு பழகிட்ட"னு சொல்லுவாங்க‌ :))

"சரி, நீயே போட்டுக்கிட்டா என்ன?" என்பதுதானே உங்க கேள்வி :)

ஹா ஹா ஹா :))) 'சிலிண்டரில் உள்ள gas முழுவதையும் காலி பண்றாளோ' என்ற பார்வை வரும்.

எனக்கு டீ 10 to 15 நிமிடங்களுக்காவது கொதிக்க வேண்டும்.

ஆ ஆங் .... குறை சொல்லும் ஆர்வத்தில் சொல்ல வந்ததையே மறந்துட்டேனே !

இங்கு வந்த புதிதில், 'சரி நாமே வீட்டில் டீ'கடை டீயைப்போட்டுக் குடிக்கலாம்' என எண்ணி tea glass தேட ஆரம்பித்தேன். ப்ளாஸ்டிக்கில்தான் கிடைத்தது. அதையும் வாங்கிவந்தேன்.

சூடாக டீயை அதில் ஊற்றியதும் கரகர என ஒரு சத்தம். கீறல் விட்டுக்கொண்டிருந்தது.

ஜில்'லுனு ஜூஸ் ஊற்ற வேண்டியதில், சூடான டீயை ஊற்றினால்?    :)))))

கடைக்குப் போனால் தவறாமல் tea glass மாதிரியே ஏதாவது இருக்கானு தேடுவேன்.

சில‌ வருடங்களுக்குப் பிறகு 2006 ல் ஒரு பெரீஈஈஈய கடைக்கு வேறு ஏதோ ஒன்றை வாங்கப்போய் glassware இருக்கும் செஷனில் கண்ணாடியால் ஆன சாமான்களை 'ஆ' என வாயைப் பிளந்து பார்த்துக்கொண்டே வரும்போது இந்த கண்ணாடி டம்ளர்களைப் பார்த்து, ஆச்சர்யமாகி ஒவ்வொன்றும் $ 1:99 என இரண்டு க்ளாஸ்களை வாங்கிக்கொண்டு வந்து டீ போட்டுக் குடித்த பிறகுதான் பூர்வ ஜென்ம புண்ணியம் கிடைத்தது.

Iced tea glass ஐ hot tea glass ஆக மாற்றிய பெருமை என்னையே சாரும்.

காஃபியோ அல்லது டீயோ இந்த glassல்தான் குடிப்பேன். கால் டம்ளர் என்றாலும் பாதி க்ளாஸ் நிறைந்துவிடும். அரை டம்ளர் என்றால் சொல்லவேத் தேவையில்லை, நுரையுடன் முழு க்ளாஸ் ஆகிவிடும்.

இதனால் டீ, காபி கொஞ்சமாத்தானே இருக்கு என்ற‌ நினைவே வராது.

நல்ல கெட்டியா இருக்குறதால‌ கீழே விழுந்தாலும் உடைவது கடினம். இது வரைக்கும் எனது கவனக் குறைவினால் ஒரு க்ளாஸ் மட்டுமே உடைந்திருக்கிற‌து.

இதன் தற்போதைய விலை $2:99


உங்களில் யாருக்காவது இந்த டீ கடை glass ல் டீ குடிக்கணும்னு ஆசையா ? விற்கும் கடையின் பெயரைத் தெரிந்துகொள்ள ஆவலா ?

தொடர்பு கொள்ளவும்  chitrasundars blog கிற்கு  :)))

Tuesday, August 9, 2016

குரு பார்வை !


கோடை விடுமுறையில்(ஜூன் முதல் வாரம்) மகள் வருவதற்கு விமான‌ டிக்கெட் புக் பண்ணியதுமே இதுவரை பிடிக்காமல் இருந்த இந்த வீடு கொஞ்சம் அழகானதுபோல் தோன்றியது.

இன்னும் இரண்டு மாதங்களில் குரு பெயர்ச்சி வருதுன்னு சொல்றாங்களே, ஒருவேளை நம்ம ராசியை(?) குரு பார்க்கப் போகிறாரோ ! அதனால்தான் திடீரென இந்த வீடு பிடிக்கிறதோ !

இதுவரை கொஞ்சம் மூடினாற் போலவே கிடந்த ஜன்னல்கள், கதவுகள் திறக்கப்பட்டதும் ...... வீட்டிற்குள் நல்ல வெளிச்சம் ! நிச்சயம் இது குரு பார்வை வரப்போவதற்கான அறிகுறிக‌ள்தான்.

முன்பு எப்போதோ(மார்ச் ?) ஒருமுறை 'வாக்' போகும்போது வழியில் பார்த்து 'ஹாய்' சொன்ன நம்ம ஊர் தோழியை இரண்டு வாரங்களுக்குமுன் மீண்டும் வழியில் சந்திக்க நேர்ந்தது.

வீட்டிற்கு வருமாறு அழைப்பு. நான்தான் தயங்கினேன். காரணம் அவருடன் துறுதுறுவென வந்திருந்த வளர்ப்பு செல்லம்.

நான் அழைக்கவில்லை. குற்றவுணர்ச்சிதான், வேறு வழியில்லை.

வழியில் பார்கும்போதே பயம். வீட்டுக்குப் போனால் ? அல்லது வீட்டுக்கு வந்துவிட்டால் ?

அடுத்த நாளே மீண்டும் வழியில் சந்திப்பு.

"நீங்க தினமும் வாக் போறீங்கன்னா நானும் வருகிறேனே" என்றார்.

தோழிகளுடன் 'வாக்' போயி பல வருடங்களாகிவிட்டது. எப்போதாவது ஒரு சமயம்தான் இது மாதிரியெல்லாம் வாய்க்கும்.

நான் சொல்லலை ? ஆகஸ்ட் 2 அருகில் வந்துவிட்டதே !

சென்ற வாரம் திங்கள் கிழமை 'வாக்' போகும்போதே வழியில் இருக்கும் அவரது வீட்டிற்கு, "அதெல்லாம் பார்த்துக்கலாம் வாங்க'னு அழைத்துச் சென்றுவிட்டார்.

அவர் வீட்டு செல்லம் புதியவர் வருகையால் குஷியாகி என்னிடம் வரவும், என் வள்ளல் தெரிந்தபடியால், "வேண்டாம்" என்று தோழி சொன்னதும் என்கிட்டே வரவேயில்லை .

'அப்பாடா' என்றிருந்தது.

நானும் பயந்துநடுங்கி ஒரு வழியாக ஓடியே வந்துவிட்டேன்.

ஏனோ தெரியவில்லை, அடுத்த நாள் 'வாக்' முடிந்து நானும் அவர் வீட்டுக்குப் போனேன்.

இன்று செல்லம் என்ன நினைத்ததோ தெரியவில்லை, என்னைப் பார்த்ததும் தலையை உள்ளே இழுத்துக்கொண்டது.

வெட்கமா ? அல்லது என் நல்ல்ல்ல மனம் அதற்குத் தெரிந்துவிட்டதா ?

"வெளில வா, உன்னைப் பார்க்கணுமாம், யார் வந்திருக்காங்க பாரு ?" என்றார்.

ம்ஹூம் ....

தோழி உள்ளே போய் அழைத்து வந்தார்.

தைரியத்தை வரவழைத்துக்கொண்டு நான் அதைத் தடவி விடவும் என் பக்கம் வந்து ஒட்டிக்கொண்டது.

இங்கே, "விலங்குகளோடு பழக்கமில்லாதவர்கள் அவற்றின் கண்ணோடு கண் பார்க்கக் கூடாது" என்ற கீதாவின் வரிகள் நினைவுக்கு வந்தாலும் ....... தவிர்க்க‌ முடியவில்லை.

என்னையே என்னால் நம்ப முடியவில்லை. மனதினுள் அவ்வளவு சந்தோஷம் !

யாரிடமாவது இதைச் சொல்ல வேண்டாமா ?

வீட்டுக்காரர் ?

இந்த ஒரு விஷயத்தில்தான் எங்களுக்குள் ஏகத்துக்கும் ஒற்றுமை. அதைக் கெடுத்துக்கொள்ள வேண்டாமென என் பெண்ணிடம் சொன்னேன்.

ஏற்கனவே "நாய் & பூனை adopt பண்ணி இருவருக்கு லைஃப் கொடு" என என்னை ப்ரெய்ன் வாஷ்  செய்துகொண்டிருப்பவள் ஆச்சரியப்பட்டு, "பேர் என்ன வச்சிருக்காங்க ?" என்றாள்.

"குரு" என்றேன்.

"அப்படின்னா உனக்கு குரு பார்வ கெடச்சிடுச்சுனு சொல்லு " என்றாள் :)))

Thursday, July 28, 2016

சித்ரா'ஸ் குக்கிங் ஸ்கூல் _ தொடர்ச்சி !

சித்ரா'ஸ் குக்கிங் ஸ்கூலுக்குக் கூவிக்கூவி அழைத்தும், கட்டணத்தைக் காரணம் காட்டி யாருமே எட்டிப் பார்க்காத‌ சூழலில், இழுத்து மூடுவதைத் தவிர வேறென்ன செய்ய முடியும் ?

சோகத்துடன் மூடப்போகும்  தருணத்தில் எலி ஒன்று, வந்து, வசமாக சிக்கியது மகள் வடிவத்தில்.

"அம்ம்ம்மா, ஈஸியா இருக்கணும், அதே நேரத்துல‌ சுவையாவும் இருக்கணும், அது மாதிரி ஏதாவது ரெஸிபி இருந்தா லீவுல‌ சொல்லிக்குடும்மா " என்றாள் லீவுக்கு வருமுன்னமே.

ஆறு மாதங்கள் வீட்டுப்பக்கம் தலை காட்டாததன் விளைவு இது.

எளிமையான‌ சிலவற்றை வரிசையாக  லிஸ்ட் போட்டோம்.

சாம்பார் _ வேண்டாம் ! பருப்பு வேகவச்சு, காய் கட் பண்ணி .... நானே வேண்டாம்னு சொல்லிட்டேன்.

ரிஜெக்ட் ஆன லிஸ்டில் புளிக்குழம்பு, குருமா, கீரை எல்லாம் இருந்தன.

லிஸ்டில் முதலாவதாக எலுமிச்சை சாதம், உருளைக்கிழங்கு பொரியல், முட்டை இவை மூன்றும் இடம் பிடித்த‌ன.

மகள் சொன்னாள், " அம்மா, நீ ஒரு சூப் வப்பியே, சூப்பரா இருக்குமே, அத கத்துக்கிறேனே" என்றாள்.

நானாவது சூப் வைப்பதாவது ?

"முறுங்க கீரை தண்ணி சாறு வைப்பேனே ...... அத சொல்றியா, நீ இருக்கும் ஊர்ல அது கிடைக்காது. இன்னும் கொஞ்சம் நாள் போகட்டும், இப்போதானே லயா வீட்ல செடி வாங்கி வச்சிருக்காங்க‌, அது    வளர்ந்ந்ந்து ...... கீர பறிக்க ......... எவ்ளோஓஓ நாளாகுமோ,  அப்போ பார்த்துக்கலாம்" என்றேன்.

"அது இல்லம்மா, அதுல கீர எதுவுமே இருக்காது, கொஞ்சம் ப்ரௌன் கலர்ல இருக்குமே, சூப்பராவும் இருக்குமே, அது" என்றாள்.

நெஜமாவே எனக்கு என்னன்னு புரியல, விட்டுட்டேன்

விடுமுறையில் வீட்டுக்கு வந்து சாப்பிடும்போது சாம்பார் முடிந்து ரசம் ஊற்றியதும்,  "இதேதான், இததான் நான் சூப்னு சொன்னேன்" என்றாள்.

இப்போ லிஸ்ட்ல ரசமும் சேர்ந்துகொண்டது.

நல்ல நாள் பார்த்து kitchen boot campஐ ஆரம்பிச்சாச்சு.

முதல் இரண்டு நாட்கள் 'இதை எடு, அதை வை' என ஒரே மிரட்டல்தான் :)) சரியா செய்யாட்டி push ups, sit ups என பனீஷ்மெண்ட்டுடன் முடிந்தது .

எலுமிச்சை சாதம் எந்தவித‌ப் பிரச்சினையும் இல்லாமல் வந்துவிட்டது. முட்டையும் எளிதோ எளிதாகிவிட்டது.

உருளைக்கிழங்கு ? கைவிட்டாச்சு !

ரசம் கற்றுக்கொண்டு mid term testம் வைத்து, finalம் முடிந்துவிட்டது.

ஆனாலும் 'பூச்சி மாதிரி இருக்கு'னு புளியைக் கரைக்காமலும், தக்காளி பிடிக்காது என்பதால் அதைப் பிழியாமல் பொடியாக நறுக்கிப் போட்டதாலும் மதிப்பெண்கள் கொஞ்சம் குறைந்துதான் போனது.

இருந்தாலும் கொத்துமல்லி விதை, மிளகு & சீரகம் இவற்றை வறுத்துப் பொடிப்பதை "ஸோ இண்ட்ரஸ்டிங்", "ரசம் வைப்பதிலேயே இதுதான் ஃபன் பார்ட்" என சொன்னதால் A + கொடுத்தாச்சு.

விடுதிக்குப்போய்  தக்காளியை நறுக்கியோ, புளியைக் கரைக்காமலோ ரசம் வைப்பதும் வைக்காததும் இனி அவள்பாடு, அதை ருசிக்கப் போகும் அவளின் தோழிகள் பாடு  !!

கடைசியாகக் கிடைத்த தகவலின்படி சூப்பர் ரசம் வைத்து சாப்பிட்டதாக படத்துடன் வாட்ஸ் அப் சொன்னது.

பார்த்தீங்களா ?  சக்தி, சக்தி இல்லாட்டி ஆச்சி,  மெட்ராஸ், ஆனந்த் என போகாமல் தினமும் ரசத்துக்குப் பொடிப்பதை ஃபன் பார்ட்டா நெனச்சுக் கத்துப்பீங்க‌.

அடுத்த வகுப்புகள் ஆரம்பிக்க இன்னும் சில நாள்களே உள்ளன. Summer  சலுகையும் உண்டு. உஷாராகி உடனே பதிஞ்சுக்கோங்க :))))

Sunday, July 24, 2016

மஞ்சள் செம்பருத்தி !



என்னமோ தெரியல, திடீர்னு மஞ்சள் நிறப் பூச்செடி வாங்க வேணும்போல் தோனியது. இரண்டு வாரங்களுக்குமுன் கடைக்குப் போனேன், துளுக்கு சாமந்தி ஈர்த்தது. ஆனாலும் வாங்கிவந்து நிழலில் வைத்து காயவைக்க வேணுமா ? பாவம், அது கடையிலேயே இருந்துவிட்டுப் போகட்டும் என வந்துவிட்டேன்.

கடையிலயுமே சரியா தண்ணி விடாம செடிகள் வாடிப்போய் இருந்தன. அதன் பிறகு அந்தக்கடை பக்கமே தலை காட்டல! நிறைய மல்லிச்செடிகள் வந்திருந்தது. சிவப்பு நிறத்திலேயே கொஞ்சம்கொஞ்சம் நிறம் மாறினாற்போல் செம்பருத்தி செடிகளும் இருந்தன.

நேற்று 'ட்ரேடர் ஜோஸ்' போனபோது சிவப்பு நிற செம்பருத்தி செடிகளுடன் இந்த மஞ்சள் நிற செம்பருத்தி செடியும் (நிறைய மொட்டுக்களுடன்) இருந்தது. ஏதோ தைரியத்தில் வாங்கி வந்துவிட்டேன்.

எல்லாம் சென்ற வாரம் செக்கிங்'கு வந்த  Apt mgmt ppl, தொட்டிச் செடிகளை வேலியின்மேல் வைத்துக்கொள்ள பச்சைக்கொடி காட்டியதால் வந்த தைரியத்தில்தான்.

காலையில் ஒரு ஐந்து நிமி இடது பக்கமும், மாலையில் ஒரு ஐந்து நிமி வலது பக்கமுமாக வெயில் வரும். இதில் (ஏதோ)பாதுகாப்பு கருதி(யாம்), இடது பக்கம் மட்டுமே வைக்க அனுமதி.

                                         இன்று அதிகாலையில் ஒரு பூ பூக்கத் தொடங்கியது.

                    வாக் போயிட்டு 8 மணிக்கெல்லாம் வந்து பார்த்தால் நன்றாகப் பூத்திருந்தது.

                                        10 மணி வாக்கில் மற்றொன்றும் பூத்துவிட்டது :))
இந்த ரெண்டு பூக்களையும்தான் வளைச்சுவளைச்சு படம் எடுத்து வச்சிருக்கேன் ! இனிமேல் பூப்பதையும் இங்கேயே கொண்டுவந்துவிடுவேன்.

நாள் முழுவதும் பார்த்துக்கொண்டிருந்தாலும் ஆசை தீரவில்லை, மஞ்சளும், இளஞ்சிவப்பும் கலந்து .... அவ்வ்வ்வளவு அழகு !!

Wednesday, July 13, 2016

Pokémon Go !

என் பெண்ணிற்கு விடுமுறை என்றால் அது விடுமுறைதான். அவசியம் என்றால் தவிர வீட்டை விட்டு வெளியே வரமாட்டாள்.

அதெல்லாம் அப்போ ! அப்படின்னா இப்போ ???

கடந்த சில தினங்களாக காலையில் நானே மறந்தாலும் நினைவுபடுத்தி என்னை நடைப்பயிற்சிக்கு அழைத்து செல்கிறாள். அதுவும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தெரு வழியாக.

இந்த வார இறுதியில் அதிசயமாக எங்களுடன் பூங்காவிற்கு வந்தாள். கடைகளுக்கும் விஜயம் த‌ந்தாள்.

மாதத்தில் ஓரிரண்டு முறை சந்தித்துக்கொள்ளவே சிரமப்படும் என் பெண்ணும் அவளின் தோழிகளும் இந்த வாரத்தில் மட்டுமே இரண்டுமுறை சந்தித்துக்கொண்டார்கள்.

இன்று 'நூலகம் செல்லலாம்' என்றாள்.

'அடடே புத்தகங்களின் மேல் என்ன ஒரு ஈர்ப்பு' என வியந்து(போனேன்) போனேன். நூலகத்தை அலசு அலசு என அலசிவிட்டு,  'நூலகத்தின் பின்னால் இருக்கும் பூங்காவுக்குப் போகலாம்' என சொல்லி ஆச்சரியப்படுத்தினாள்.

வழக்கத்துக்கு மாறாக அங்கோ ஏகத்துக்கும் கூட்டம். 'பின்னே இருக்காதா ? பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையாச்சே' அப்படின்னுதானே நினைக்கத் தோன்றும் !! ஹா ஹா ஹா :))))

எல்லாம் இவளைப் போலவே மேனிலை & கல்லூரிப் பிள்ளைகள் தனித்தனியாகவும், குழுகுழுவாகவும் தங்கள் அலைபேசியுடன் சுற்றித் திரிந்தனர்.

வேறெதெற்கு ? Pokémonகளை  catch பண்ணத்தான்.

எங்கெங்கோ வெளி மாநிலங்களில் இருக்கும் தோழிகளுக்குள், " நீ எவ்வளவு போக்கிமான்களைப் பிடிச்சிருக்க, எந்த நிற டீம்ல நீ இருக்க ? "என்றெல்லாம் கேள்விகள் பறக்கினறன.

வீட்டிலே இருந்தாலும் Couch Potatoவாக இல்லாமல் இங்கும் அங்குமாக‌ நடந்துகொண்டே இருப்பதுவும் நன்றாகத்தான் இருக்கிறது.

பிள்ளைகள் வீட்டை விட்டு வெளியில் வந்தது ஆரோக்கியமானதே என்றபோதிலும், எங்கெல்லாம் போவது பாதுகாப்பு, எங்கெல்லாம் போகக் கூடாது என்ற அறிவுரைகளுடன்  உள்ளூர் & உலக செய்திகளில் தினமும் இந்த விளையாட்டை விளையாடுபவர்களைப் பற்றிய செய்தி தவறாமல் இடம் பிடித்துவிடுகிறது.

என் அலைபேசியை நான் தொட்டாலே "நீயும் ஆரம்பிச்சிட்டியா, இன்னிக்கு நீ எத்தனை Pokémonகளைப் பிடிச்ச‌ " என்ற கேள்வி என் வீட்டிலிருந்தே என்னை நோக்கி வருகிறது.

இதனால் சாதாரணமாகத் தெரிந்த அலைபேசி, இப்போது அதை யார் நடந்துகொண்டே பயன்படுத்தினாலும் 'போக்கிமான் கேம் விளையாடுறாங்களோ" என்றே நினைக்கத் தோன்றுகிறது.

ஹலோஓஓ !! அலைபேசியோட எங்க கெளம்பிட்டீங்க ??

ஹா ஹா .....இப்போ உங்களுக்கும் 'Pokémon Go' fever வந்துடுச்சா :))))